Sunday, February 8, 2026

டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ மெயின்ஸ் தேர்வு ரத்து

TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் ரத்து.. 

 தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன,

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், "சென்னையில் இன்று 08.022026 நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப்-II (மற்றும்) IIA பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு(Hall Ticket) விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail) மூலம் தகவல் அளிக்கப்படும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய மாணவர் ஒருவர், "எங்களுக்கு அரும்பாக்கத்தில்தான் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. பொதுவாக 9 மணிக்கு தேர்வர்கள் அனைவரும் தேர்வு மையத்திற்குள் சென்றுவிட வேண்டும். 9.15க்கு முன்கதவை அடைத்து விடுவார்கள். பின்னர் 9.30க்கு சரியாக தேர்வு தொடங்கிவிடும். தேர்வு மையத்திற்குள் நுழைந்தவுடனேயே அங்கு எந்தெந்த வரிசை எண்கள் எந்தெந்த அறைகளில் உள்ளது என்று தெளிவாக அறிக்கைகள் ஒட்டப்பட்டிருக்கும். அதேபோல தேர்வு கட்டுப்பாட்டாளர்களும் உதவுவார்கள். ஆனால் இன்று உள்ளே இரண்டு இடங்களில் மட்டுமே தேர்வறை குறித்தான அறிக்கை ஒட்டப்பட்டிருந்தது. வழிகாட்டுவதற்கும் யாரும் இல்லை." என்று கூறினார்.

தங்களுக்கு நுழைவுச் சீட்டில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட போதும், மையத்தில் தங்கள் எண் குறிப்பிடப்படவில்லை என கூறும் அந்த மாணவர், தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதை தான் உணர்ந்ததாக கூறுகிறார். தன்னைப் போன்றே வேறு சில மாணவர்களுக்கும் தேர்வு எழுத முடியாத நிலையில் இருந்ததை குறிப்பிட்டார்.

மேலும் "நாங்கள் அங்கிருந்து வெளியேறி சாலை மறியலில் ஈடுபடலாம் என முடிவெடுத்தபோது காவல்துறை வாகனம் உள்ளே வந்தது. நிறைய காவலர்களும் தேர்வு மையத்திற்கு வந்தனர். அந்த மையத்தில் எண்கள் ஒதுக்கப்பட்டிருந்தவர்கள் மட்டும் உள்ளே தேர்வெழுத தயாராக அவரவர் அறையில் இருந்தனர். ஆனால் மைக்கில் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனால் நாங்கள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டோம்." என்றார்.

காவல் துறையினர் அதிகளவில் இருந்ததாக கூறும் அந்த மாணவர், கூட்டமாக இருந்ததால் உள்ளே யார் வந்தார்கள் , யார் மைக்கில் அறிவித்தார்கள் என்பதை கூட உணர முடியவில்லை என்று கூறினார்.



 

No comments:

Post a Comment

கண்ணதாசன் - C.N.அண்ணாதுரைக்கு நூறு கேள்விகள்!

  திராவிடம் : அண்ணாதுரைக்கு கண்ணதாசன் நூறு கேள்விகள்! கவியரசு கண்ணதாசன்  அண்ணாதுரைக்கு நூறு கேள்விகள்! 1. ‘மொழிவழி பிரிந்து இன வழி ஒன்று கூட...