Thursday, February 12, 2026

40 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் மதுரை தீர்த்தக்காடு பட்டியல் ஜாதி மக்கள்

செல்போன் சார்ஜுக்கு ரூ.5 ; 40 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் மக்கள் - எங்கு தெரியுமா?

 

 ETV Bharat Tamil Nadu Team  Published : February 4, 2026 - By இரா. சிவக்குமார்

மனிதன் நிலவிற்கே செல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் இந்த காலகட்டத்திலும் நிலவின் வெளிச்சத்தை நம்பி கும்மிருட்டில் வாழும் தீர்த்தக்காடு பகுதி குறித்து இந்த செய்தியில் காணலாம்.



மதுரை: "எங்களது செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்ற வேண்டுமென்றால், அருகிலுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் சார்ஜ் ஏற்ற ரூ.5 கட்டணமாகக் கொடுக்க வேண்டும்" என தீர்த்தக்காடு பகுதியை சேர்ந்த பெண்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

அதிநவீன தொழில்நுட்பம் மனிதனை மிஞ்சும் இந்த காலகட்டத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கும்மிருட்டில் வாழும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள். பாரம்பரியமும், வரலாற்று தொன்மையும் கொண்ட மதுரை மாநகரில் இந்த அவல நிலை. மதுரை மாநகராட்சி அண்ணாநகருக்கு அருகில் உள்ளது வண்டியூர். மதுரை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட வண்டியூர் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது தீர்த்தக்காடு.

9 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பகுதியில் சுமார் 900 வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். அதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தீர்த்தக்காடு வார்டை சுற்றியுள்ள சௌராஷ்ட்டிபுரம், வண்டியூர் பகுதி மக்கள் வெளிச்சத்தில் திளைத்திருக்கும் நிலையில், இப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. தீர்த்தக்காடு குறித்து தகவல் அறிந்தவுடன் நமது ஈடிவி பாரத் செய்திக்குழு அப்பகுதிக்கு பயணம் செய்தது.

தீர்த்தக்காடு பகுதியின் அவலநிலை

இருள் மண்டிக் கிடந்த அந்த ஊரை சுற்றி ஓரிடத்தில் கூட சிமெண்ட் சாலையையோ, தார் சாலையையோ காண முடியவில்லை. ஒரு சில வீடுகளில் தங்கள் சொந்த செலவில் சோலார் விளங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மனிதன் நிலவிற்கே செல்லும் இந்த காலகட்டத்தில், இரவில் நிலவின் வெளிச்சத்தை நம்பி வாழ்வது அவல நிலையாக இருந்தது. தகரத்தடுப்புகளால் வீடுகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், முற்றிலும் மண் சாலையாக இருந்தது. மேலும் பெண்களுக்கு கழிவறை வசதி இல்லை.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த அரசமணி, மணிகண்டன் ஆகியோர் பேசுகையில், ”எனது வீட்டிற்கு முன் பக்கத்தில் உள்ள புதர்க்குழியை பெண்கள் கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால் நாங்கள் விடியும் வரை வீட்டின் கதவை திறக்கமாட்டோம்” என்றார். இதுமட்டுமின்றி மழைக்காலங்களில் இவர்கள் பாடு திண்டாட்டம் தான். பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் குழந்தைகளும் பெரியவர்களும் பலமுறை பாதிக்கப்பட்டு ஒரு சில உயிரிழப்பும் நிகழ்ந்திருக்கிறது.

பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் ஆபத்து குறித்து மணிகண்டன் கூறிக் கொண்டு வந்தார். அப்போது நாம் நடந்து சென்று கொண்டிருந்த பாதையின் குறுக்கே ஓடிய உள்ளங்கை அளவு உள்ள நட்டுவாக்காலியை காண்பித்தார். பின்னர் ராக்கு என்ற பெண்ணின் வீட்டிற்கு உள்ளே சென்றோம்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சமைத்து கொண்டிருந்த அவர் பேசுகையில், “சமைக்கும் சாப்பாட்டில் பூச்சி விழுந்தால் கூட தெரியாது. மண்ணெண்ணெய் விளக்கு இருந்தாலும், ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தர மறுக்கின்றனர். அதனால் மெழுகுவர்த்தி தான் ஒரே வெளிச்சம்.

ஒரு நாளைக்கு மெழுகுவர்த்திக்கு 12 ரூபாய் செலவாகும். மின்சாரம் தரவில்லை என்றாலும் குறைந்தது மெழுகுவர்த்தியாவது இலவசமாக தர வேண்டும்” என வேதனையோடு தெரிவித்தார். பின்னர் அருகில் வசித்து வரும் வண்டியூர் ஊராட்சிப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் முனீஸ்வரன் பேசுகையில், ”நான் பிறந்தது முதல் மின்சார வெளிச்சத்தை பார்த்ததே இல்லை. அடுத்த வருடம் 10ஆம் வகுப்பு செல்கிறேன்.

என்னை போல் பொதுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்கள். இந்த பகுதியில் 80 முதல் 90 பேர் உள்ளனர்” என்றார். அவரது தாயார் பிச்சையம்மாள் பேசுகையில், “நான் இந்த ஊருக்கு எனது 15 வயதில் வந்தேன். தற்போது 52 வயது ஆகிறது. எனக்கு 3 மகள், 4 மகன் உள்ளனர். எனது மகனுக்கு இந்த கம்ப்யூட்டர் காலத்தில் இருட்டில் வாழும் ஊர் என மணப்பெண் கிடைக்கவில்லை” என கண்ணீரோடு பேசினார்.



 

No comments:

Post a Comment

Boy Irrefular to madrasa chained

Boy Irrefular to madrasa  chained  Another Old Incident https://www.deccanherald.com/india/slow-learner-boy-chained-madrasa-2365081