Wednesday, February 11, 2026

கனடாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

 கனடாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி  


ஒட்டாவா: கனடாவில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள தம்ப்ளர் ரிட்ஜ் என்ற நகரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தோடு தொடர்புடைய ஒரு வீட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில், இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராயல் கனடியன் மவுண்டட் காவல் துறை கண்காணிப்பாளர் கென் ஃபிலாய்ட், ‘‘துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவரது பெயரை வெளியிடவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்ற போலீஸார், பாதிக்கப்பட்டவர்கள் பலரை அடையாளம் கண்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 6 பேர் பள்ளியில் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். கடுமையான காயங்களுடன் இருவர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரும் உயிரிழந்தார். கூடுதல் தகவல்களை வெளியிடுவது விசாரணையை பாதிக்கும் என்பதால், அவற்றை வெளியிட நாங்கள் விரும்பவில்லை’’ என தெரிவித்துள்ளார்.

இந்த துயர சம்பவத்துக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘இந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இதன்மூலம், முழுமையான ஆதரவு கிடைப்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியும். இந்த கொடூர துயரத்தை எதிர்கொள்ளும் அனைத்து பிரிட்டிஷ் கொலம்பியர்களுக்கும் கனடா அரசு துணை நிற்கிறது’’ என தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘கனடாவில் நடந்த இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த துயரமான தருணத்தில் கனடா மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக துணை நிற்கிறது’’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

EVR fraud