Saturday, March 6, 2021

மெக்கா ஜம்ஜம் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கிறார்கள்.

மெக்கா ஜம்ஜம் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு தான் மக்களுக்கு கொடுக்கப் படுகிறது. அதில் ஆர்சனிக் போன்ற உடலை பாதிக்கும் விஷப் பொருட்கள் நிறைந்துள்ளது என அறிஞர்கள் ஆய்வு தெரிவிக்கிறது
 


https://senkodi.wordpress.com/2011/03/04/zam-zam/

ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

இஸ்லாத்தின் அற்புதங்களின் வரிசையில் ஸம் ஸம் நீரூற்றுக்கு சிறப்பான இடம் உண்டு. அற்புதங்களில் மட்டுமின்றி இஸ்லாமிய வரலாற்றிலும் அந்த நீரூற்றுக்கு தனியாசனம் உண்டு. இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை முடித்துச் செல்பவர்கள் தங்கள் கடவச் சீட்டைவிட பத்திரமாக எடுத்துச் செல்லும் ஒரு பொருள் உண்டென்றால் அது ஸ்ம்ஸம் நீராகத்தான் இருக்கும். சற்றேறக் குறைய 4000 ஆண்டுகளாக நீர் தந்துகொண்டிருக்கும் நீரூற்று, வற்றாத நீரூற்று, எவ்வளவு நீர் எடுத்தாலும் அளவு குறையாத நீரூற்று, நோய் தீர்க்கும் தன்மையுடைய நீரைத் தரும் நீரூற்று, இன்னும் பலவாறாக முஸ்லீம்களால் விதந்து போற்றப்படும் இந்த நீரூற்று மக்கா பள்ளியின் வளாகத்தினுள் காஅபா ஆலயத்தின் வெகு அருகில் இருக்கிறது.

இந்த ஊற்றின் தொடக்கம் பற்றிய கதை ஈர்ப்புக்கவர்ச்சி மிக்கது. கிமு 2000 வாக்கில் அன்றைய இறைத்தூதரான‌ இப்ராஹிம் தன் மனைவி ஹாஜ்ர் ஐயும் பச்சிளங் குழந்தை இஸ்மாயிலையும் ஆளரவமற்ற அரபு பாலைவன‌த்தில் ஸபா, மர்வா எனும் இரண்டு குன்றுகளுக்கு அருகில் தனியே விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் வந்துவிடுகிறார். தாயையும் சேயையும் அப்படி பலைவன வெயிலில் விட்டுவிடும்படி அவருக்கு இறைக்கட்டளை வருகிறது, இறைத்தூதரல்லவா தட்டாமல் நிறைவேற்றிவிடுகிறார். இதே இப்ராஹிம் தான் பின்னாளில் இதே இஸ்மாயிலை இறைக்கட்டளை எனும் பெயரில் நரபலி கொடுக்க முயல்கிறார். இதன் நினைவாகத்தான் தியாகத்திருநாள் என்று உலக முஸ்லீம்கள் ஆட்டை அறுத்துப் பலியிடுகிறார்கள். கதைக்கு திரும்பலாம், பையில் வைத்திருந்த தண்ணீர் தீர்ந்ததும் பிரச்சனை தொடங்குகிறது. குழந்தை வீறிட்டு அழுகிறது. குழந்தையின் பசி தீர்க்க உதவி ஏதும் கிடைக்காதா என்று பக்கத்திலிருக்கும் குன்றுகளான ஸபா, மர்வா மீது ஏறி ஆட்கள் யாரும் தென்படுகிறார்களா என்று பார்க்கிறார். யாரும் தென்படுவதாக இல்லை. மீண்டும் குழந்தையிடம் ஓடி வருகிறார், குழந்தையின் அழுகையை நிறுத்த வழிதெரியாது மீண்டும் குன்றுகளின் மீதேறி உதவி ஏதும் கிடைக்காதா என தேடுகிறார். இப்படி ஏழு முறை இரண்டு குன்றுகளிலும் மாறிமாறி ஏறி உதவி கிடைக்காதா எனத் தேடுகிறார். இதன் நினைவாகத்தான் ஹஜ் செய்பவர்கள் ஸ்பா, மர்வா குன்றுகளுக்கிடையில் ஏழுமுறை தொங்கோட்டம் ஓடுகிறார்கள்.

இதன் பிறகு வானவர் ஒருவர் குழந்தையின் அருகே தோன்றி தன் கையிலிருக்கும் தடியினாலோ அல்லது தன்னுடைய சிறகினாலோ தரையை தட்டுகிறார். உடன் அந்த இடத்திலிருந்து நீர் குமிழியிட்டு வெளியேறுகிறது. இதையே குழந்தை காலால் அழுது உராய்த்த இடத்திலிருந்து நீர் பீறிட்டுக்கிளம்பியதாக கூறுவோரும் உண்டு. இதைக்கண்ட ஹாஜ்ர் ஓடி வந்து நீர் வெளியேறி வீணாகிவிடக்கூடாதே என்று ஸ்ம் ஸம் (நில் நில்) என்று கூறிக்கொண்டே மணலால் அணைகட்டுகிறார். அதனால் தான் அந்த ஊற்று இன்றும் ஸம் ஸம் நீருற்று என அழைக்கப்படுகிறது.

முதலில் இது 4000 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் ஊற்று என்பதே தவறானது. மேற்குறிப்பிட்ட‌ கதையில் ஊற்று வெளிப்படத் தொடங்கியதும் பிற பகுதியிலுள்ள மக்கள் அங்கு நீர் வளம் இருப்பதைக் கண்டு அந்த இடத்தில் குடியேற தொடங்குகிறார்கள், அதுவே பின்னர் மக்கா எனும் நகரமாகிறது. ஆனால் தொடர்ந்து அந்த ஊற்று எவ்வளவு நாட்கள் பயன்பாட்டில் இருந்தது என்பதற்கு குறிப்புகள் எதுவும் இல்லை, தூர்ந்துவிட்டது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல பாதைகளின் சந்திப்பாக இருந்த மக்கா எனும் நகரத்தைப்பற்றி பல நூல்களில் குறிப்புகள் இருந்தாலும் எதிலும் அந்த ஊற்றைப் பற்றிய குறிப்புகள் இல்லை. இப்போதிருக்கும் ஊற்று முகம்மதுவின் காலத்திற்கு சற்றுமுன் முகம்மதின் பெரிய தந்தையான அப்துல் முத்தலிப் என்பவர் குறைஷிகளின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக தோண்டிய கிணறு. தன்னுடைய குலத்திற்காக பெரியதந்தை தோண்டிய கிணறு என்பதால் முகம்மது அதற்கு கொடுத்த முக்கியத்துவமே, இன்று இஸ்லாமியர்களின் புனிதமாகி இருக்கிறது.

1971ல் எகிப்திய மருத்துவர் ஒருவர் இந்தக் கிணறு குறித்து ஐயம் எழுப்பியதாகவும் அதைத் தீர்ப்பதற்கு மன்னர் பைசல் நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம் இது குறித்து விசாரிக்குமாறு பணித்ததாகவும், அவர்களால் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரிக் ஹுசைன் என்பவர் அந்தக் கிணற்றின் ஆழம் தோராயமாக ஐந்து அடி இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் அந்தக் கிணற்றின் ஆழம் 30 மீட்டர் என்று சௌதி அரசின் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படித்தான் அந்த நீரின் புனிதம் குறித்து கதைகள் கட்டி பரப்பப்படுகிறது. அதுவே மதத்துடன் தொடர்புடையது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆகிவிடுகிறது.

இந்த நீரில் இருக்கும் தனிமங்களின் செரிவு குறித்தும், இது புனித நீராக இருப்பதால்தான் இவ்வாறு இருக்கிறது என்பதாகவும் பிரதாபிக்கின்றனர். ஆனால் இதை விட பழமையான ஊற்றுகளெல்லாம் இதுபோல தனிமங்களின் செரிவுற்றதாக இருந்திருக்கிறது. சீனாவில் லிசான் மலையில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெப்ப நீரூற்று மருத்துவ தன்மை கொண்டதாக பயன்பாட்டில் இருக்கிறது.

இந்த கிணற்றிலிருந்து எவ்வளவு நீரை இறைத்தெடுத்தாலும் இதன் நீர்மட்டம் குறைவதில்லை என்றும் ஒரு கருத்து உலவுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது சௌதி அரசு ஏன் அந்த கிணற்றை யாரும் அணுக முடியாதபடி பாதுகாத்து வைத்திருக்கிறது என்பதில் இருக்கிறது.

இந்த ஊற்றின் மகிமை குறித்து முகம்மது பலவாறாக புகழ்ந்து கூறியிருப்பதாக ஹதீஸ்களில் குறிப்பாக புஹாரி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நீரை என்ன நோக்கத்திற்காக என்ன நினைத்து குடிக்கிறார்களோ அந்தப் பலனையே பெறுவார்கள். இந்த நீர் உணவாகவும், மருந்தாகவும் இருக்கிறது. காய்ச்சல் கண்டால் இந்த நீரைக் குடித்தால் சரியாகிவிடும். முகம்மதை விண்வெளிப் பயணத்திற்கு தயார்படுத்த இந்த நீரால் தான் அவரின் உள்உறுப்புகள் கழுவி சுத்தம் செய்யப்பட்டன என்று பலவாறாக கூறப்பட்டிருக்கிறது. மாறாக குரானில் ஒரு வசனம் கூட இந்த கிணறு குறித்து இல்லை.

குரானில் விரிவான விபரங்கள் கூறப்பட்டிருக்கும் இறைத்தூதர்களில் இப்ராஹீமும் ஒருவர். தன்னுடைய மகனை பலியிட முயன்றது, தன்னுடைய மனைவி மகனை பலைவனத்தில் தவிக்க விட்டது, தந்தையும் மகனும் காஅபா பள்ளியைக் கட்டியது என குரான் அந்த நீரூற்றோடு தொடர்புடைய பல தகவல்களைக் கூறியிருந்தாலும், நேரடியாக அது குறித்து எதுவும் கூறப்படவில்லை. அது போல ஹஜ் எப்படி செய்ய வேண்டும் என்பதும் குரானில் சொல்லப்படவில்லை. ஆனால் ஸபா, மர்வா குன்றுகளுக்கிடையில் தொங்கோட்டம் ஓடுவதையும் இணைத்தே முகம்மது ஹஜ் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்திருப்பதால் குரானின் வசனங்களுக்கும் முகம்மதின் தீர்மானங்களுக்குமிடையில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்றாகிறது. பல வேதங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் தாய் ஏட்டிலிருந்து அருளப்பெற்றதாக நம்பப்படும் குரான் முஸ்லீம்களின் நம்பிக்கையின்படியே முகம்மதுவின் சொற்களில்லை என்றால்; முகம்மதுவின் பெரியப்பா தோண்டிய கிணற்றுக்கும் அதனைச்சுற்றிய கதைக்கும் குரான் ஏன் முக்கியத்துவம் தந்திருக்கிறது என்பது மட்டும் முஸ்லீம்களின் சிந்தனைக்கு.


No comments:

Post a Comment