வேலூர் மாவட்டத்தில் கடந்த பத்து மாதங்களில் (ஜனவரி 2025 முதல் அக்டோபர் 2025 வரை) 18 வயதுக்குட்பட்ட 415 சிறுமிகளுக்குக் குழந்தை பிறந்துள்ளது என்ற பேரதிர்ச்சித் தகவல் வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல்கள், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளன.
415 டீன் ஏஜ் தாய்மார்கள்
வெறும் 10 மாதங்களில் 415 சிறுமிகள் தாய்மார்களாக மாறி உள்ளனர். இவர்களில் பலர் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை என்பதை வேதனைக்குரிய விஷயம். இந்தப் பெண்கள் முழுமையாக உலகம் குறித்த புரிதல் இல்லாத வயதில் தாயாகியுள்ளது, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தச் சம்பவங்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை (POCSO) சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் குறிக்கின்றன. கடந்த 9 மாதங்களில் (ஜனவரி 2025 முதல் செப்டம்பர் 2025 வரை) வேலூர் மாவட்டத்தில் மட்டும் 201 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை, அம்மாவட்டத்தில் நிலவும் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
59 குழந்தை திருமணங்கள்
அதே 10 மாத காலகட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் 59 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாகச் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த 59 திருமணங்களில் வெறும் 8 திருமணங்கள் மட்டுமே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள சம்பவங்கள் குறித்து 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தின் மலைப்பகுதியான அணிக்கட்டு வட்டத்தில் மட்டும் 92 டீன் ஏஜ் பிரசவங்கள் நடந்துள்ளதாகவும், அப்பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
விழிப்புணர்வு மற்றும் சட்ட நடவடிக்கை தேவை
இந்தியச் சட்டப்படி பெண்களுக்குத் திருமண வயது 18 ஆக இருந்தாலும், வறுமை, போதிய கல்வி அறிவு இல்லாமை மற்றும் சமூக அழுத்தம் காரணமாகப் பெற்றோர் தங்கள் மகள்களைச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கியக் காரணமாகிறது. இது சிறுமிகளின் ஆரோக்கியத்தையும், கல்வியையும், எதிர்காலத்தையும் முற்றிலும் சீரழிக்கும் செயலாகும். இந்தப் போக்கைத் தடுக்கும் வகையில், பாதிக்கப்பட்ட மலைக் கிராமங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்களை நடத்த அதிகாரிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறுமிகளின் கல்வி மற்றும் உரிமைகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோரைக் கொண்டு, பள்ளிப் படிப்பை நிறுத்தும் அல்லது திருமண ஏற்பாடுகளுக்கு உட்படுத்தப்படும் சிறுமிகளைக் குறித்த தகவல்களை உடனடியாகச் சேகரித்து, குழந்தை திருமணங்களைத் தொடக்கத்திலேயே தடுக்க ஒரு ஆரம்ப எச்சரிக்கை அமைப்பை உருவாக்கவும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment