திமுக கூட்டணிக்குள் பாமக ராமதாஸ் வந்தால் நாங்கள் வெளியேறுவோம்” - திருமாவளவன்
பாமக நிறுவனர் ராமதாஸை கூட்டணியில் சேர்த்தால், திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என விசிக தலைவர் திருமாவளவன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மதத்தின் அடிப்படையில் வெறுப்பு அரசியலை, சிறுபான்மையினருக்கு எதிராக பரப்புவது பாஜக. அதேபோல் சாதி அடிப்படையில் வெறுப்பு அரசியலை, பட்டியலின மக்களுக்கு எதிராக பரப்புவது பாமக. சோஷயல் இன்ஜினீயரிங் என்ற பெயரில் சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை விதைத்து, பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய, நிலையான பகையை வளர்க்கக்கூடிய இந்த இரண்டு கட்சிகளோடு எந்த காலத்திலும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். இந்த கட்சிகள் இடம்பெறும் அணியிலும் இடம்பெற மாட்டோம் என்ற முடிவை ஏற்கெனவே எடுத்துவிட்டோம். அந்த முடிவை எடுக்கக்கூடிய சுதந்திரமும், உரிமையும், அதிகாரமும் எங்களுக்கு இருக்கிறது.
ஆனால் அதேநேரம் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. இவ்விவகாரத்தில் திமுக எடுக்கும் முடிவு எங்களது நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்தால், நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. இதுதான் எங்களின் நிலைப்பாடு. இதில் எந்த சமரசமும் நாங்கள் செய்துகொள்ளவில்லை. அவ்வப்போது வரும் தேர்தலுக்காக நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளக் கூடாது. கருத்தியல் சார்ந்த பயணத்தில் நம்பகத்தன்மையை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. அதை பாதுகாக்க வேண்டும். அதனடிப்படையில் நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதிப்பாட்டுடன் இருக்கிறோம்.
அதேபோல் இந்த தேர்தலில் புதிதாக பேசப்படக்கூடிய நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சி வெற்றிபெற்று, விஜய் முதல்வராகி விடுவார் என்றெல்லாம் ஒரு தரப்பில் விவாதிக்கப்படுகிறது. என்னதான் புகழ்பெற்ற கதாநாயகன், கதாநாயகி அரசியலுக்கு வந்தாலும் கூட எடுத்த எடுப்பில் அவர்களால் ஆட்சியை கைப்பற்ற முடிந்ததில்லை.
இவற்றை எல்லாம் விஜய்யின் கட்சியோடு ஒப்பிடும் போது, இந்த தளத்தில் அவர் முதல்வராவது உடனே சாத்தியப்படாது. மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிப்பது, தமக்கு ஆதராவான வாக்காளர்களை கொண்டு வந்து வாக்கு சாவடிகளில் சேர்ப்பது போன்ற நடைமுறைகளில் தவெகவினரால் எந்த அளவுக்கு செயல்பட முடியும் என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. பெரும்பாலும் அவர் ஆட்சியை பிடிக்க வாய்பில்லை.
இந்த தேர்தலில் அதிமுக அணி ஒரு வலுவாக கூட்டணியாக உருவாகவில்லை. நடிகர் விஜய்யின் தவெக இன்னும் ஒரு முழுமையான அரசியல் இயக்கமாக மாறவில்லை. எனவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment