Monday, December 6, 2021

பரிபாடல் கால்ம் பொஆ. 634 பஞ்சாங்க வானியல் ஜோதிடக் குறிப்பு

 பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி,  பொது ஆண்டு 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது

திரு சாமிக்கண்ணுப் பிள்ளை கோள் நிலை கொண்டு நாளைக் கணக்கிடுவதில் வல்லுநர். கல்வெட்டு ஆய்வாளர்கள் பலர், இவரது காலக் கணிப்பை அடிப்படையாகக் கொண்டே கல்வெட்டுக்களில் காணப்படும் அக்காலக் கணக்கீடுகளை நடைமுறையில் உள்ள காலத்திற்குப் பொருத்திப் பார்க்கின்றனர். 
11 வையை - பாடியவர் : நல்லந்துவனார்

பண் அமைத்தவர் : நாகனார்      பண் : பண்ணுப்பாலையாழ்

விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப

எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்

உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர

வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி            5

புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல்

அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின்

இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன்

வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை

மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த                 10

பொதியில் முனிவன் புரை வரை கீறி

மிதுனம் அடைய விரி கதிர் வேனில்

எதிர் வரவு மாரி இயைக என ஆற்றால்

புரை கெழு சையம் பொழி மழை தாழ

நெரிதரூஉம் வையை புனல்                        15


விரிந்த ஒளிக்கதிர்களையுடைய திங்களுடன் அகன்ற வானத்தில் சேர்க்கப்படுவனவாகிய,
 

எரி என்னும் கார்த்திகைசடை என்னும் திருவாதிரைஅழகிய யானை என்னும் பரணி ஆகிய நாள்கள் முதலாகஇவற்றின் பெயரால்

இடபவீதிமிதுனவீதிமேடவீதி என்று வேறுபடுத்திக்கூறப்பட்ட ஒவ்வொன்றும் ஒன்பது நாட்களைக்கொண்டமூவகை இராசிகளுள்

மிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர,

 


மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க, பொருள்களை ஆராய்ந்தறிகின்ற

புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க, இருள் புலரும் விடியலில்

கார்த்திகை உச்சமாக நிற்க, வியாழன் சனியின்

இரட்டை இல்லங்களாகிய மகரம், கும்பம் ஆகியவற்றுக்கு மேலேயுள்ள மீனராசியைச் சேர, யமனைத் தமையனாகக் கொண்ட சனி

தனுராசியின் பின்னர் உள்ள மகரராசியில் நிற்க, இராகு விரைவாக

திங்களை மறைக்க வருகின்ற நாளில், இப்படியாக வாய்ந்த,

பொதிகை முனிவனின் பெயர்கொண்ட அகத்தியன் என்னும் மீன் தன் உயர்ந்த இடத்தைக் கடந்து

மிதுன ராசியைச் சேர, விரிந்த கதிர்களையுடைய வேனிற்காலம்

எதிர்கொள்ளும் கார்காலத்தில் மழை பெய்க என்ற இந்த முறையினால்,

உயர்ச்சி பொருந்திய சையமலையில் பொழிகின்ற மழை மிகுதியாய் இறங்கிப்பாய

கரைகளை உடைத்துக்கொண்டு வருகிறது வையை ஆற்றில் வெள்ளம்



சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்

அண்ணாகண்ணன்

2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற வாராந்தர நிகழ்வுக்குச் சென்றேன்.

இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார்.

 

இவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப் பணிபுரிகிறார்.

“விரி கதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப,

எரி, சடை, எழில்வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர்விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்”

என்ற பரிபாடலின் காலத்தினைக் கணக்கிட முடியும் என்றார். வான மண்டலம் இப்போது எப்படி உள்ளது நம் கண்களுக்குத் தெரிகிறது. இது போல் இறந்த காலத்தி்ல் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது, எதிர்காலத்திலும் எப்படி இருக்கும் எனக் காண முடியும். காட்டும் இந்தக் குறிப்பிட்ட பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி,  கி.பி. (பொது ஆண்டு) 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது என ஐயம்பெருமாள் கூறினார். எனவே பரிபாடல், 3 முதல் 7ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.

மேலும் திருவள்ளுவரின் ‘அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து’, இளங்கோவடிகளின் ‘திங்களைப் போற்றுதும்’, ‘ஞாயிறு போற்றுதும்’, மாணிக்கவாசகரின் ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’,  ஆண்டாளின் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’… உள்ளிட்ட பாடல்களையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.

சிவன் உருவில் பிரபஞ்சத் தோற்றம் வரையப்பெற்றதாகப் படத்துடன் விளக்கினார். கோயில்களில் நவகிரகங்களை உருவாக்கிய பண்டைத் தமிழர்கள், சிறந்த வானவியல் அறிவு பெற்றிருந்தனர் என்றார். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கூறினார்.

தலைமையுரை நிகழ்த்திய நெல்லை சு.முத்து, தாம் இது வரை 103 நூல்கள் எழுதியிருப்பதாகக் கூறினார். அவற்றுள் 50க்கும் மேற்பட்டவை அறிவியல் நூல்கள் என்றார்.

‘வலவன் ஏவா வான ஊர்தி’ என்ற சங்க இலக்கிய வரிகளைச் சுட்டிய இவர், இந்த ஆளில்லா வானூர்தி என்பது, விமானம் போன்றது என்பதை விட, ஏவூர்தி (ராக்கெட்)யாக இருக்கலாம் என்றார்.

‘அம்மி மிதித்து அருந்ததி பார்த்து’ என்ற தொடரை விளக்கிய இவர், அருந்ததியைப் பகலில் பார்க்க முடியாது என்பதால், அந்தக் காலத்தில் இரவில் திருமணங்கள் நிகழ்ந்துள்ளதை இவ்வரியின் மூலம் அறியலாம். மேலும் அருந்ததி என்ற விண்மீன் மிகச் சிறியது. எனவே அதை ஒருவர் பார்க்க முடியுமானால், அவரின் கண் பார்வை கூர்மையாக உள்ளதை அறிந்துகொள்ளலாம் என்பதற்காக இந்த வழக்கம் தோன்றியிருக்கலாம் என்றார். உடு மண்டலம் உள்ளிட்ட சில நல்ல தமிழ்ச் சொற்களை நினைவூட்டினார்.

பட்டிமன்றத்தின் செயலர் பக்தவத்சலம் வரவேற்புரை ஆற்ற, புலவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி நவின்றார்.

சிறப்புரை நிகழ்த்திய ஐயம்பெருமாள், ‘சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்’ என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், சங்க காலத்தைத் தாண்டியும் அவர் சான்றுகள் உரைத்தார். இது, தலைப்பினை விட்டுச் சற்றே வெளியே சென்றது போல் இருந்தது.


No comments:

Post a Comment