பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானம் வாங்குகிறது இந்தியா
புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு வருகை தரும்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ஏற்கெனவே வாங்கப்பட்ட 36 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப் படை பயன்படுத்தி வருகிறது. இதனிடையே, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக 26 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க ரூ.3.25 லட்சம் கோடியில் மேலும் 114 ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் 18 ரஃபேல் விமானங்கள் பறக்கும் நிலையில் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 96 விமானங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டிலேயே பொருத்தப்படும் என்றும் தெரிகிறது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து முதல் 5 ரஃபேல் விமானங்கள் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலையில் இந்தியாவுக்கு வந்தன. தற்போது நாட்டின் 2 ராணுவ தளங்களில் இருந்து ரஃபேல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஹரியானாவின் அம்பாலாவில் கோல்டன் ஏரோஸ் என்ற பெயரில் ஒரு ரஃபேல் விமானப் படையும், மேற்கு வங்கத்தின் ஹசிமராவில் ஃபால்கன்ஸ் என்ற பெயரில் மற்றொரு ரஃபேல் விமானப் படையும் இயங்கி வருகிறது.


No comments:
Post a Comment