Saturday, February 7, 2026

திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மாயம்

 திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மாயம்

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 44-வது திருத் தலமாகும்.

இங்குள்ள மூலவருக்கும், தாயாருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, முத்து, பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் திருவிழா காலங்கள் மற்றும் வழக்கமான நாட்களில் அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த நகைகள் அனைத்தும் திருப்புல்லாணி கோயிலில் உள்ளபாதுகாப்பு பெட்டகம் மற்றும் ராமநாதபுரம் அரண்மனையிலுள்ள அறங்காவலர் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பெட்டகத்தின் சாவியை கோயில் பரம்பரை ஸ்தானிகர் வைத்திருப்பது வழக்கம்.

இந்நிலையில், ராமநாதபுரம்சமஸ்தான தேவஸ்தானத்தின் திவானும், நிர்வாக செயலாளருமான பழனிவேல்பாண்டியன் கடந்த ஆண்டு நவம்பரில் நகைகளை ஆய்வு செய்தார். அப்போது ஆவணத்தில் இருந்த சில தங்கநகைகள் பெட்டகத்தில் இல்லாதது தெரிய வந்தது.

இதனையடுத்து ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள அறங்காவலர் பெட்டகத்திலும் நகை சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதிலும் சில நகைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து திவான் பழனிவேல்பாண்டியன், ராமநாதபுரம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷிடம் புகார் அளித்தார்.இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்தானிகர் தற்காலிக பணிநீக்கம்: இதுகுறித்து திவான் பழனிவேல்பாண்டியன் கூறியதாவது: கோயில் நகைகள் மாயமான நிலையில், பெட்டக சாவிகளை வைத்திருக்கும் கோயில் பரம்பரை ஸ்தானிகர் சீனிவாசனிடம் விளக்கம் கேட்கப்பட்டதோடு, அவரை தற்காலிக பணிநீக்கம் செய்தேன்.

நகைகள் கணக்கெடுப்பில் 952 கிராம் தங்க நகைகள், 2400 கிராம் வெள்ளி நகைகள் என ரூ.1 கோடி மதிப்புள்ள பாரம்பரிய நகைகள் காணாமல் போயுள்ளன. மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

https://www.hindutamil.in/news/crime/1223305-1-crore-worth-of-jewels-stolen-from-tirupullani-temple.html

No comments:

Post a Comment

திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மாயம்

  திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மாயம்   ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் அமைந்து...