சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: தந்திரிக்கு எதிராக சாட்சியமில்லை - நீதிமன்றம் தகவல் 22 Feb 2026
கொல்லம்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் கொள்ளை தொடர்பான 2 வழக்குகளில் கோயில் தந்திரியான கண்டரரு ராஜீவரு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜீவருவின் ஜாமீன் மனு மீதான விசாரணை கொல்லம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. விசாரணையின்போது நீதிமன்றத்தில் தந்திரியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2018-ல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ய கேரள மாநில அரசு அனுமதித்தது.
இதற்கு அப்போது கண்டரரு ராஜீவரு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தங்கத் திருட்டு வழக்கை கேரள அரசு அதிகாரிகள் தொடர்ந்துள்ளனர்” என்று தெரிவித்தார். இந்நிலையில்தான் ஜாமீனில் ராஜீவரு வெளியே வந்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் கண்டரரு ராஜீவருக்கு எதிராக எந்தச் சாட்சியமும் இல்லை என்று கொல்லம் குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கண்டரரு ராஜீவருவை வேண்டுமென்றே கேரள போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதாகவும், இது பழி வாங்கும் நடவடிக்கை என்றும் கேரளாவில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த தங்கம் திருட்டு வழக்கில் முன்னாள் தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும், அதை திசை திருப்பவே தந்திரி கண்டரரு ராஜீவருவை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர் என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. கண்டரரு ராஜீவருவை கைது செய்தது தொடர்பாக கேரள அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அக்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. https://www.hindutamil.in/news/india/sabarimala-temple-gold-theft-case

No comments:
Post a Comment