அகழாய்வு படும்பாடு
- பி.ஏ.கிருஷ்ணன் -நமது நிருபர்-அக் 08, 2025
தொல்லியல் ஆய்வானது தேசிய, பிராந்திய இனவாதத்தின் கருவியாக மாறக்கூடாது. இது, வடக்கிற்கும் பொருந்தும்; தெற்கிற்கும் பொருந்தும். ராஜஸ்தானின் பஹாஜ் மற்றும் ஹரியானாவின் ராகிகடியில் நடந்த அகழாய்வுகளில் பல போதாமைகள் உள்ளன. தமிழகத்தின் கீழடியிலும், சிவகளையிலும் நடந்த அகழாய்வுகள் குறித்தும் எனக்கு பல கேள்விகள் உள்ளன.
கீழடி: கீழடியின் ஆய்வுகளை முன்னிட்டு தமிழக அரசு, 'கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, சங்க காலத்தில் வைகை நதிக்கரையில் அமைந்த ஒரு நகர்ப்புற நாகரிக குடியேற்றம் என பொருள் கொள்ளலாம்.
அந்தப் புத்தகத்தில், 'கீழடியில் பொ.மு., 580ம் ஆண்டைச் சார்ந்த தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானைத் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது, இந்தியாவில் முதன்முதலாக தமிழ் நிலப்பரப்பில் எழுத்துரு தோன்றியதைக் குறிக்கிறது' என்று சொல்கிறது.
கலைப்பொருட்கள்
கீழடி, கி.மு., ஆறாம் நுாற்றாண்டு என்று தமிழக அரசு எவ்வாறு சொல்கிறது? அதில் கிடைத்திருக்கும் கலை பொருட்களின் காலம் துல்லியமாக அளவிடப்பட்டதாலா, நிச்சயம் இல்லை.
கீழடி யின் பானைத் துண்டுகளின் காலக்கணிப்பிற்கு, ஆய்வாளர்கள் கரிம பகுப்பாய்வு முறையை பின்பற்றியுள்ளனர்.
ஆனால், பானைத் துண்டுகள் பகுப்பாய்வு செய்யப்படவில் லை. அதே மண்ணடுக்கிலிருந்து சேகரிக்கப்பட்ட கரித்துண்டுகள் தான், கரிம பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த உண்மை மக்களுக்குச் சென்றடையவில்லை.
இப்பகுப்பாய்வு, கரித்துண்டாக மாறிய ஒரு மரம், எ வ்வளவு ஆண்டு களுக்கு முன் இறந்தது என்பதை மட்டுமே தரும். இக்காலத்தை, பானைத் துண்டுகளின் மீது அப்படியே ஏற்றுவது, அறிவியல்பூர்வமான முறையல்ல.
இந்த ஆண்டு கணக்கு மட்டுமே அத்தளத்தின் தொன்மையைச் சுட்டாது. தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்ட மண்ணடுக்கிலிருந்த கலைப்பொருட்கள் அந்த கரித்துண்டின் சம காலத்தவையா என்பதை, பல மற்றைய ஆதாரங்களைக் கவனத்தில் கொண்டே தீர்மானிக்க முடியும். இவ்வாறு செய் யப்படவில்லை.
கீழடியில் தோண்டி எடுத்த கரித்துண்டுகளில் ஒன்றின் காலம் கி.பி., 206க்கும் 345க்கும் இடைப்பட்டது என்று அறியப்பட்டுள்ளது. இது, கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மேலும் தொல்லியல் ஆய்வாளர்கள், ஒரே அடுக்கில் கிடைத்த கலைப்பொருட்கள் ஒரு காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் கூற இயலுமே தவிர, துல்லியமாக அதன் வயதை அளவிட முடியாது.
இதே தவறான கால கணக்கீட்டு முறை, கீழடி தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளரும் அவரது சக பணியாளரும், ஆங்கில பத்திரிகை ஒன்றில் எழுதிய ஒரு கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ளது:
அக்கட்டுரையின்படி, கீழடியில் தோண்டியதில் கிடைத்த மண்ணடுக்குகளில் 200 முதல் 353 செ.மீ., வரை கீழடுக்கில் கண்டறியப்பட்ட அனைத்து கலைப் பொருட்களும், கி.மு., 580 ஆண்டைச் சார்ந்தவை.
ஆனால், 200 செ.மீ., க்கு மேலே உள்ள மைய அடுக்கின் கலைப்பொருட்கள் கி.மு., 3ம் நுாற்றாண்டிலிருந்து கி.பி., 1ம் நுாற்றா ண்டைச் சேர்ந்தவை. அதாவது, ஓர் அடுக்கில் காணப்படும் கலைப்பொருட்கள் அனைத்தும், ஒரே ஆண்டைச் சார்ந்தவை. ஆனால், அதற்கு சற்றே மேலே உள்ள அடுக்கின் கலைப் பொருட்கள், 2 நுாற்றாண்டு காலத்துக்குப் பரந்து விரிந்தவை என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த காலக் கணக்கீட்டு முறை, அறிவியல்பூர்வமானது அல்ல என்பதோடு, பிழையானதும் ஆகும்.
சிவகளை
சிவகளையிலும் இதே உத்தி கையாளப்பட்டிருக்கிறது. புதைகுழிகளில் கிடைத்த கரித்துண்டின் காலம் ஈமத்தாழிகளில் கிடைத்த இரும்பின் மீது ஏற்றப்பட்டிருக்கிறது. இந்தக் காலக் கணக்கீட்டு முறை, கு றைபாடுடையது.
இதற்கு ஆதாரமாக, அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலை பேராசிரியர் டேவிட் கில்லிக்கின் கட்டுரை ஒன்று இருக்கிறது. அதில் அவர், கரித்துண்டின் வயதை கலைப்பொருட்களின் மீது ஏற்றும் முறை சரியானதன்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதை, என் ஆய்வுக்கு ஆதாரமாக எடுத்துச் சொன்னபோது, ஆச்சரியமான அம் சம் ஒன்று நடைபெற்றது. என் கருத்தை மறுக்கும் வகையில், சிவகளையில் கிடைத்த கரித்துண்டுகளின் காலமும் இரும்பு பொருட்களின் காலமும் ஒன்றாகக் கருத முடியும் என்ற கருத்தை அதே பேராசிரியர் சொல்லும் கட்டுரை ஒன்று வெளியானது.
நான் உடனடியாக பேராசிரியரி டம் விளக்கம் கேட்டேன். நான் அவரிடம், கரித்துண்டுகள் ஈமத்தாழிகளுக்கு உள்ளே கிடைக்கவில்லை; புதைகுழிகளில் கிடைத்துள்ளன. எனவே அதன் காலத்தை இரும்பின் மீது ஏற்று வது சரியாகாது எனக் குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கு அவர், 'நீங்கள் இக்கேள்விகளை, அவ்விடத்தை அகழ்ந்த தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்க வேண்டும்' என்று பதிலளித்திருந்தார். தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்டும் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. காரணம், கேள்விக்கு அறிவியல்பூர்வமாகப் பதில் சொல்ல முடியாது.
தமிழின் தொன்மையை நான் கேள்விக்கு உள்ளாக்குகிறேனா?
நிச்சயம் இல்லை. நான் கீழடி மற்றும் சிவகளை ஆய்வுகள் முக்கியமானவை அல்ல எனக் கூறவில்லை.
இடுகாடு அல்லாத தளத்திலிருந்து ஏராளமான கலைப் பொருட்கள் அகழ்வாய்வில் சேகரிக்கப்பட்ட வகையில், கீழடி முக்கியமானது. இதுபோன்றே, தமிழத்தில் வேளாண்மை, நாம் முன்பு நினைத்திருந்ததை விட முன்னதாகவே துவங்கியதை சிவகளை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தமிழ் மொழியின் தொன்மையை நிறுவ அறிவியலுக்கு ஒத்துவராத முயற்சிகளை மேற்கொள்வது வருந்தத்தக்கது. இப்போதைய அவசரத்தேவை, சமரசங்கள் ஏதுமற்ற அறிவியல்பூர்வமான பகுப்பாய்வுகளே.
ராகிகடி மற்றும் பஹாஜில் நடைபெறும் ஆய்வுகளுக்கும் இதே நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.
இந்திய பண்பாட்டின் தொன்மை ஐயத்திற்கு இடமில்லாதது. அதுபோலவே, தமிழ் மொழியும், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. தமிழ் பண்பாடும் உலகளவில் புகழ் பெற்றதே.
அறிவியல்பூர்வமாக நிறுவ இயலாத கூற்றுகள் இத்தொன்மையை பறைசாற்ற பயன்படுத்தக் கூடாது. தொல்லியல் ஆய்வானது தேசிய, பிராந்தியவாதிகளின் கருவியாக மாறிவிடக்கூடாது.
- பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர்
இந்திய அகழ்வாய்வு படும் பாடு
பி ஏ கிருஷ்ணன்
மொழிபெயர்ப்பாளர்: என். வி. கல்பகம்
தொல்லியல் ஆய்வு தேசிய, பிராந்திய இனவாதத்தின் கருவியாக மாறக்கூடாது.
சில வாரங்களுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட 4,500 ஆண்டுகள் பழமையான நாகரிகத்துக்கும் வேதகாலத்திய சரஸ்வதி நதிக்கும் தொடர்பு இருப்பதாக NDTV செய்தி வெளியிட்டது. அதன் சுருக்கம்: இந்த அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட 23 மீட்டர் ஆழமுள்ள நீர்வழித்தடம், வேத காலத்து சரஸ்வதி நதியில் இணைக்கப்பட்ட ஒரு நீர் வழியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்விடத்தில் கண்டறியப்பட்ட கலைப்பொருட்கள், ஹரப்பா நாகரிகத்தின் பிந்தைய காலகட்டம், மகாபாரத காலம் என்றறியப்படும் காலகட்டம், மௌரியர் காலம், குஷாணர் காலம் மற்றும் குப்தர் காலம் என்னும் ஐந்து வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்தவையாக கருதப்படுகின்றன.
பாஸ்கர் இங்கிலிஷ் செய்தி நிறுவனம், இந்த நாகரிகம் 5,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது. இங்கு கிடைத்துள்ள மௌரியர் காலத்து அம்மன் தெய்வச் சிலை பொ மு 400ம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் சுடுமண்ணால் ஆன சிவன்-பார்வதி சிலை பொ மு 1000க்கும் முற்பட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த அகழ்வாய்வில், பிராமி எழுத்துரு தாங்கிய மிகப்பழமையான முத்திரைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாக்க் கூறப்படுகிறது. இவ்வாறிருப்பின், இந்த முத்திரைகள் நிச்சயம் இந்திய துணைக்கண்டத்தின் மொழியியல் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இந்த செய்திகளை பரவலாக அனைத்து செய்தி நிறுவனங்களும் அச்சு ஊடகங்களும் வெளியிட்டன.
இத்தருணத்தில், எனக்கு என் நண்பரும், முன்னாள் CSIR சக ஊழியருமான காலஞ்சென்ற பேராசிரியர் கோச்சர் அவர்களின் புத்தகமான The Vedic People, Their History and Geography குறித்து அவருடன் நடந்த உரையாடல்கள் நினைவிற்கு வருகின்றன. அவரது புத்தகத்தில் இரு சரஸ்வதி நதிகளை குறிப்பிடுகிறார். ஒன்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் நதியுடன் அடையாளம் காணப்படும், பிரம்மாண்டமான ‘நடித்தமா சரஸ்வதி’. மற்றொன்று இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள, பருவக்கால ஆறான காகருடன் அடையாளம் காணப்படும் விநாசன சரஸ்வதி. திரு. நிதின் சுந்தருடனான பின்னால் நடந்த நேர்க்காணலில் பேராசிரியர் கோச்சர், இந்த வேறுபாட்டை விளக்கி கூறியுள்ளார்.
முன்பு போலிருந்தால், ஊடகங்கள் கோச்சரின் விளக்கத்தை படித்தறிந்து, தற்போது கண்டறியப்பட்டுள்ள நீர்வழித்தடம் விநாசன சரஸ்வதியா என்று ஆராய முற்பட்டிருக்கும். ஆனால் இன்றைய முதன்மை ஊடகங்களிலேயே இந்த போக்கை காண்பதரிது. முதுகெலும்பு உள்ள நிருபர்கள், மகாபாரத நிகழ்வுகளுக்கு தொல்லியல் சான்றுகள் ஏதும் இல்லாத நிலையில், பொ மு 1200 முதல் பொ மு 300 வரையிலான சாம்பல் நிற வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்ட காலம் அல்லது முதல் கட்ட இரும்பு காலத்தை ‘மகாபாரத காலம்’ என்று குறிப்பிடுவதை குறித்து கேள்வி எழுப்பி இருப்பார்கள். மேலும், அகழ்வாய்வில் கிடைத்த மௌரிய காலத்து அம்மன் சிலையின் காலம் பொ மு 400ம் ஆண்டு என குறிப்பிட முடியாது என்பதையும் உணர்ந்திருப்பார்கள். ஏனெனில் மௌரிய பேரரசு பொ மு 322ம் ஆண்டை ஒட்டி நிறுவப்பட்டது. அதேபோல பொ மு 1000க்கு முற்பட்ட சிலை சிவன் பார்வதியின் சிலை என்பதும் ஏற்கத்தக்கதல்ல. ரிக் வேதம் ருத்திரனை மட்டுமே குறிப்பிடுகிறது, தெய்வீகத் தம்பதி என்கிற கருதுகோளே பிற்காலத்தையது. இதேபோல், பிராமி எழுத்துரு தாங்கிய முத்திரைகள் குறித்தும் கேள்விகள் எழுப்ப முடியும். இந்த முத்திரைகளில் என்ன எழுதப்பட்டிருந்தது? இவற்றின் காலம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது? ஒரு சில முத்திரைகளின் கண்டுபிடிப்பு இந்தியாவின் மொழி வரலாற்றில் எவ்விதம் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றும்? இதுவரை இந்த அகழ்வாராய்ச்சியை குறித்து முறையான கல்விசார் விவாதங்கள் ஏதும் நிகழவில்லை, ஆனால் இணையத்தில் ஹரப்பா நகர நாகரிகம் தடையின்றி தொடர்ந்தது போன்ற ஊகங்களும் கோட்பாடுகளும் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவாதங்கள் சிந்து சமவெளி நாகரிக வீழ்ச்சிக்குப்பின் கங்கை சமவெளியில் துவங்கி இந்தியா முழுவதும் பரவிய இரண்டாம் நகரமயமாக்கல் கோட்பாட்டையே கேள்விக்குள்ளாக்குகின்றன.
இதே நடைமுறையே ராக்கிகடி அகழ்வாய்விலும் பின்பற்றப்பட்டது. 2019ம் ஆண்டு வசந்த் ஷிண்டே தலைமையிலான ஆய்வுக் குழு, Cell பத்திரிக்கையில் ராக்கிகடியில் அகழ்ந்தெடுத்த ஒரே ஒரு எலும்பு கூட்டின் மரபணு பகுப்பாய்வு குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. ஒரு பெண் எலும்புகூட்டின் மரபணுவின் மீதான அந்த பகுப்பாய்வு, தெற்காசிய பழங்குடி வேட்டை சமூக மரபணு மற்றும் ஈரானிய மரபணு கலப்பை உறுதி செய்ததுடன் ஸ்டெப்பி புல்வெளியின் மேய்ச்சல் சமூக மரபணு காணப்படாததையும் நிரூபித்தது. இந்த கட்டுரையை மேற்கோள் காட்டி சில புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள் ஹரப்பா நாகரிக மக்கள் குறித்தும், ஆரிய இடம் பெயர்வு கோட்பாட்டை மறுதலித்தும் சில கருதுகோள்களை வெளியிட்டனர்.
டோனி ஜோசப் போன்ற விமர்சகர்கள், ஒரு பரந்த நிலப்பரப்பில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த சமூகத்தின் மரபணுவின் பன்முகத்தன்மையை ஒற்றை மரபணு்வின் பகுப்பாய்வு மூலம் அறிய இயலாது என வாதிட்டனர். ஆனால் இந்த விமர்சனங்கள் நாடு முழுவதும் எதிரொலித்த இந்துத்துவ கதையாடல்களால் மறைக்கப்பட்டன. ராக்கிகாரியில் 1997ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை அமரேந்திரநாத் தலைமையில் நடந்த அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் வெளியிடப்படவேயில்லை, வரைவு அறிக்கை மட்டுமே கிடைக்கிறது. தற்போது ராக்கிகாரியில் டாக்டர். சஞ்சய் குமார் மஞ்சுள் தலைமையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி குறித்தும் விரிவான தகவல்கள் இல்லை.
இந்திய தொல்லியல் துறையில் பல கடுமையான குறைபாடுகள் உள்ளன. முதலில் அகழ்வாராய்வுத் துறை ஒவ்வொரு அடுக்காக ஆராய்ந்து பதிவு செய்யும் பாறையடுக்கு வரைவியலை சீராக கடைப்பிடிப்பதில்லை. இரண்டாவதாக, விளக்கங்கள் புறவய சான்றுகளால் நிறுவப்படாமல் தேசிய, பிராந்திய, மத, குறுங்குழு சார்புநிலையை ஒட்டி அமைகின்றன. மூன்றாவதாக ஆய்வறிக்கைகள் துறை நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்படுவதற்கு முன்பே ஊடகங்களின் மூலம் அறிவிக்கப்படுகின்றன. எனவே ஆய்வு முடிவுகளும் பெரும்பாலும் ஊகங்கள் மற்றும் இட்டு நிரப்பும் விளக்கங்களை ஒட்டியே அமைகின்றன.
கீழடி மற்றும் சிவகளை ஆய்வுகளும் இதே வகையைச் சார்ந்தவையே. மேற்படி ஆய்வுகள் குறித்த சில முக்கிய வினாக்கள் 2019ம் ஆண்டு The Wire ல் வெளியான கட்டுரையில் எழுப்பப்பட்டன. தமிழ் மொழி, சூழலை நன்கு அறிந்தவன் என்ற முறையில் வல்லுநர்கள் சுட்டத் தவறிய சில முக்கிய வினாக்களை நான் எழுப்புகிறேன். கீழடி மற்றும் சிவகளை தொடர்பாக கீழ்கண்ட கண்டறிதல்களை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் அறிவித்திருக்கிறார்கள்:
- கீழடியில் சங்க காலம் அதன் உச்சத்தை அடைந்திருந்தது.
- கீழடியில் பொ மு 580ம் ஆண்டைச் சார்ந்த தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானைத் துண்டுகள்
கண்டறியப்பட்டுள்ளன. இது இந்தியாவில் முதன் முதலாக எழுத்துரு தமிழ் நிலப்பரப்பில் தோன்றியதைக் குறிக்கிறது.
- எழுத்து பொறிக்கப்பட்ட பானைத் துண்டுகள் தமிழர்கள் எழுத்தறிவில் முன்னோடிகளாக இருந்ததை சுட்டுகின்றன.
- கீழடியின் கண்டுபிடிப்புகள் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு நகர நாகரிகம் அங்கு செயல்பட்டதை சுட்டுகின்றன. எனவே இரண்டாம் நகர நாகரிகம், கங்கைச் சமவெளியிலும் தமிழ் நாட்டிலும் ஒரே சமயத்தில் துவங்கி இருக்கக் கூடும்.
- கீழடியின் கண்டுபிடிப்புகள் அங்கு ஒரு ஆற்றங்கரை நாகரிகம் இருந்ததை சுட்டுகின்றன.
- கீழடியில் காணப்பட்ட கீறல்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்பட்ட கலைப்பொருட்களின் குறியீடுகளை ஒத்திருக்கின்றன.
- சிவகளையில் கிடைத்த சான்றுகள் தமிழ்நாட்டில் பொ மு 3345ம் ஆண்டிலேயே இரும்பு யுகம் துவங்கியதை குறிக்கின்றது.
இந்த முடிவுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே விரிவாக ஆய்வு செய்வோம்.
சங்க காலத்தின் உச்சகட்டம்
கீழடியின் ஆய்வுகளை முன்னிட்டு தமிழக அரசு கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்” என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது. அதாவது, சங்க காலத்தில் வைகை நதிக்கரையில் அமைந்த ஒரு நகர்ப்புற நாகரிக குடியேற்றம் எனப் பொருள் கொள்ளலாம்.
சங்க காலம் என்பது எது?
தேவநேயப்பாவாணர் தன்னுடைய The Primary Classical Language of the World என்னும் புத்தகத்தில் தமிழ் 200,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி 50,000 முதல் 100, 000 ஆண்டுகளுக்குள் வளர்ச்சி அடைந்த மொழி என்கிறார். ஆனால், ஹெர்மன் டைக்கன் தன்னுடைய Kavya in South India – Old Tamil Sangam Poetry நூலில் சங்கப்பாடல்கள் பொஆ 9ம் நூற்றாண்டுக்கும் பொஆ 10ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை என்கிறார். அதாவது தற்போதிருந்து 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.
ஆனால், சங்கப் பாடல்கள் பொ மு 100ம் ஆண்டிலிருந்து பொ ஆ 400ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தவை என்பது பெரும்பான்மையாக ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்து.
அறிஞர் நோபுரு கராஷிமா தனது A Concise History of South India எனும் நூலில் சங்கப் பாடல்கள் பொ ஆ 1ம் நூற்றாண்டு முதல் பொ ஆ 3ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவை என்கிறார். இந்த காலக்கணிப்பு ஆதாரமற்றதல்ல, ஏனெனில், சங்கப் பாடல்கள் வேதியர் தினமும் வேதம் ஓதும் ஒரு சமூகத்தைச் சித்தரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, கீழடியின் அருகிலுள்ள மதுரை நகரை சித்தரிக்கும் மதுரைக்காஞ்சி எனும் நூல், மரபு வழுவாமல் கட்டுக்கோப்பாக வேதம் ஓதும் வேதியரைக் குறிப்பிடுகிறது. தமிழக மன்னர்கள் வேள்வித் தூண்கள் நிறுவி வேள்விச் சடங்குகள் செய்ததை சில சங்கப் பாடல்கள் குறிப்பிடுவதாக கராஷிமா பதிவு செய்துள்ளார். இது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் பொது யுகம் ஒன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் ஆரிய பண்பாட்டின் செல்வாக்கை குறிக்கிறது. புகழ்பெற்ற தொல்காப்பியம் உட்பட அனைத்து சங்க இலக்கியங்களும் வேதியரையும் வேதத்தையும் குறிப்பிடுகின்றன. சில நூல்கள் சமண, பௌத்த பள்ளிகளையும் குறிப்பிடுகின்றன. ஒரு நடுநிலை வாசகர், இதிலிருந்து தமிழ்நாட்டின் வரலாற்று காலத்தை இந்தியாவின் பிற பகுதிகளின் வரலாற்று காலத்திலிருந்து பிரிக்க இயலாது என்பதை அறியலாம். எடுத்துக்காட்டாக, சங்க இலக்கியமான பட்டினப்பாலை, சோழ நாட்டு துறைமுகமான காவிரிபூம்பட்டினத்தில் நிகழும் வணிகத்தை கீழ்க் கண்டவாறு விவரிக்கிறது:
“தலை உயர்த்தி விரைவாக ஓடும் குதிரைகள் அயல் நாட்டிலிருந்து கப்பலில் வந்திறங்குகின்றன, உள் நாட்டிலிருந்து கருமிளகு மூட்டைகள் வண்டிகளில் வந்திறங்குகின்றன, வடக்கே உள்ள மலைகளிலிருந்து தங்கம், மேற்கு மலைகளிலிருந்து அகிலும் சந்தனமும், கங்கை கரையிலிருந்து இதர பொருட்கள், தென்கடலிலிருந்து முத்துக்கள், கிழக்கு கடலிலிருந்து பவழம், காவிரியின் விளைச்சல், ஈழத்திலிருந்து வரும் பொருட்கள் மற்றும் கழகத்தில் (மியான்மர்) தயாரிக்கப்படும் பொருட்கள்” .
எனவே, பொது யுகத்தின் துவக்கத்தில் தமிழகம் செழிப்பாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. டேவிட் ஷூல்மன் தனது Tamil – A Biography எனும் நூலில் “பொது யுகத்தின் முதல் நூற்றாண்டில் Periplus of the Erythraean Sea எனும் கடலோடிகளுக்கான கையேட்டில்,
தெற்காசிய கடற்கரையோரம் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தூர தெற்கு கரையோர பகுதியின் நகரங்களும் இடம்பெற்றிருக்கும் இந்த கையேட்டில் பெரும்பாலானவை திராவிட இடப்பெயர்களே” என்று குறிப்பிடுகிறார்.
ஆனால் தமிழின் தொன்மையை பொது யுகத்திற்கு அறுநூறு ஆண்டுகள் முன்னே என கால வரையறை செய்கையில் சிக்கல் உருவாகிறது . கீழடி சங்க காலத்திற்கும் 600 ஆண்டுகள் முந்தைய காலத்தை சார்ந்தது எனக் கொண்டால் அதை சங்க காலத்தின் நகர்ப்புற நாகரிகம் என கூறுவது பிழையானதும், வரலாற்றுக்குப் புறம்பானதும் ஆகும். ஆனால் உண்மையிலேயே கீழடி சங்க காலத்திற்கும் 600 ஆண்டுகள் பழமையானதா? தரவுகளின் அடிப்படையில் ஆராய்வோம்.
பானைத் துண்டுகள் பொ மு 580ம் காலத்தைச் சார்ந்தவை
தமிழக தொல்லியல் ஆய்வாளர்கள் கீழடியில் கிடைத்த பானைத் துண்டுகள் பொ மு 580ம் காலத்தைச் சார்ந்தவை என்று எவ்வாறு கணித்தார்கள்? கீழடியின் காலக்கணிப்பிற்கு, ஆய்வாளர்கள் கரிம பகுப்பாய்வு (carbon dating) முறையை பின்பற்றியுள்ளனர். ஆனால் பானைத் துண்டுகளுக்குப் பதிலாக, அதே மண்ணடுக்கிலிருந்து சேகரிக்கப்பட்ட கரித்துண்டுகள் கரிம பகுப்பாய்வு செய்யப்பட்டன. தொல்லியலின் எந்தவொரு பாடப்புத்தகத்திலும், கதிரியக்க கரிம ஆய்வகத்தில், பின்னாளில் கரித்துண்டாக மாறிய ஒரு மரம், எவ்வளவு ஆண்டுகளுக்கு முன் இறந்தது என்பதை கண்டறியும் முறை விளக்கப் பட்டிருக்கும். இந்த ஆண்டுக் கணக்கு மட்டுமே அத்தளத்தின் தொன்மையைச் சுட்டாது. தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்ட மண்ணடுக்கிலிருந்த கலைப் பொருட்கள் அந்த கரித்துண்டின் சம காலத்தவையா என்பதை சூழலையும் மற்றைய வலுவான ஆதாரங்களையுஜ் கவனத்தில் கொண்டே தீர்மானிக்க முடியும். இங்கு செய்ததைப் போல் கரித்துண்டின் காலத்தைக் கொண்டு கலைப் பொருட்களின் காலத்தை தீர்மானிப்பது அறிவியல் பூர்வமான முறையல்ல.
அப்புத்தகத்திலிருந்து தொடர்புள்ள பகுதியை மேற்கோள் காட்டுகிறேன்:
“சேகரிக்கப்பட்ட ஆறு மாதிரிகளின் காலமும் பொ மு 6ம் நூற்றாண்டிற்கும் பொ மு 3ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவை. மண்ணடுக்கின் 353 செ மீ ஆழத்தில் சேகரித்த மாதிரியின் காலம் பொ மு 6ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்தது மற்றும் மண்ணடுக்கின் 200 செ மீ ஆழத்தில் சேகரித்த மாதிரியின் காலம் பொ மு 3ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது. காலம் கணிக்கப்பட்ட மண்ணடுக்குகளின் மேலும் கீழும் கணிசமான படிவுகள் தென்படுவதால், கீழடியின் காலம் பொ மு 6ம் நூற்றாண்டிற்கும் பொ ஆ 1ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாக கணிக்கப்பட்டது”.
ஆனால் அப்புத்தகத்திலேயே அங்கு கிடைத்த ஒரு கரித் துண்டின் காலம் பொது ஆண்டு 206 க்கும் பொது ஆண்டு 345 க்கும் இடைப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது “அங்கு கிடைத்த ஆறு மாதிரிகளின் காலமும் பொ மு 6ம் நூற்றாண்டிலிருந்து பொ மு 3ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டவை” என்ற கூற்றிற்கு முரணானது. இந்தத் துல்லியமின்மையே கீழடியின் காலக்கணிப்பின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடச் செய்கிறது.
மேலும், அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
“இந்த அகழாய்வுக் குழியிலுள்ள பண்பாட்டு அடுக்குகளின் படிவு மொத்தம் 360 செ.மீ., இவற்றில் கரிம மாதிரி 353 செ.மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்டது, அதாவது இயற்கை மண்ணிற்கு மேலே 7 செ.மீ உயரத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் 300 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன. இந்த பண்பாட்டு அடுக்கில் கரிம மாதிரி சேகரிக்கப்பட்டதற்கும் தொல்பொருள் (தமிழ் எழுத்து பொறித்த பானை ஓடுகள்) கண்டெடுக்கப்பட்டதற்குமான இடைவெளி 53 செ.மீ ஆகும். இந்த 53 செ.மீ மண்ணடுக்கு படிவுஉருவாவதற்கு ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கும் குறைவான காலம் எடுக்கும். பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த காலககணிப்புகளின் ( AMS – Accelerated Mass Spectrometry) அடிப்படையில் இக்காலவரையறை செய்யப்பட்டது. கீழடியில் கிடைத்த 5 கரிம மாதிரிகள் 353 செ.மீ மற்றும் 207 செ.மீ மண்ணடுக்குகளுக்கிடையே சேகரிக்கப்பட்டவையாகும். இதன் வரையறை செய்யப்படாத காலம் கி.மு 580 (வரையறை செய்யப்பட்ட காலம் கி.மு 680), மற்றும் கி.மு 190 (வரையறை செய்யப்பட்ட காலம் கி.மு 205) க்கு இடைப்பட்டதாகும்.
இந்த 146 செ.மீ (353 – 207 = 146)
பருமன் கொண்ட மண்ணடுக்கு உருவாக ஏறத்தாழ 400 ஆண்டுகள் (580 – 190 = 390) எனில்,
40 முதல் 50 செ. மீ படிவு உருவாக ஒரு நூற்றாண்டு அல்லது அதற்கு சற்று குறைவான காலம் ஆகியிருக்க வேண்டும் என எடுத்துக்கொள்ளலாம். 353 செ.மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்ட கரிமத்தின் காலம் கி.மு 680ஆகும். எனவே 300 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடுகளின் காலத்தை கி்.மு 6ம் நூற்றாண்டு என்று காலவரையறை செய்யலாம்”.
சற்றே கூர்ந்து நோக்கினால்,
கி.பி 206 – கி.பி 345 கால இடைவெளியில் வரையறை
செய்யப்பட்ட கரிம மாதிரிகள் இந்த கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளப்படாததையும், மாதிரி படிமங்கள் ஆறிலிருந்து ஐந்தாக குறைந்ததையும் கவனிக்கலாம். எனக்குத் தெரிந்த வரையில், ஒரு பண்பாட்டு அடுக்கு உருவாவதற்கான கால அளவை கண்டறிய துல்லிய முறைகள் இல்லை. அதிக பட்சமாக, தொல்லியல் ஆய்வாளர்கள், ஒரே அடுக்கில் கிடைத்த கலைப்பொருட்கள் ஒரே கால கட்டத்தை, ஒரு காலப்பட்டையை ( a band of time) சேர்ந்தவை எனக் கூற இயலும். இத்தகைய குறைபாடுகளைக் கொண்ட முறையின் அடிப்படையில் கால அளவீட்டை உறுதிபடச் சொல்வது வருத்தத்தை அளிக்கிறது.
இதே கால கணக்கீட்டு முறை, கீழடி தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளரும் அவரது சக பணியாளரும்
Frontline ல் வெளியிட்ட ஒரு கட்டுரையிலும் முன்வைக்கப்பட்டுள்ளது :
“கீழடியின் ஆய்வுக்குழிகளின் மண்ணடுக்குகள் கீழிருந்து மேல் வரை, ஒரே பண்பாட்டின் வெவ்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. மிக முக்கியமான கண்டுபிடிப்பு அகழாய்வுக் குழி எண் YP 7 ன் நான்காம் காற்பகுதியில் (YP 7/4) இருந்து சேகரிக்கப் பட்டது. இந்த காற்பகுதியில் மூன்று பண்பாட்டு அடுக்குகள் காணப்பட்டன. இதன் கீழடுக்கு, பொ.மு. 580ம் காலத்தைச் சேர்ந்தது. 353 செ.மீ முதல் 200 செ.மீ வரை கீழே அமைந்துள்ளது. இயற்கை மண் 410 செ.மீல் அமைந்துள்ளது. இந்த பண்பாட்டு அடுக்குகள்,தொல்லியல் ஆய்வாளர்களால், மண் படிவுகள், மண்ணின் நிறம், மண்ணின் அமைப்பு மற்றும் சேகரிக்கப்பட்ட கலைப் பொருட்களின் இயல்பைக் கொண்டு கண்டறியப்பட்டுள்ளன.
200 செ.மீ ஆழமும் சற்று அதன் மேலுள்ளதுமான மைய அடுக்கு பொமு 3ம் நூற்றாண்டு முதல் பொமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்தது”.
இக்கூற்றின்படி, 353 செ.மீ முதல் 200 செ.மீ வரையிலான கீழடுக்கில் கண்டறியப்பட்ட அனைத்து கலைப் பொருட்களும் “பொ மு 580” ம் காலத்தைச் சார்ந்தவை. ஆனால், 200 செ.மீ க்கு மேலே உள்ள மைய அடுக்கின் கலைப்பொருட்கள் பொமு 3ம் நூற்றாண்டிலிருந்து பொமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அதாவது, ஒரு காற்பகுதியில் 353 முதல் 200 செ.மீ வரையிலான அடுக்கில் காணப்படும் கலைப்பொருட்கள் அனைத்தும் ஒரே (பொ மு 580) ஆண்டைச் சார்ந்தவை, ஆனால், அதற்கு சற்றே மேலே உள்ள மைய அடுக்கின் கலைப் பொருட்கள் 2 நூற்றாண்டு காலத்துக்குப் பரந்து விரிந்தவை! எனவே, இந்த காலக் கணக்கீட்டு முறை அறிவியல்பூர்வமானது அல்ல என்பதோடு பிழையானதும் ஆகும்.
தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானைத் துண்டுகள் பொமு 580ம் காலத்தை சார்ந்தவை என வரையறை செய்ததே பிராமி எழுத்துரு முதன்முதலில் இந்தியாவில், தமிழகத்தில் தோன்றியது என நிறுவுவதற்கே. இதனால் பொமு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த மௌரிய அரசரான அசோகரின் கல்வெட்டில் காணப்படும் பிராமி எழுத்துருவுக்கு முன்பே தமிழில் அவ்வெழுத்து முறை நடைமுறையில் இருந்ததாக கொள்ளலாம். ஆனால் கீழடியின் சான்றுகள் வேறு உண்மையை பறைசாற்றுகின்றன. “திசன்” என்னும் பிராகிருத பெயர் பொறிக்கப்பட்ட பானைத் துண்டில், “ச” என்னும் ஒலியை குறிக்கும் குறியீடு, அசோகரது கல்வெட்டின் பிராமி குறியீட்டை ஒத்துள்ளது (“ச” எனும் ஒலி தமிழில் இல்லை என்பதால் அதற்கு எழுத்துரு இல்லை).
சுப்பராயலு, தன்னுடைய A Concise History of South India எனும் புத்தகத்தில், தமிழ் நாட்டில் அகழப்படும் பானைத் துண்டுகளில் காணப்படும் எழுத்துருக்களில் 11 எழுத்துக்கள் சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத்த்திலிருந்து பெறப்பட்டவை என்கிறார். இதிலிருந்து, தமிழர்கள் தமிழ் பிராமி எழுத்தை உருவாக்கினாலும் அதில் தமிழ் மொழியில் இல்லாத சொற்களையும், பரந்த பயன்பாட்டிற்காக சேர்த்துள்ளதாகப் பொருள் கொள்ளலாம். இக்கூற்று நம்ப தகுந்ததா? பொ மு 5ம் நூற்றாண்டில் கண்டறியப் பெற்ற பூலாங்குறிச்சி கல்வெட்டுகளுக்கு முன்னால் கிடைத்த தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் பிழைகள் மிக்கவை. அவை பெரும்பாலும் பெயர்களேயன்றி முழுமையான பொருள் கொள்ளத்தக்க வாக்கிய அமைப்புகளோடு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழர்கள் தமிழ் பிராமி எழுத்தை பொ மு 5ம் நூற்றாண்டுக்கு முன்னேயே உருவாக்கி இருந்தால், 1000 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை கல்வெட்டுக்களுக்கு அப்பால் அவர்கள் முன்னேறவில்லை என்ற முடிவிற்கு நாம் தள்ளப்படுகிறோம். மாறாக அசோகரின் கல்வெட்டுக்களை பொறித்தவர்கள் மொழியியலில் விரைவாக முன்னேறி உள்ளனர்.
தமிழர்கள் எழுத்தறிவில் முன்னேறியிருந்தனர்
பானைத் துண்டுகளில் பொறிக்கப்பட்ட பெயர்கள் உரிமையாளரின் கல்வியறிவை குறிக்கின்றது என்னும் கூற்று ஆதாரமற்றது. உரிமையாளரின் பெயரை பாத்திரங்களில் பொறிப்பதென்பது ஒரு பொதுவான நடைமுறையே அன்றி அது உரிமையாளரின் கல்வியறிவை குறிக்க வேண்டியதில்லை. நவீன யுகத்திற்கு முன் உலகின் பெரும்பான்மை மக்கள் தொகைக்கு கல்யறிவு இல்லை. 1820ம் ஆண்டில் மொத்தம் 12% மக்களே கல்வியறிவு பெற்றிருந்தனர், இதில் தமிழர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. பண்டைய காலத்தில், கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்கு இன்று போல பொருளாதாரக் கட்டாயம் ஏதும் இருந்த்தில்லை. .
மிகவும் மேம்பட்ட நகர்ப்புற பண்பாட்டு
கீழடியின் பண்பாட்டு அடுக்குகள் 110 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளன, ஆனால் அதன் ஒரு சிறு பகுதியே அகழப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிட்டால், ராக்கிகடியில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி 865 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்றுள்ளது. கீழடி ஆய்வறிக்கையின்படி, இப்பகுதியின் பண்பாட்டுக் காலம், தொடக்க வரலாற்று காலத்தின் முதற் கட்டம் (பொ மு 6ம் நூற்றாண்டிலிருந்து பொ மு 3ம் நூற்றாண்டின் மத்தி வரை), தொடக்க வரலாற்று காலத்தின் இரண்டாம் கட்டம் ( பொ மு 3ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து பொ மு 1 அல்லது 2 ம் நூற்றாண்டு வரை). ஆனால் இந்திய தொல்லியல் துறை, கீழடியின் பண்பாட்டு காலத்தை மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளது: பொ மு 300 க்கு முன், தொடக்க வரலாற்று காலம் (பொ மு 300 முதல் பொ ஆ 300 வரை) மற்றும் வரலாற்றுக்குப் பிந்தைய காலம் (பொ ஆ 300க்குப் பின்).
மேலும் அவ்வறிக்கையில், தொடக்க வரலாற்று காலத்தின் முதற்கட்டத்தைச் சார்ந்த, நுண்ணிய கருப்பு சிவப்பு மட்கலன், கருப்பு மட்கலன் மற்றும் சிவப்பு பூச்சு மட்கலன் முதலானவை கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்விடத்தின் கட்டுமான எச்சங்களான சுடுமண் உறைக் கிணறுகள் மற்றும் செங்கற் கட்டுமானங்கள், அங்கு கட்டுமான பணிகள் இந்த காலகட்டத்தில் நிகழ்ந்ததை சுட்டுகின்றன. முத்திரையிடப்பட்ட செவ்வக வெள்ளி நாணயமும் இக்காலகட்டத்தைச் சேர்ந்ததே ஆகும். இருப்பினும் இக்கலைப் பொருட்கள் குறிப்பிடத்தகுந்தவை அல்ல. அரிதானவையோ கலைத்திறனைப் பறை சாற்றுபவையோ அல்ல. மட்கலன்களைத் தவிர வேறு பொருட்களை, தமிழ் நிலத்தில் தோன்றியவை என உறுதிபடக் கூற இயலாது.
அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட செங்கற் கட்டுமானங்களும் அங்கு பெரும் கட்டுமானப் பணிகள் நிகழ்ந்ததை உறுதிபட சொல்லுமளவுக்கு இல்லை. பேராசிரியர் ராஜன், இப்புத்தகத்தின் அணிந்துரையில், “நகரமயமாக்கலை உறுதிப்படுத்துவதற்கு செங்கல் கட்டுமானங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிதில்லை. ஏனெனில், தமிழ்நாட்டு வரலாற்றில் இடைக்காலத்தில் ஆட்சி செய்த பேரரசுகளான பல்லவர், பாண்டியர், சோழர் காலத்தில் கூட மிகப் பெரிய கட்டுமானங்கள் காணப்படவில்லை. வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்ப மண்டலங்கள் சார்ந்த இடங்களில் வாழும் மக்கள் செங்கல் கட்டுமானங்களைவிட மரத்தாலான மேற்கட்டுமானங்களையே பெரிதும் விரும்பியுள்ளனர். கீழடியில் வெளிகொணரப்பட்ட செங்கல் கட்டுமான அமைப்புகளும் தொல்பொருட்களும் நகரமயமாக்குதலின் இருப்பை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன”. என்று கூறுகிறார்.
செங்கல்லை கட்டுமானங்களில் அதிகமாக பயன்படுத்திய சிந்து சமவெளி நாகரிகம் முடிவடைந்த காலத்தில் தமிழ் பண்பாடு துவங்கியது எனும் கூற்று இன்று தமிழகத்தில் பரவலாகப் பேசப்படும்போது., இத்தகைய வாதம் திகைப்பையே அளிக்கிறது.
குறிப்பிடத்தக்க கட்டிடங்கள், சாலைகள் அல்லது கோயில்கள் போன்றவை இருந்ததற்கான சான்றுகளே இல்லாமல் ஒரு பெரிய நகரமயமான பண்பாடு செயல்பட்டதாக கூறுவது தர்கத்திற்கு புறம்பானதாகும். மேலும், இக்காலகட்டத்தில், தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற பண்பாட்டை கையாளும் வகையில் தொழில்நுட்பம் முன்னேறியதற்கான அதிகம் சான்றுகள் இல்லை.
Eurasia at the Dawn of History: Urbanization and Social Change என்னும் புத்தகத்தின் ஆசிரியர் தனது தொல்லியல் நகர்ப்புற பண்புக்கூறுகள் (Archaeological Urban Attributes) என்னும் கட்டுரையில் தொல்லியல் தளங்களின் நகர்ப்புற வளர்ச்சியினை அளவிட 21 காரணிகளைப் பட்டியலிடுகிறார். இவற்றில் மக்கள் தொகை, பரப்பளவு, மக்கள் நெருக்கம், மன்னர்களின் அரண்மனைகள், மன்னர்களின் இடுகாடுகள், பெரிய கோயில்கள், கலைப் பொருட்கள் உற்பத்தி, சந்தைகள் அல்லது கடைகள், கோட்டைகள், வாயில்கள், இணைப்பு உள்கட்டமைப்பு, இடைநிலை வரிசை கோயில்கள்,
உயர்வர்க்கத்தின் அடிப்படிகளில் இருப்போரின் குடியிருப்புக்கள், அவர்களது இடுகாடுகள், முறையான பொது இடங்கள், திட்டமிடப்பட்ட மையப்பகுதிகள், சமூக பன்முகத்தன்மை, குடியேற்றத்தில் விவசாயம் மற்றும் இறக்குமதி ஆகியவை அடங்கும்.
கீழடியில், ஏராளமான பானைத் துண்டுகளைத் தவிர பண்பட்ட நகர நாகரிகம் இருந்ததற்கான குறிப்பிடத்தக்க சான்றுகள் இல்லை. பொ மு 6ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் முத்திரையிட்ட வெள்ளி நாணயம் கிடைத்திருக்கிறது எனினும் அது உறுதியான எந்தச் சான்றையும் தராது ஏனெனில், ஏறத்தாழ கி.பி. 3ம் நூற்றாண்டு வரையில் இதுபோன்ற நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. எனவே, கீழடி, பெரியதொரு நகர்ப்புற நாகரிக பகுதியாக இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லை.
நதிக்கரை நாகரிகம்
கீழடி, வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது. வைகை நதி, 258 கிலோமீட்டர் பரப்பளவில் பாயும் வானம் பார்த்த நதியாகும். இதன் வடிகால் படுகை சுமார் 7,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. இதற்கு நேர்மாறாக, உலகின் புகழ்ப்பெற்ற நதிக்கரை நாகரிகங்கள் பரப்பளவில் பெரிய வடிகால் படுகைகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சிந்து-ஹரப்பா நாகரிகம் 1.25 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், நைல் நதிப் படுகை 2.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், யூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் ஆறுகள் 890,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், யாங்சே 1.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் உள்ளடக்கியன. இந்நதிக்கரை நாகரிகங்கள் உலக பாரம்பரியத்திற்கு பிரமிக்கத்தக்க, தனித்துவமான பங்களிப்புகளைச் செய்துள்ளன. கீழடி நதிக்கரை நாகரிகமாக அங்கீகரிக்கப் படுவதற்கான போதுமான ஆதாரங்களை இதுவரை வழங்கவில்லை.
கீழடி மற்றும் ஹரப்பா நாகரிகம்
கீழடியில் பெரிய செங்கற் கட்டுமானங்களோ, ஓரளவு கச்சிதமான கட்டுமானங்களோ காணப்படவில்லை. தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வாளர்கள் கீழடியில் காணப்படும் கீறல்கள் மற்றும் குறியீடுகள் ஹரப்பாவின் குறியீடுகளை ஒத்திருக்கின்றன என்றும், இதனால் கீழடி, ஹரப்பா நாகரிகத்தின் தொடர்ச்சி என்பதற்கு மறுக்க இயலாத ஆதாரம் இருப்பதாகவும் வாதிடுகின்றனர். இடப்பெயர்வு, வடமேற்கு திசையிலிருந்து துவங்கி உள்நோக்கி அனைத்து திசைகளிலும் நிகழ்ந்திருக்க வேண்டும். எனவே, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் ஹரப்பா நாகரிகத்தின் சில தடயங்களை கொண்டுள்ளது. ஆனால், தமிழர்கள் மட்டுமே அப்பண்பாட்டின் வழித்தோன்றல்கள் என்றும் குறியீடுகள் ஹரப்பா நாகரிகத்திலிருந்து பெறப்பட்டவை என்றும் கூறும் போது சிக்கல் எழுகிறது.
உண்மையில் பண்டைய குறியீடுகள் உலகளாவியவை. அறிஞர்கள் நெடுங்காலமாகவே, துவக்க எகிப்து மற்றும் ரோமானிய பண்பாட்டிலிருந்து மெசோஅமெரிக்க, தெற்காசிய பண்பாடு வரை விரவியிருந்த வடிவம், குறியீடு மற்றும் செயல்பாடுகளின் வியத்தகு ஒற்றுமைகளை குறிப்பிட்டுள்ளனர். இவ்வொற்றுமைகள் பண்பாட்டுப் பரவலை மட்டுமன்றி மானுட உள்ளத்தின் ஆழ்மன செயல்பாடுகளையும் பறைசாற்றுகின்றன. ஆம், ஹரப்பா மூதாதையரின் நினைவெச்சங்கள் தமிழர்களின் ஆழ்மனதில் இருந்திருக்கலாம், ஆனால், அவர்கள் மட்டுமே அந்நினைவுகளை சுமந்திருக்கவில்லை.
சிவகளை மற்றும் இரும்பு யுகம்
இவ்வாண்டின் துவக்கத்தில், தமிழக அரசு, “இரும்பின் தொன்மை – தமிழ்நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் காலக்கணக்கீடுகள்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டது. இப்புத்தகத்தில் தமிழக முதல்வர், “அறிவியல் பூர்வமான காலக்கணக்கீடுகள், தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகம் கி மு 2953 மற்றும் கி மு 3345 க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்ததை உறுதி செய்கின்றன”.
நான் Outlook ல் எழுதிய கட்டுரையில், கரிமத்துண்டுகளின் காலக்கணக்கீட்டை அதன் அருகில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மீது ஏற்றும் முறையின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தேன். அக்கட்டுரையில் நான் கீழ்க் கண்டவாறு கூறியிருந்தேன்: இறுக மூடிய தாழியிலிருந்து சேகரிக்கப்பட்ட நெல் மணியின் காலம் கி மு 1155. அதே அகழ்வாய்வு குழியில் (A2), தாழி 1ன் அருகே சேகரிக்கப்பட்ட கரித் துண்டின் காலம் கி மு 3259 எனக் கணிக்கப் பட்டுள்ளது. அதே தாழியின் அருகில் சேகரிக்கப்பட்ட பீங்கான் துண்டின் காலம் OSL முறைப்படி கி மு 2427 என்று கண்டறியப்பட்டுள்ளது. இதே வகையில், மேற்குறிப்பிட்ட 10 மீ × 10 மீ அகழாய்வுக் குழியில் சேகரிக்கப்பட்ட பொருட்களின் காலக்கணக்கீட்டில் தொன்மையான காலமே இரும்புப் பொருட்களின் காலமாக வரையறை செய்யப் பட்டுள்ளது. அக்குழி அகழப்பட்ட இடம் இடுகாடு என்பதால், பண்டைய காலத்திலேயே அதிகம் அகழப்பட்டதும், அடுக்கு கலைந்ததும் ஆகும். அதனால், 2000 ஆண்டுகள் இடுகாடாக இருந்த நிலத்திலிருந்து சேகரிக்கப்படும் பொருட்களின் வகைகளிலும் அதிக மாற்றங்கள் இல்லாமல் இருந்தன என்ற கூற்றை வலுவான ஆராய்ச்சி ஆதாரங்கள் இல்லாமல் தொல்லியல் வல்லுநர்கள் ஏற்கமாட்டார்கள்.
நான் மேலும் Science இதழில் வெளியான அரிசோனா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் கில்லிக் கின்கட்டுரையை மேற்கோள் காட்டியிருந்தேன். அக்கட்டுரையில் ஆசிரியர், அகழ்வாய்வில் சேகரிக்கப்படும்
கரிமத்துண்டுகளின் காலத்தை கலைப் பொருட்களோடு தொடர்புபடுத்துவதைக் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். Frontline பத்திரிக்கை, அதே ஆசிரியரின், கரிமத்துண்டுகளின் காலமும் இரும்பு பொருட்களின் காலமும் ஒன்றே என்கின்ற கருத்தை சொல்லும் மற்றொரு கட்டுரையை வெளியிட்டது. இக்கட்டுரையை ஒருவேளை எனது கட்டுரைக்கு பதிலாகவும் கருதலாம். நான் உடனடியாக பேராசிரியரிடம் விளக்கம் கேட்டேன். கீழே எங்களது கடித பரிமாற்றங்களை கொடுத்துள்ளேன். இப்பரிமாற்றங்களை நான் The Wire இதழிலும் பகிர்ந்துள்ளேன்.
1 மார்ச் , 2025 அன்று கீழ்க்கண்ட மின்னஞ்சலை பேராசிரியருக்கு அனுப்பினேன்:
Frontline இதழில் வெளியான தங்களது கட்டுரையில், மூன்று வெவ்வேறு தாழிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கரித் துண்டுகள் அனைத்தும் பண்டைய கால கரித் துண்டுகளாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் இந்த கரித் துண்டுகள் இறுக மூடிய தாழியிலிருந்து சேகரிக்கப் படவில்லை. மாறாக, மக்கள் நடமாட்டம் உள்ளதால், மாறுதல்களுக்கு உட்படும் இடுகாட்டுக் குழிகளிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. என் நினைவில் பிழையில்லையெனில் இந்த மூன்று மாதிரிகளும் 100 சதுர மீட்டர் நிலப் பரப்பிற்குள் சேகரிக்கப் பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒரே குழியில், இறுக மூடிய தாழிக்குள் இருந்த நெல்மணியின் காலம் கி மு 1153, ஆனால் உடைந்த தாழியின் அருகில் சேகரிக்கப்பட்ட கரித் துண்டின் காலம் கி மு 3259. அதே தாழியிலிருந்த (A2,தாழி 1) பீங்கான் துண்டின் காலம் கி மு 2459. இது கரித்துண்டின் காலத்திற்கு ஏறத்தாழ 800 ஆண்டுகள் பிந்தையது”.
அவரிடமிருந்து 3 மார்ச் 2025 அன்று பெறப்பட்ட பதில் மின்னஞ்சல்:
“நீங்கள் காலம் கணிக்கப்பட்ட மூன்று பழமையான கரித் துண்டுகள் மண்ணிலிருந்து தனித்தனியே சேகரிக்கப் பட்டவை என்று கருதுவதில் பிழை உள்ளது. ஆனால் இதில் இரண்டு கரித்துண்டுகள் தாழியின் உள்ளிருந்து சேகரிக்கப் பட்டவை (அறிக்கையின் அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). அலகு A3ல் தாழிகளின் உள்ளிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் காலம் வேறுபடுவது (தாழி 3ன் உள்ளிருந்த நெல் மணியின் காலம் 2950 ± 30 BP, தாழி 1ல் இருந்த கரித் துண்டின் காலம் 4540 ± 30 BP) பின்னால் கணிக்கப்பட்ட காலம் தவறென்று சுட்டாது. இதனை நான், பெரும்பாலான புதைகுழிகளைப் போல் இப்புதைகுழிகளும் மிக நீண்ட காலத்திற்கு பயன்பாட்டில் இருந்தது எனக் கொள்வேன். 4500 BP காலக்கட்டத்தில் ஒரே ஒரு மாதிரி மட்டுமே இருந்திருந்தால் நான் எச்சரிக்கைக் கொண்டிருப்பேன். ஆனால், இந்த காலக்கணக்கு வேறு இரு மாதிரிகளின் இதே போன்ற காலக்கணக்குடன் ஒத்திருப்பதால் (தாழியின் உள்ளே ஒன்று, தாழியின் வெளியே ஒன்று), இந்த காலக்கணக்கீட்டை நான் ஏற்றுக் கொள்ள முனைகிறேன்”.
இதற்கு நான் கீழ்க்கண்டவாறு 15 மார்ச் 2025ல் பதிலளித்தேன்:
“அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்யுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது இது: “சில தாழிகளில் மூடிகள் இறுக மூடியிருந்தன. இதனால் தாழிக்குள் மண் ஊடுருவல் தடுக்கபட்டது. மூடி உடைந்த தாழிகளில் மண் ஊடுருவி நிறைந்துள்ளது. இரும்பு பொருட்கள் தாழியின் உள்ளேயும் வெளியேயும் காணப்படுகின்றன. தாழியினுள் பொருட்கள் அடிபாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அறிக்கையில் எங்கும் வெளிப்படையாக, கரித்துண்டின் மாதிரிகள் தாழியின் உள்ளிருந்து சேகரிக்கப் பட்டதாய் குறிப்பிட படவில்லை. மாறாக, ஆய்வுக் குழியிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப் பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது. தாழிக்குள்ளிருந்து மாதிரிகள் சேகரிக்கப் பட்டிருந்தால், அது வெளிப்படையாக, நெல் மணிகளை குறிப்பிட்டது போல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும்”.
பேராசிரியர் 12 ஏப்ரல் 2025 ம்நாள் பதிலளித்தார்:
“நீங்கள் இந்த கேள்விகளை, அவ்விடத்தை அகழ்ந்த தொல்லியல் ஆய்வாளர்ளிடம் கேட்க வேண்டும். இதன் முதல் கேள்விக்கு மட்டுமே நான் பதிலளிக்க முடியும். ஆராயப்பட்ட இடங்கள் இடுகாடுகள் என்பதால் அவ்விடங்களில் இரும்பு தயாரித்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அங்கு காணப்படும் இரும்புக் கழிவுகள் நிச்சயம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. அறிக்கையில் இரும்பு உலையும் விவரிக்கப் பட்டுள்ளது. ஆனால், நானறிந்த வரையில், இவற்றிற்கு கதிரியக்க கரிமக் காலக்கணிப்பு (radiocarbon dating) இன்னும் செய்யப்படவில்லை. மீண்டும் சொல்கிறேன், நீங்கள் இக்கேள்விகளை தொல்லியல் ஆய்வாளர்களிடமே கேட்க வேண்டும். எழுதப்பட்ட அறிக்கையை மதிப்பீடு செய்ய மட்டுமே நான் கேட்டுக்கொள்ளப் பட்டேன்”.
பேராசிரியருடனான என் கடித பரிமாற்றம் முழுவதையும் Frontline இதழுக்கு அனுப்பி, தொல்லியல் ஆய்வாளர்களிடமிருந்து பதிலைக் கோரியுள்ளேன். இதுவரை இதழிலிருந்து எந்த பதிலும் இல்லை.
முடிவுரை
நான் ஒருபோதும் கீழடி மற்றும் சிவகளை ஆய்வுகள் முக்கியமானவை அல்ல எனக் கூறவில்லை. இடுகாடு அல்லாத தளத்திலிருந்து ஏராளமான கலைப் பொருட்கள் அகழ்வாய்வில் சேகரிக்கப்பட்ட வகையில் கீழடி முக்கியமானது. இது போன்றே, தமிழ்நாட்டில் வேளாண்மை நாம் முன்பு நினைத்திருந்ததை விட முன்னதாகவே துவங்கியதை சிவகளை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் தொன்மையை நிறுவ குறைபாடுள்ள, அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படாத முயற்சிகளை மேற்கொள்ளுவது துரதிர்ஷ்டமானது. இப்போதையத் தேவை, சமரசங்கள் ஏதுமற்ற முறையான பகுப்பாய்வுகளே. ராக்கிகடி மற்றும் பஹாஜில் நடைபெறும் ஆய்வுகளுக்கும் இதே நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.
இந்திய பண்பாட்டின் தொன்மை ஐயத்திற்கு இடமில்லாதது. அதுபோலவே, தமிழ் மொழியும், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. தமிழ் பண்பாடும் உலகளவில் புகழ் பெற்றதே. அறிவியல் பூர்வமாக நிறுவ இயலாத கூற்றுகளை இத்தொன்மையை பறைசாற்ற பயன்படுத்தக் கூடாது. தொல்லியல் ஆய்வு தேசிய, பிராந்தியவாதிகளின் கருவியாக மாறிவிடக் கூடாது.
P A கிருஷ்ணன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர். இவர் பல்வேறு பத்திரிக்கைகளுக்கும் இதழ்களுக்கும் தொடர்ந்து பங்களிப்பாற்றுகிறார்.
No comments:
Post a Comment