பலுசிஸ்தான் பெண் போராளிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் பாக். வீரர்கள் 200 பேர் பலி
குவெட்டா: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் விடுதலைப் படையைச் (பிஎல்ஏ) சேர்ந்த பெண் போராளிகள் இருவர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் 200 பேர் உயிரிழந்ததாக பிஎல்ஏ தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தன்னாட்சி கோரி பிரிவினை வாதிகள் போராடி வருகின்றனர். இதனால் அங்கு பலுசிஸ்தான் விடுதலைப் படையினருக்கும், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பலுசிஸ்தானில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீது இரண்டாம் கட்ட ‘ஹெராப்’ ஆபரேசன் நடவடிக்கையை பிஎல்ஏ அமைப்பினர் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை தொடங்கினர். இந்த தாக்குதல் 40 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்தது. இந்த தாக்குதலில் தற்கொலைப் படை பெண்களை பிஎல்ஏ களம் இறக்கியது.
‘ஆசிபா மெங்கல்’ என்ற பெண் தீவிரவாதி வாகனத்தில் வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்று நாஸ்கி நகரில் உள்ள பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இவர் பிஎல்ஏ அமைப்பில் கடந்த 2023-ம் ஆண்டு சேர்ந்துள்ளார். தற்கொலைப் படையில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் சேர்ந்துள்ளார். தீவிர பயிற்சி பெற்று, தற்போது ஐஎஸ்ஐ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளார்.
இதேபோல் ஹவா பலூச் என்ற பெண் குவாதர் பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளார். பலுசிஸ்தானில் 2 இடங்களில் பெண் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசிப் உறுதி செய்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந் பலூச் கூறுகையில், ”பலுசிஸ்தானின் கரன், மஸ்தங், டம்ப் பான்சி, குவெட்டா மற்றும் நாஸ்கி ஆகிய இடங்களில் பிஎல்ஏ தீவிரவாதிகள் 40 மணி நேரத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் ராணுவம், போலீஸார், எல்லை பாதுகாப்பு படையினர் என 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். 17 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்’’ என்றார்.
ஆனால் பலுசிஸ்தான் முதல்வர் சர்பரஸ் புக்தி கூறுகையில், ”பிஎல்ஏ தாக்குதலில் 17 வீரர்கள், பொது மக்கள் 31 பேர் உயிரிழந்தனர்” என்றார். பாகிஸ்தான் ராணுவம் கூறுகையில் பலுசிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் தீவிரவாதிகள் 133 பேர் கொல்லப்பட்டனர் என்றார்.
எங்களை பாகிஸ்தான் படை எதிர்கொள்ள முடியாது: பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக ஹவா பலூச் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ‘பலூச் தேசமே, இன்று உங்களின் சகோதரிகளில் ஒருவர் பஞ்சாபி ராணுவத்தை எதிர்கொள்கிறார். தற்போது பலூச் மக்கள் தைரியத்துடன் போராட முன்வர வேண்டும். நமக்கு வேறு வழியில்லை.
பாகிஸ்தான் நம்மை எதிர்கொள்ள முடியாது. இன்று மகிழ்ச்சியான நாள். நாங்கள் எதிரியை எதிர்கொள்கிறோம். பலுசிஸ்தான் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் கைவிடப்படமாட்டார்கள் என்பதை நாம் எதிரிக்கு தெரிவிப்போம். போர் வேடிக்கையானது. நாங்கள் எதிரிகளுக்காக காத்திருக்கிறோம். எதிரிகள் கோழைகள். அவர்கள் தொலைவில் இருந்து தாக்குதல் நடத்துகின்றனர்.
அவர்களுக்கு நேரில் வர தைரியம் இல்லை. வாங்க, வாங்க, நாங்கள் இன்று உங்களுக்காக காத்திருக்கிறோம். பலூச் பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களை நீங்கள் இன்று எதிர்கொள்வீர்கள். பலூச் பெண்களை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை இன்று நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு வீடியோ பதிவில் ஹவா பலூச் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment