Monday, November 22, 2021

அரசாங்கத்தைக் கவிழ்த்து புரட்சிகர அரசு அமைவதற்கான கூட்டுச் சதிதான் சூரியாவின் ஜெய்பீம் - கலியமூர்த்தி IPS

 அரசாங்கத்தைக் கவிழ்த்து புரட்சிகர அரசு அமைவதற்கான கூட்டுச் சதிதான் சூரியாவின் ஜெய்பீம் திரைப்படம் என முன்னாள் காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி IPS குற்றச்சாட்டு..

https://tamil.oneindia.com/news/chennai/a-controversy-erupts-over-ex-dsp-kaliyamoorthy-s-comments-against-jai-bhim-439887.html




இது தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கலியமூர்த்தி IPS எழுதியுள்ள கடிதம்: மேற்கு மண்டலத்தில் 35 ஆண்டுகள் பணிபுரிந்தவன் என்ற முறையில் தங்கள் குடும்பத்தினர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. இதை எழுதும் இன்றுகூட (21.11.21)கொள்ளையனை துரத்தி சென்ற S.I பூமிநாதன் என்பவர் கீரனூர் அருகில் கொள்ளையர்களால் வெட்டி கொல்லப்பட்டார் செய்தி கேட்டு கொதித்து எழுதுகிறேன்.
தங்களுடைய கதைக்களம் 1995 மற்றும் அதற்கு முன்பும், பின்பும் கோவை சரகம் முழுமைக்கும் Crime Party தலைமையேற்று நூற்றுக்கணக்கான கொலை, கொள்ளை வழக்குகளைக் கண்டுபிடித்தவன் என்ற முறையில் உங்களுக்கு சில கேள்விகள். 1985 முதல் கோவை பகுதியில் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் வீட்டை உடைத்து, ஆட்களை தாக்கி பணம், நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதில்லை. வீட்டில் உள்ள திருமணமாகாத பெண்கள் ;தாய்மார்களையும் கத்தி முனையில் கூட்டு சேர்ந்து பலாத்காரம் செய்வார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா? நான் சம்பவ இடம் போகும் பொழுது எத்தனை பேர் என் கால்களைப் பிடித்து கதறி இருக்கிறார்கள் ;பணம் போகட்டும் பலாத்காரம் செய்ததை எழுதிவிடாதீர்கள், மானம் போய்விடும் என்று கதறிய குடும்பத்தைத் தாங்கள் பார்த்ததுண்டா? உங்கள் உறவினர்களை விசாரித்துப் பாருங்கள் எவரேனும் இருக்கக்கூடும்.(போகட்டும்).
"ஜெய்பீம்" கதையில் இறந்துப் போனவன், இரண்டு கொலை வழக்குகள் உட்பட 39 கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவன் என்பதை மட்டும் ஏன் மறைத்தீர்கள்? நீங்கள் நேர்மையானவர் என்றால் அதையும் சொல்லி இருக்கலாமே? இதற்கு உள்நோக்கம் இல்லையா? ஏன் மறைத்தீர்கள்? நீங்கள் எல்லாம் நல்லவர்களா? (போகட்டும்) கதை துவக்கத்தில் கடலூர் மத்திய சிறை ஜெயிலர், ஜாதி பாகுபாடு காட்டி, முதலியார், செட்டியார், தேவர், கவுண்டர் என்று ஜாதி பெயரை சொல்லி வெளியில் அனுப்புவதும் குறவர், இருளர், ஒட்டர் என ஜாதிப் பெயரைக்கூறி தனிமைப் படுத்துவதும், அவர்களை Crime party போலிசார் ஜெயிலருக்குப் பணம் கொடுத்து ஆடுமாடுகளைப்போல விலைக்கு வாங்குவதும் இதுவரை தமிழகக் காவல் துறை வரலாற்றில் நடந்ததுண்டா? நடக்காததை நடந்ததாகக் காட்டும் தங்களின் நோக்கம் என்ன? நேர்மையான நோக்கமா? உள்நோக்கம் இல்லையா?


இதில்தான் உங்களுடைய கூட்டு சதியே மறைந்துக் கிடக்கிறது. குடியாட்சி முறையை அழிக்கவேண்டும் என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்க வேண்டும். அரசை முடக்கவேண்டும் என்றால், அரசு எந்திரங்களை முடக்க வேண்டும். அரசு எந்திரங்களை முடக்க வேண்டுமென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைய வேண்டுமென்றால், அதை பாதுகாக்கும் காவல்துறையும், சிறைத்துறையும், முடக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து சாதியினரும் உள்ள காவல், சிறைத்துறையில் மேல் சாதி, கீழ்சாதி என பிரிவினையை ஏற்படுத்தி அதன் கலகம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு கெட வேண்டும்.அதன்மூலம் குடியாட்சி அரசை கவிழ்த்து, தாங்கள் விரும்பும் புரட்சிகர ஆட்சி அமைய வேண்டும், நாடு துண்டாடப்பட வேண்டும், சீனா போன்ற அந்நிய சக்திக்கு விலை போகவேண்டும். இதுதானே உங்களுடைய திட்டம்.இது இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B படி குற்றமில்லையா? காவல் துறை என்ன செய்துக்கொண்டிருக்கிறது? ஆயிரம் உண்டெம்மில் சாதி-எனில், அநீதிகண்டு கொதிப்பதெம் நீதி. தீயில்பூத்தத் தாமரை நாங்கள்-சூரியக் கதிர்களால் தீய்ந்திட மாட்டோம். இவ்வாறு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறிப்பு:திரு கலியமூர்த்தி,IPS அவர்கள் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர். 35 ஆண்டு காலம் காவல் துறையில் பணியாற்றிவிட்டு, தமிழ்கூறும் நல்லுலகின் தன்னம்பிக்கை மேடைகளில் நன்னம்பிக்கை விதைத்துவருபவர். 100 நாள்களில் பல்வேறு தலைப்புகளில் 80 கூட்டங்களுக்கு மேல் பேசி, உலக அளவில் கின்னஸ் சாதனை புரிந்தவர்.தன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் உலகமறிந்த மேடைப்பேச்சாளரான இவர்களை சவுதி அரேபியாவில் சந்தித்து நீண்ட நேரம் பேசியபோது இவர்களின் தமிழும் வெளியுலக அறிவும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.எங்கள் ஊர்(தஞ்சை)காரர்.

No comments:

Post a Comment