Friday, November 5, 2021

பாட்னா மோடி கூட்டத்தில் குண்டுகள் வெடித்த வழக்கு; 4 சிமி தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை; 2 பேருக்கு ஆயுள், இருவருக்கு 10 ஆண்டு சிறை

நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் தொடர் குண்டுகள் வெடித்த வழக்கு; 4  இந்தியன் முஜாகிதீன்  தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை; 2 பேருக்கு ஆயுள், இருவருக்கு 10 ஆண்டு சிறை: என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு


பாட்னா தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்பிறகு பாட்னா நீதிமன்றத்தில் இருந்து குற்றவாளிகள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். படம்: பிடிஐ

பாட்னாவில் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டம் நடந்த பகுதியில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் 4 தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக, அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரச்சாரம் செய்தார். இதன்படி கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நரேந்திர மோடி பங்கேற்று பேச இருந்தார்.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள்

அன்றைய தினம் காலையில் பாட்னா ரயில் நிலைய கழிவறையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து பாட்னா காந்தி மைதானத்தில் உத்யோக் பவன் அருகே 2-வது குண்டு வெடித்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு மதியம் 12.மணி அளவில் காந்தி மைதான வளாகத்தில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. பிற்பகலில் காந்தி மைதான பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஒரு குண்டு வெடித்தது.
ஒட்டுமொத்தமாக 8 குண்டுகள் வெடித்து சிதறின. 4 வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன. இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 6 பேர் உயிரிழந்தனர். 90 பேர் படுகாயம் அடைந்தனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தி இருப்பது தெரியவந்தது.

பாட்னா காந்தி மைதானத்தில் வெடிகுண்டு வைக்க முயன்றபோது தவறுதலாக குண்டுவெடித்து இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அன்னூல் அன்சாரி பலத்த காயமடைந்தார். சில நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், ஜார்க் கண்டை சேர்ந்த 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என் பதால் அவரது வழக்கு மட்டும் சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதர 10 பேர் மீதான வழக்கு விசாரணை பாட்னாவில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் 9 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 27-ம் தேதி நீதிபதி குர்விந்தர் சிங் மல்ஹோத்ரா தீர்ப்பளித்தார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் பக்ருதீன் என்பவர் விடுதலை செய்யப்பட்டார்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் நேற்று தண்டனை விவரங்களை நீதிபதி குர்விந்தர் சிங் மல்ஹோத்ரா அறிவித்தார். இம்தியாஸ் அன்சாரி, ஹைதர் அலி, நோமன் அன்சாரி, முகமது முஜிபுல்லா அன்சாரி ஆகிய 4 தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

உமர் சித்திக், அசாருதீன் குரேஷி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், அகமது ஹூசைன், பெரோஸ் அஸ்லமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. முகமது இப்திகார் ஆலத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இல்லையெனில் 9 பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்படும் என்று நீதிபதி குர்விந்தர் சிங் மல்ஹோத்ரா தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

பாட்னா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 9 பேரும் பாட்னாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் கயா தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

மோடியை கொலை செய்ய சதி

தீர்ப்பு குறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறும்போது, "அன்றைய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை குறிவைத்து பாட்னா தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. மனித வெடிகுண்டு மூலம் மோடியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டிருந்தது. பாட்னா ரயில் நிலையத்தில் வெடிகுண்டை வைத்த தீவிரவாதி பலத்த காயத்துடன் போலீஸில் சிக்கியதால் சதித் திட்டம் அம்பலமானது. எங்கள் தரப்பில் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்க கோரினோம். எனினும் 4 பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தன.

குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது பாட்னா போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய மனு மகராஜ் கூறும்போது, "பாட்னா ரயில் நிலையத்தில் வெடிகுண்டை வைத்தபோது தவறுதலாக குண்டுவெடித்தது. இதில் பலத்த காயமடைந்த தீவிரவாதி இம்தியாஸ் அன்சாரியை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் நரேந்திர மோடியை கொலை செய்ய தீட்டப்பட்டிருந்த சதித் திட்டம் தெரியவந்தது. எனினும் எதற்கும் அஞ்சாமல் திட்டமிட்டபடி நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். காலதாமதம் ஆனாலும் நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment