Friday, November 5, 2021

சமுக நீதி காக்க பட்டியல் சமூக இட ஒதுக்கீடு காக்க தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டும்

மனுதாரர் குடும்பத்துடன் தேவாலயத்திற்குச் செல்கிறார். அவர் வீட்டில் கிறிஸ்தவ அடையாளங்கள் உள்ளன என்று கூறி அவரது சாதி சான்றிதழை எந்தவித ஆவணமும் இன்றி ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.





 

   
 
 

தேவாலயம் செல்வதால் பெண் மருத்துவரின் பட்டியலின சாதி சான்றிதழை ரத்து செய்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கடந்த 2013ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண் மருத்துவர் ஒருவர் 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு ஒன்றில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அப்பெண் கூறுகையில், “நான் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மதுரை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம் பயின்று தற்போது தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன். நான் இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். எனது, தந்தையும், தாயும் இதே வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், நான் இதே வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்துவரை திருமணம் செய்து கொண்டேன். இதற்கான வீடியோ ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. நான் தொடர்ந்து இந்துவாகவே உள்ளேன். என்னுடைய சாதி சான்றிதழிலும் இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்றே உள்ளது.

இந்த சூழலில், நான் அரசு மருத்துவர் நியமனத்திற்கான தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றேன். அப்பொழுது நடைபெற்ற சாதி சான்றிதழ் சரிபார்ப்பின்போது நான் மாவட்ட ஆட்சியர் முன் ஆஜராகி, இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ்களை வழங்கினேன். நான் இந்து முறைப்படிதான் எனது திருமணம் நடந்தது என்பதற்கான ஆதாரங்களையும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் வழங்கினேன். ஆனால், அவர்கள் எதையுமே பொருட்படுத்தாமல், எனது வீட்டில் கிறிஸ்தவ இலட்சினை உள்ளது என்றும் எனது கிளினிக்கில் கிறிஸ்தவம் தொடர்பான சிலுவை உள்ளதாகவும் கூறி எந்தவித ஆவணங்களும் இல்லாமல் எனது இந்து பட்டியலின சாதி சான்றிதழை கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்துவிட்டனர். எனவே, எனது சாதி சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தேன்” என விவரித்தார். இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி எம். துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் தாய், தந்தை இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதன் அடிப்படையில், மனுதாரரும் இந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் பெற்றுள்ளார்.

இதற்கிடையே,  மனுதாரர் வீட்டில் கிறிஸ்தவ இலட்சினை இருந்தது என்றும் கிறிஸ்தவ மதம் தொடர்பான அடையாளங்கள் இருந்தன என்றும் அதனால் அவர் கிறிஸ்தவர் என கூறுவது ஏற்புடையது அல்ல.

அவர் குடும்பத்துடன் தேவாலயத்திற்குச் செல்கிறார் என்று கருதி அவருடைய இந்து பட்டியலின சாதி சான்றிதழை ரத்து செய்ததும் ஏற்புடையது அல்ல. ஒவ்வொருவரும் மற்றொரு மதத்தை சார்ந்தவரை, மற்றொரு சமுதாயத்தைச் சார்ந்தவரை முறைப்படி உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும். பிறர் பழக்க வழக்கங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்பு நமக்கு கற்றுக்கொடுத்த பாடம். எனவே மனுதாரர், குடும்பத்துடன் தேவாலயத்திற்குச் செல்கிறார். அவர் வீட்டில் கிறிஸ்தவ அடையாளங்கள் உள்ளன என்று கூறி அவரது சாதி சான்றிதழை எந்தவித ஆவணமும் இன்றி ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் பரந்த மனப்பான்மையுடன் தெளிவாக, மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் சாதி சான்றிதழை ரத்து செய்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், முன்பு மனுதாரருக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மீட்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

 




No comments:

Post a Comment