Sunday, November 14, 2021

இராவணனின் பெயர் பொறிக்கப்பட்ட பம்பரகஸ்தலாவை பிராமி கல்வெட்டு

 இராவணனின் பெயர் பொறிக்கப்பட்ட பம்பரகஸ்தலாவை கல்வெட்டு

என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/122     4 Nov 2019

இராவணனின் பெயர் பொறிக்கப்பட்ட ஓர் பிராமிக் கல்வெட்டு பம்பரகஸ்தலாவை என்னுமிடத்தில் காணப்படுகிறது. பம்பரகஸ் தலாவ நாகமலை, நாகபர்வத மலை எனும் பெயர்களில் அழைக்கப் படுகிறது. யாள வனவிலங்கு சரணாலயத்தின் வடகிழக்கு பகுதியில் குமண காட்டின் மத்தியில் நாகமலை அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் இங்கு நாகவழிபாடு நிலவியமையால் இப்பெயர் உண்டானது எனக் கூறப்படுகிறது. எனினும் இம்மலை ஓர் இராட்சத நாகம் படமெடுத்தபடி இருப்பது போன்ற அமைப்பை உடையதால் நாகமலை எனப் பெயர்பெற்றது எனவும் கூறப்படுகிறது.

பண்டைய காலத்தில்  தென்கிழக்கில் இருந்த இராவணனின் முக்கிய உப நகரங்களில் ஒன்றாக நாகமலை விளங்கியிருக்க வேண்டும் என நம்பப் படுகிறது. இங்கிருந்தே இராவணன் உகந்தை மலை சிவாலயம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளான் எனக் கூறப்படுகிறது. உகந்தையின் தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் பம்பரகஸ்தலாவை எனும் நாகபர்வத மலை உள்ளது.

இங்கு கண்டு பிடிக்கப்பட்ட 38 பிராமிக் கல்வெட்டுக்களில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் ஒன்றாகும். இக்கல்வெட்டில் “பருமக ராவண ஜிதி ஷோகிலி லேன சகஸ” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இது பெருமகன் இராவணனின் மகள் ஷோகிலியின் குகை எனப்பொருள் படுகிறது.
இக்கல்வெட்டு ஆங்கிலேய ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டு பிற்காலத்தில் பேராசிரியர் பரணவித்தாரணவினால் ஆய்வு செய்யப்பட்டு ஆங்கிலமொழியில் 1970 ம் ஆண்டு “Inscription of Ceylon Volume-1” எனும் நூலில் 515 வது கல்வெட்டாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இக்கல்வெட்டு நூலில் 40 ஆம் பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் “பருமக வணிஜ திசஹ லேன சகஸ” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் “The Cave of the chief Tissa the merchant is given to the sangha” என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள இராவணன் மற்றும் ஷோகிலி ஆகிய பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. ராவண என்பதற்குப் பதிலாக திஸ்ஸ என எழுதப்பட்டுள்ளது. எனவே இதில் இராவணன் எனும் பெயர் வெளிப்பட்டு விடக் கூடாது என நினைத்தே இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டின் மூலம் இராவணனுக்கு ஷோகிலி எனும் பெயரில் ஓர் மகள் இருந்தமை தெரிய வருகிறது. ஆனால் இராவணனுக்கு 6 ஆண் பிள்ளைகள் இருந்தது பற்றியே நூல்கள் கூறுகின்றன. எனவே ஷோகிலி எனும் மகள் இராவணனின் மனைவியர் ஒருத்தியின் மகளாக இருக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.














இருட்டடிப்பு செய்யப்பட்ட இராவணனின் பெயர்

இக்கல்வெட்டிலே இராவணனின் பெயர் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்டது ஏன்? 7000 வருடங்களுக்கு முன்பு தீவிர சிவபக்தனாக இருந்த மாபெரும் சக்கரவர்த்தி இராவணன் இத்தனை தொண்மை வாய்ந்த இராவணனின் பெயர் ஓர் முக்கிய தொல்பொருட் சின்னம் மூலம் உலகிற்குத் தெரியவந்தால், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நாகரீகங்களில் வாழ்ந்தவர்களை விட இராவணன் காலத்தால் முற்பட்டவன் என்பது உறுதியாகி விடும் என்பதனாலா? அல்லது ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டு நூல் வடிவமாகிய மகாவம்சம் போன்ற நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ள விடயங்கள் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதனாலா? அல்லது இந்நூல்களில் இலங்கையின் முதல் மன்னன் எனக் குறிப்பிடப்பட்டுள்ள விஜயனுக்கு முன்பு இராவணன் என்பவன் இருந்தான் என்ற உண்மை தொல்லியல் ரீதியில் நிறுவப்பட்டுவிடும் என்பதனாலா? அல்லது இதுவரை உலகில் மிகத்தொன்மை  வாய்ந்தவை எனக் கருதப்படும் சுமேரிய கல் வெட்டுக்களை விட இலங்கைக் கல்வெட்டுக்கள் காலத்தால் முற்பட்டவை எனக் கருதப் பட்டு விடும் என்பதனாலா? எதை உண்மையாக்க இராவணன் பெயரை மறைத்தார்கள்? அறிஞர்களும், ஆய்வாளர்களும் சிந்திக்க வேண்டிய விடயம் இது.  
http://nksthiru.blogspot.com/2020/04/blog-post_61.html 
 
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

No comments:

Post a Comment