Wednesday, April 19, 2023

கோத்தகிரி வனத்துறை அமைச்சர் சட்டவிரோத 4 கீமீ ரோடு

 


நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி சாலை அமைப்பு - அமைச்சர் மருமகனுக்கு நோட்டீஸ் ; 3 பேர் மீது வழக்குப்பதிவு

அமைச்சர் ராமசந்திரனின் மருமகன் சிவகுமாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்திற்கு சாலையை இணைக்கும் வகையில், வனப்பகுதியில் கைவிடப்பட்ட சாலையில் வனத்துறை அனுமதி இல்லாமல் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

FOLLOW US: 
Share:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மேடநாடு எஸ்டேட் காப்பு காட்டின் வழியே செல்லும் சாலை அமைத்த 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டம் உயிர்க்கோள காப்பகங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல இம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் வனவிலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது. கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு அருகில் அமைந்துள்ள மேடநாடு வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, மான்கள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும், இருவாச்சி பறவை போன்ற அரியவகை பறவையினங்களும் வசித்து வருகின்றன. இதன் காரணமாக இப்பகுதி சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கி வருகிறது. மேலும் மேடநாடு வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


கோத்தகிரி வனச்சரக பகுதியில் உள்ள கர்சின் எஸ்டேட் முதல் மேடநாடு எஸ்டேட் வரை உள்ள சுமார் 4 கிலோமீட்டர் நீளம் 2.1 மீட்டர் அகலமும் கொண்ட காப்பு காற்றின் வழியே செல்லும் வழித்தடத்தில் முன் அனுமதி பெறாமல் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்தாகவும், தனியார் தேயிலைத் தோட்டத்துக்குச் சாலை இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி சாலை அமைத்திருப்பதாகவும் வனத்துறையினருக்குப் புகார் வந்தது. 

https://tamil.abplive.com/news/coimbatore/the-forest-department-has-issued-a-notice-to-the-minister-s-son-in-law-for-constructing-an-encroachment-road-in-the-nilgiri-forest-111755

இது குறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் அறிவுறுத்தலின் பேரில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில் கோத்தகிரி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்தினர். மேலும் சட்ட விரோதமாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதும் உறுதியானது. இதையடுத்து அனுமதி பெறாமல் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட எஸ்டேட் மேலாளர் பாலமுருகன், கனரக இயந்திர ஓட்டுநர்கள் உமர் பரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய 2 பேர் என மொத்தம் 3 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சட்டவிரோத பணிக்குப் பயன்படுத்திய வாகனங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரனின் மருமகன் சிவகுமாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்திற்கு சாலையை இணைக்கும் வகையில், வனப்பகுதியில் கைவிடப்பட்ட சாலையில் வனத்துறை அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு சாலை அமைக்கும் பணிகளை செய்து இருப்பதாகவும், இது தொடர்பாக சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, “உரிய அனுமதியின்றி வனப்பகுதிக்குள் சாலை விரிவாக்கம் செய்தவர்களை கைது செய்து வழக்குப் பதிந்துள்ளது தமிழ்நாடு வனத்துறை. மேலாளர் மட்டுமின்றி எஸ்டேட் உரிமையாளர் மீதும்  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.




 

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...