Wednesday, April 19, 2023

தலித் கிறித்தவர்

அன்னிய கிறிஸ்துவ சர்ச் உள்ளே விகிதாசார அடிப்படையில் பிஷப் முதல் அனைத்து நிர்வாக பதவியிலும் மதம் மாற்றப்பட்ட எஸ்சி ஜாதியினருக்கு ஒதுக்க வேண்டும் - அல்லது மைனாரிட்டி சலுகைகள் நிறுத்த வேண்டும்


’மதம் மாறிய கிறித்தவ பட்டியலின பிரிவினருக்கு சலுகைகள் வழங்க வேண்டும்’ என்ற தீர்மானம் ’தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு’ நேரெதிரானது!
இந்த தீர்மானத்தின் மூலம் திராவிட ஸ்டாக்கிஸ்டுகள் ’முதலை கண்ணீர்’ வடிக்கிறார்கள்; அவர்களின் கரிசனம் ’ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஊளையிடுவதற்கும்’ சமமானது!
திமுக அரசின் பிற்போக்குத்தனமான தீர்மானத்தால் எரிமலையாய் வெடிக்க இருக்கிறது தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றப் போராட்டங்கள்.!
சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே ”திராவிட மனு”!!
பட்டியல் பிரிவிலிருந்து கிறித்தவ மதம் மாறியவர்களுக்கும் பட்டியல் பிரிவினரை போன்றே இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பெற இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் ‘தேவேந்திர குல வேளாளர்’ சமுதாய மக்களுக்கு ஏற்புடையதல்ல. இந்த தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டதும், மிக மிகப் பிற்போக்குத்தனமானதும், தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு நேரெதிரானதும் ஆகும். எனவே, தமிழக அரசின் இன்றைய தீர்மானத்தை புதிய தமிழகம் கட்சி முற்றாக நிராகரிக்கிறது.
”சாதியை ஒழிக்க இட ஒதுக்கீடு வழங்குகிறோம்” என்று முழங்கி; முற்போக்கு, திராவிடம் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ”சாதியை ஒழிக்க முடியாது; மதம் மாறினாலும் தீண்டாமை, வன்கொடுமை போன்றவற்றையும் ஒழிக்க முடியவில்லை” என்று வாக்குமூலம் அளித்து, ஒரு தவறான தீர்மானத்தையும் இன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார். இதற்கு பெயர் தான் ”திராவிட மனு”.
தேவேந்திர குல வேளாளர்கள் ”தங்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்க வேண்டும்” என்று பல்லாண்டு காலம் போராடி வருவதை அறிந்திருந்தும், அதை மூடி மறைத்து விட்டு ’தேவேந்திரகுல வேளாளர்களை மீண்டும் பட்டியல் பிரிவிலேயே நிரந்தரமாக அடைத்து, சாதிய சகதியில் என்றென்றும் சிக்கித் தவிக்கட்டும்’ என்ற தீய எண்ணத்தோடு ஸ்டாலின் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
ஏழு உட்பிரிவுகளையும் ஒன்றாக்கி ”தேவேந்திரகுல வேளாளர்” என்ற ஒரே பெயரில் அழைத்திடவும், பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி மிகப் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும், அப்பட்டியலில் ஏற்கனவே இருக்கக்கூடியவர்களின் இட ஒதுக்கீடு எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் தேவேந்திரகுல வேளாளர்களின் மக்கள் தொகைக்கேற்ப ’சிறப்பு இட ஒதுக்கீடு’ வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வந்ததையும், அதன் விளைவாக தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் பெற்றதையும், இன்னும் பட்டியல் வெளியேற்றத்தை வலியுறுத்திப் போராடி வருவதையும்; புதிய தமிழகம் கட்சியின் அன்றைய போராட்டங்களை எதிர்கொண்ட திமுகவினர் அதை நிறைவேற்றித் தருவோம் என்று கொடுத்த வாக்குறுதிகளையும் ’பிற வாக்குறுதிகளை’ போல முற்றாக மறந்துவிட்டு தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு நேரெதிராக இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது கண்டனத்திற்குரியது.
லட்சோப லட்சம் தேவேந்திரகுல வேளாளர்களின் ஒட்டுமொத்தமான லட்சியம் இட ஒதுக்கீட்டைக் காட்டிலும் ’சுயமரியாதையையும், சுய கவுரவமும், பட்டியல் வெளியேற்றமும்’ தான். பட்டியல் பிரிவில் இருக்கின்ற வரையிலும் தங்களுக்கான சுயமரியாதையையும், கௌரவத்தையும், முன்னேற்றத்தையும் பெற இயலாது. எனவே பட்டியல் வெளியேற்றம் ஒன்றே தீர்வு என்றே இன்று வரையிலும் அதற்கான போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது; நிச்சயம் போராடி வென்றெடுப்போம்.
”தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேறக் கூடாது” என்ற தீய நோக்கத்தோடு ஏற்கனவே முன்னேறிச் சென்றவர்களையும் பின்னோக்கி இழுப்பதற்கு சமமாக மதம் மாறிய கிறித்தவ தேவேந்திரகுல வேளாளர்களை மீண்டும் பட்டியல் பிரிவில் சேர்க்க திமுக அரசு முயல்வதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள இயலாது.
”மதம் மாறிய கிறித்துவ பட்டியல் இனத்தவர்களை பிற்பட்டோர் பட்டியலிலிருந்து (BC) மிகப் பிற்பட்டோர் பட்டியலுக்கு (MBC) மாற்றி அவர்களுக்கான உரிமைகளை வழங்கிடுங்கள்” என்று நாங்கள் கடந்த 30 வருடங்களாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வலியுறுத்தி வருகிறோம். பலமுறை ஆட்சியிலிருந்தும் அதை செய்வதற்கு திமுகவினருக்கு மனமுமில்லை; வக்குமில்லை. இந்நிலையில் ’கிறித்தவ மதம் மாறிய பட்டியல் இனத்தவர்களுக்கு பட்டியலினத்தவருக்கு நிகராக சலுகைகள் வழங்க வேண்டும்’ என்பது முதலைக்கண்ணீர் வடிப்பதற்கும்; அவர்களின் கரிசனம் ’ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஊளையிடுவதற்கும்’ சமமானது.
கிறித்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் இனத்தவர்களை மிகப் பிற்பட்டோர் பட்டியலில் வைத்து, தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எவ்விதமான மத்திய அரசின் சட்டங்களும் தடையாக இல்லை. மேலும் மாநில அரசாலேயே இதைச் செய்து முடிக்கவும் முடியும். இது குறித்து 1996லிருந்து ஏறக்குறைய 27 வருடங்களாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதைக் கூடச் செய்ய மனமோ, துணிவோ, நேர்மையோ இல்லாமல் ’பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றுங்கள்’ என்று போராடக்கூடிய மக்களை ”மீண்டும் மீண்டும் பட்டியலுக்குள்ளேயே அமுக்க வேண்டும்” என்ற நயவஞ்சக எண்ணத்தோடு அணுகும் ’திராவிட ஸ்டாக்கிஸ்ட்’ ஆட்சியாளர்களின் ”திராவிட மனு” நடைமுறையை புதிய தமிழகம் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள கிறித்தவ மத மாறிய பட்டியல் இனத்தவர் பெரும்பாலானோருக்கு திமுக இன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கக்கூடிய தீர்மானத்தின் மீது உடன்பாடு இருக்காது என்றே கருதுகிறேன். குறிப்பாக தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அடர்த்தியாக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தேவேந்திர குல வேளாளர்களுக்கு இதில் எவ்வித உடன்பாடும் இல்லை.
பட்டியலினத்தவருக்கு நிகராக இட ஒதுக்கீடு பெற பட்டியலினத்தவர்களையும் ’பட்டியல் பிரிவில் சேர்க்க வேண்டும்’ என்கிறீர்களே? இட ஒதுக்கீடுகளை வைத்துத்தான் தொலைக்காட்சி அதிபர்களாக முடிந்ததா? கல்லூரி, பல்கலைக்கழகங்களின் தாளாளர்களாக முடிந்ததா? தொழிற்சாலைகளின் அதிபர்களாக முடிந்ததா? வணிக நிறுவனங்களில் உரிமையாளர்களாக முடிந்ததா? சமூக நீதி என்பது ஓடாமல் தேங்கிக் கிடக்கக்கூடிய சாக்கடை அல்ல! அது என்றென்றும் நில்லாமல் ஓடக்கூடிய நீரோட்டமாக இருக்க வேண்டும்.! இதைப் புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு இருக்கக்கூடிய சட்டமன்ற பெரும்பான்மையை வைத்து எதை வேண்டுமென்றாலும் பேசலாம், செய்யலாம் என்று கருதினால், அதை மக்கள் சக்தியைக் கொண்டு தடுப்போம் என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.
’ஜாதியை ஒழிப்போம்’ என்று பேசி வந்த ’திராவிட ஸ்டாக்கிஸ்ட்கள்’ இப்பொழுது ”ஜாதி என்பது மாறுதலுக்குட்பட்டது அல்ல, மதம் மாறினாலும் ஜாதி மாறாது; ஒழியாது” என்று தனது சட்டமன்ற உரையில் புது வியாக்கியானம் கொடுக்கிறார். இதிலிருந்தே திராவிட ஸ்டாக்கிஸ்ட்களின் முற்போக்கு; ஜாதி ஒழிப்பு முகமூடி வெட்டவெளிச்சமாகிறது.
”பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற வேண்டும்” என்ற கோஷம் அரசியல் ரீதியானதோ பொருளாதார ரீதியானதோ அல்ல! ’ஹரிஜன், ஆதிதிராவிடர், பட்டியல், அட்டவணை’ போன்ற சொற்றொடர்கள் உள ரீதியான தாக்குதல்களைத் தொடுத்து கோடான கோடி மக்களின் மனதில் தாழ்வு சிக்கலை உருவாக்கிய காரணத்தினால் தான் அம்மக்களால் அரசியல், சமூக, பொருளாதார தளத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. எனவே தான் “தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்ற ஒரு உயரிய சித்தாந்தத்தை புதிய தமிழகம் கட்சி முன் வைத்தது. இந்த சித்தாந்தங்களின் அடிப்படையில் தான் உலகின் பிற நாடுகளில் நீதி மறுக்கப்பட்ட சமுதாய மக்கள் விடுதலை பெற்று இருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாமல் இடம்-ஒதுக்கீடு என்ற ஊசிப்போன பழைய சித்தாந்த பல்லவியை திமுக மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டு இருக்கக் கூடாது என எச்சரிக்கிறேன்.
பட்டியல் பிரிவில் உள்ள தேவேந்திர குல வேளாளர் அல்லாத பிற பிரிவினர் எவராவது மதம் மாறிய பின்னரும் பட்டியல் பிரிவு அந்தஸ்து பெற விரும்பினால் அதற்கு புதிய தமிழகம் கட்சி எவ்விதமான ஆட்சேபனையும் தெரிவிக்காது. அதே சமயத்தில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்காமல் பட்டியல் பிரிவில் சிறு மாற்றம் கொண்டு வருவதையும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் திமுகவின் இந்த தீர்மானம் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டால், அடுத்த 50 அல்ல, 100 வருடத்திற்கும் தேவேந்திரகுல வேளாளர்கள் ‘அர்ஜன், தலித், பட்டியல் பிரிவு, அட்டவணை பிரிவு’ என்ற முகவரியற்ற அடையாளங்களைச் சுமந்து கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இப்பொழுது திமுக அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த தீர்மானம் தேவேந்திரகுல மக்களின் சுயமரியாதைக்கும், முன்னேற்றத்திற்கும் முட்டுக் கட்டையாகும்.
இந்துவோ, கிறித்தவர்களோ, எம்மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் ’தேவேந்திர குல வேளாளர்கள்’ என்ற ஒரே அடையாளத்துடன் விளங்கிட தேவேந்திர குல வேளாளர்கள் மக்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி, ’தேவேந்திர குல வேளாளர்’ என்ற சிறப்புப் பிரிவை உருவாக்கி அவர்களுக்கான உரிமைகளை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றுவதே உண்மையான சமூக நீதியும், சமநீதியும், பொதுநீதியும் ஆகும். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும், தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் நிறைவேற்றாமல், ’மதம் மாறிய கிறித்தவ பட்டியலின பிரிவினருக்கு சலுகைகள் வழங்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பது தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு நேரெதிரானது என்பதால் தமிழக அரசின் இத்தீர்மானத்தை நிராகரிக்கிறோம். ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளர்களையும் பட்டியலினத்திலிருந்து வெளியேற்றி மிகப் பிற்பட்டோர் அல்லது மிக மிகப் பிற்பட்டோர் என புதிய பட்டியலை உருவாக்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
- டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
19.04.2023.



தலித் கிறித்தவர்களுக்கான இடஒதுக்கீடு ஏற்கனவே தமிழக அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையை பெற்ற விஷயந்தான்.அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருக்கும் விஷயந்தான் இது.எனவே நேற்று சட்டசபையில் நேற்று கொண்டு வரபட்ட தீர்மானம் பாஜக நீங்கலாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதில் வியப்பில்லை.பாஜக மட்டும் முரண்பட்டிருக்கிறது.ஆனால், இப்படி ஒரு ஒதுக்கீடு தேவையேயில்லை என மத்தியில் இருக்கும் பாஜகவும் நினைக்கவில்லை.

மாறாக இந்த விஷயத்தை ஆய்வு செய்ய முன்னாள் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறது.அதை பாஜகவின் எம்.எல்.ஏ.வானதியும் சுட்டிக்காட்டி,இந்தத் தீர்மானமே தேவையில்லாதது என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் அதற்காக ஒரு Political Scoring Point ஐ தமிழகக் கட்சிகள் விட்டு விடுவார்களா என்ன? ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தராவிட்டால்,நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசும் நீதிமன்றமும் ஒப்புக்கொள்ளவில்லை என்று அரசியல் செய்யலாமே.
இவை ஒரு புறமிருக்க நடைமுறையில் இது நிறையச் சிக்கல்களை உருவாக்கும்.முதலில் இதை மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும். அது அரசியல் சட்டத்துக்கு முரணானது இல்லை என்று நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று தமிழ்நாட்டின் மொத்த மக்கட் தொகையில்,(இந்து) தலித் மக்கள் 22-25% இருப்பார்கள்.இப்போது அவர்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 18% தான் ஒதுக்கீடு உள்ளது.(மத்தியில் 15%).நாளை கிறித்துவ தலித்துகளையும் சேர்த்தால்,அவர்களின் பங்கு 30% வரை உயரலாம்.அப்போது இந்த 18% என்பது மிகக் குறைவு என்ற புகார்கள் வரும்.அதை உயர்த்த வேண்டிய கட்டாயம் நேர்ய்ம்.ஆனால் ஏற்கனவே இருக்கும் 69%க்கு எதிராகவே வழக்கு இருக்கிறது.(இங்கே பொருளாதார ரீதியில் பிற்பட்டவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு இன்னும் அமலுக்கு வரவில்லை).
அப்படிச் செய்யாமல்,இருக்கும் 18% க்குள்ளேயே கிறித்தவ தலித்துகளையும் கொண்டு வந்தால்,இப்போது இதை அனுபவத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நிச்சயம் ஒரு பின்னடைவு நேரும்.பொதுவாக, கிறித்தவ தலித்துகள்,இந்து தலித்துகளைவிட சற்று முன்னேற்றம் அடைந்தவர்கள் என்ற கருத்து இருக்கிறது.இது சில பிரச்னைகளை ஏற்படுத்தும்.
ஆனால்,இப்போது,இட ஒதுக்கீட்டுக்காக மட்டுமே பெயரளவில் இந்துவாக இருந்துகொண்டு,நடைமுறையில் கிறித்துவர்களாக இருக்கும் தலித் மக்கள் வெளிப்படையாகவே தங்களைக் கிறித்தவர்களாக அறிவித்துக் கொள்ளலாம்.ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலேயே,கிறித்தவர்களின் எண்ணிக்கை,ஒரு 5-8% உயரலாம்.அந்த அளவுக்கு இந்து மக்கட் தொகையின் சதவீதம் குறையவும் செய்யும்..இந்த மாற்றஙகள் எல்லாம்,பல புதிய சமூகவியல் பிரச்னைகளைத் தோற்றுவ்விக்கக் கூடும்..

No comments:

Post a Comment