Sunday, March 26, 2023

தெலுங்கு திரைப்படம் பலகம்

பலகம் தெலுங்கு படம்!
ஒரு சாவும் அதற்கு நாம் செய்யும் சடங்கு சாங்கியங்களும் எப்படி நம் குடும்ப உறவுகளை, சமூகத்துடனான இணைப்பை, நம் பண்பாட்டு கூறுகளைடன் பின்னிபினைந்துள்ளது என எதார்த்தமாக உண்மைதன்மையுடன் பேசும் படம்.
இது தெலுங்கு படம் என்பதைவிட தெலுங்கானா படம் என்பதே சரி, தெலுகு படம் என நாம் இதுவரை காண்பது, ஆந்திர தெலுங்கர் எடுக்கும் படங்களே, முன்பு சென்னையில் தெலுங்கு படம் எடுத்தபோது இங்குள்ள தெலுங்கில் பேசிய படங்கள், ஆந்திர்ர்களிடம் சென்றவுடன் கிருஷ்ணா கோதாவரி கலச்சாரத்தை அதுவும் கம்மநாயுடுகளின் ஆதிக்கத்தில் சிறைபட்டு கமர்சியல் மசாலா தயாரிப்புகூடமாகிவிட்டது, அத்திபூத்தால்போல் சில நல்ல படங்கள் வருகின்றன!
தெலுங்கானாவை காட்டினால் அவர்களின் மொழியை நக்கலாகவும், காமடி கேரக்டர்களாகவும் காட்டி வந்த தெலுங்கு படங்கள், இன்று தனி தெலுங்கானா வந்தவுடன் தன்போக்கை மாற்றியுள்ளது, உண்மையில் மாறவேண்டியநிலை, இல்லையேல் ஹைதிராபாத்தில் குப்பைகொட்ட முடியாத என தெரிந்துகொண்டுள்ளனர்.
தெலுங்கானா தெலுங்கர்கள் தங்கள் கலச்சாரத்தை தங்கள் வட்டாரவழக்கில் எடுப்பதுபோல் தமிழக தெலுங்கர்கள் எப்போது எடுப்போமோ ?கி.ராவின் கதைகளில் ஒன்றைகூட யாராவது முயற்சிக்கலாம், நானும் ஒரு உண்மை சம்பவத்தை கதையாக எழுதிய பல மாதங்கள் ஆகிறது. அதை திரைவடிவமாக்க முயற்சிக்கவேண்டும், எங்கள் தெலுங்கில் எங்கள் கலச்சாரத்தை பேசும் படங்கள் வரும் நாளே இங்குள்ள தெலுங்கர்களுக்கு பொன்னாள்!
சரி பலகம் பட விமர்ச்சனத்திற்கு வருவோம்!
இதை ஒரு மானுடவியல் ஆவணப்படம் என்றே கூறவேண்டும், ஆம் இழவு விழுந்தவுடன் ஆரம்பிக்கும் சடங்குகள் பதினோராவது நாள் வரையில் மிக அழகாக யதார்த்தவாதத்துடன் துல்லியமாக காண்பித்துள்ளனர். பாடை கட்டுவதில் இருந்து சுடுகாட்டில் இருந்து திரும்பிவந்து வீட்டிற்குள் நுழையும்முன் ரோங்கலி(தமிழில் உலக்கை)நடுவில் சாணி பொட்டு வைத்து, அதை தாண்டி வீட்டுக்குள் செல்வதுவரை அத்தனையும் துல்லியமாக(டீடைலிங்) செய்துள்ளனர்.
காஜுல குமரைய்யா என்ற பெரிசு( எந்த கிராம்ம், என்ன ஜாதி என தெரியாவிட்டாலும், தெலுங்கானா பிற்பட்ட வகுப்பு விவசாய குடும்பம் என தெரிகிறது) படம் ஆரம்பித்து பத்தே நிமிடங்கள்தான் வருவார், அதன் பின் பிணமாகி, சடங்குகள் வழியாக எப்படி பிரிந்து கிடக்கும் தன் குடும்பத்தை காக்கையாக ஒன்று சேர்க்கிறார் என்பதே கதையின் அவுட்லைன்.
இதில் குமரைய்யாவின் பேரன் சயுலு( பிரியதர்ஷி, மல்லேஷம் என்ற படத்தின் நாயகன்) பேத்தியாக காவியகல்யான், மகன்களாக ஜெயராம்,மிமி மது, மகளாக ரூபாலட்மி, மருமகனாக முரளிதர் கவுடு என அனைவரும் வாழ்ந்துள்ளார்கள்.
பாவா பாவாமருதி ஈகோ சண்டையானாலும், தொழில் செய்து கடனாளியான கதாநாயகன் தன் தாத்தாவின் சாவை சுயநலத்திற்கு உபயோகப்படுத்த முயற்சிப்பது, வீம்பு பிடித்த பெரியமகன், பாசம் பொங்கும் மகள், ஏன் ஊரில் உள்ள ஒவ்வோருவரும் கதையின் ஊடே அழகாக கோர்க்கப்பட்டுள்ளனர், தையல்கார்ராக வரும் நரசி கேரக்டர்,அவரே படத்தின் இயக்குனர்(வேணு யெலன்தி) முதல் ஊர் பஞ்சாயத்தார் வரை அனைவரும் ஒரு நிஜ ஊர்போலவே வாழ்ந்துள்ளார்கள்!
முதல் பாதி கொஞ்சம் நீளம், கதாபாத்திரங்களின் குணநலன்களை காட்டி கட்டமைக்க பல காட்சிகள், தேவையில்லாத நகைசுவையை குறைத்து இன்னும் நீளத்தை குறைத்திருக்கலாம், இரண்டாம் பாதியில் எழும் படம், கடைசி காட்சியில் அந்த தெலுங்கானா நாட்டுபுற பாடலில் கண்களை குளமாக்குகிறது!
காந்தாராவோ பலகமோ இங்கு சக்கைபோடு போடுவது எதனால்? உண்மையில் நெடிவிடி பேசாமல் ஒருபக்கம் குறியீடுகளில் அடைக்க ஒரு கூட்டம், மறுபக்கம் அரைத்த மாவை அரைக்கும் மசாலா படகூட்டம், இதன் நடுவில் நம் கலச்சாரத்தை கேலி செய்யாமல், சமூகத்தின் விரிசல்களில் கடப்பாறைவிட்டு நோண்டாமல், உள்ளதை உள்ளபடி சொல்லும் படங்களுடன் மக்கள் தங்களை பொருத்திபார்த்து ஒன்றிவிடுகின்றனர். இந்த படத்தில் வரும் காட்சிகளை நேரடி வாழ்வில் பார்காதவர், அதே போன்ற பாவாக்களை அத்தமாக்களுடன் பழகாதவர் யாருமுண்டோ?
ஒரு குடும்ப ஈகோ சண்டை பாச டிராமா எப்படி இவ்வளவு நல்ல படமாக ஆனது என்பதில் உள்ளது சூட்சம்ம்!
படத்தை தவறாமல் பாருங்கள், தெலுங்கர்கள் தெலுங்கிலேயே கட்டாயமாக பாருங்கள், தமிழ் சகோதர்ர்கள் முடிந்தால் தெலுங்கில் (ஆங்கில சப் டைடில் உள்ளது) பாருங்கள்!
கொங்கு தெலுங்கில் இப்படியொரு படம் எடுக்க ஆசை, கதை தயார் காலம் கனியட்டும்!




 https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0geKm41Xiy8oyAjn6wpbeynYqAN3rYttyrvCQg6J43Exu5kCTRXFd5Wci9yJ6z5MYl&id=534623204

No comments:

Post a Comment

2026 TN Assembly election result region wise

Results by region Region Seats TVK SPA AIADMK+ Northern Tamil Nadu 69 44 8 17 Western Tamil Nadu 68 27 17 24 Southern Tamil Nadu 51 25 23 3 ...