Monday, March 27, 2023

யாழ் நகரத்திலே திருவள்ளுவரின் வரைபடம் வெளியிடப்பட்டது.

 திருவள்ளுவ நாயனாராக வழிபடப்படும் திருவள்ளுவரின் வரைபடம்.

திருவள்ளுவரின் திருமேனி . K Kandaswami 
முகநூலில் திருவள்ளுவர் திருமேனியின் உருவத் தோற்றம் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது . இந்தப் பதிவில் அது குறித்து சில விஷயங்களைச் சிந்திக்கலாம் என்று உள்ளேன் . இந்தப் பதிவில் உள்ள சில கருத்துக்கள் ஏற்கனவே முகநூலில் அன்பர்கள் பலரும் கூறிய விஷயங்களே எனினும் , என்னுடைய சில கருத்துகளையும் இங்கு அதனோடுத் தொகுத்து இந்தப் பதிவில் எழுதுகிறேன் .
திருவள்ளுவர் திருமேனியின் உருவத் தோற்றம் குறித்து நாம் ஏன் இன்று சிந்திக்க வேண்டும் ?
தமிழகத்தில் முந்நூறு ஆண்டுகால கிறித்துவ சமயப் போலிப் பரப்புரைகளாலும் , பின்னர் அதனோடு ஒட்டி இருபதாம் நூற்றாண்டு முதல் இன்று வரை நடைபெற்றுக் கொண்டுள்ள திராவிட இயக்கத் தீயுரைகளாலும் , தமிழ் இனம் தொலைத்த பல தமிழ்ப் பண்பாட்டு சின்னங்களில் ஒன்று – திருவள்ளுவரின் உருவத் தோற்றம் . 1967 முதல் இன்று வரையிலுமுள்ள திருவள்ளுவர் தோற்றம் குறித்து சிந்தித்தால் இது விளங்கும் .
சித்தாந்த சைவத்துக்கு திருக்குறள் – திருவள்ளுவர் தொடர்புகள் என்ன ?
சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ‘ திருக்குறள் ‘ சிறந்த நீதிநூல்களில் ஒன்று . ‘ ஸ்ம்ருதி ‘ எனப்படும் ‘ தர்மசாஸ்திர ‘ நூல்களில் ஒன்றான திருக்குறள் சித்தாந்த சைவர்களால் ஏற்றிப் போற்றப்படும் நூல்களில் ஒன்று . திருவள்ளுவர் ஸ்ம்ருதி ஆசாரியர் என்ற நிலையில் சித்தாந்த சைவர்களால் கொண்டாடப்பட்டு வருவதும் கண்கூடு !
சைவத் திருமுறைகளில் , திருக்குறள் நூலில் உள்ளக் கருத்துகள் ‘இலை மறை காய் மறையாக’ உள்ளன எனினும் , முதன்முதலில் நேரடியாக இதனைத் தம்முடைய நூலில் குறித்தவர்கள் சைவ சமய சந்தான ஆசாரியர்களில் ஒருவரான ஸ்ரீமத் உமாபதி சிவாசாரியார் ஸ்வாமிகளே ஆவார்கள் . அவர்களது காலம் பொது யுகம் 1311 , சுமார் பதினான்காம் நூற்றாண்டு . அவர்கள் இயற்றிய சைவ சித்தாந்த சாத்திர நூலான “ நெஞ்சு விடு தூது ” என்ற நூலில் நேரடியாகவே திருக்குறள் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்கள் .
“ நிலைத் தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய் வைத்த சொல் ” எனப் போற்றுகின்றார்கள் .
எம் ஆசாரியர் மேற்கோள் காட்டின அந்த நாள் முதலாக சைவ சமய தோத்திர மற்றும் சாத்திர நூல்களுக்கும் உரை கண்ட சைவ சமயத்தின் மாபெரும் உரையாசிரியர்கள் , தாங்கள் எழுதிய உரை நூல்களில் திருக்குறளைப் பல இடங்களில் மேற்கோள் காட்டிச் சென்றார்கள் . இந்த நிலை இன்று வரை உள்ளது .
சித்தாந்த சைவத்தின் கருத்துகள் பலவற்றுக்கும் உடனாக திருக்குறளின் பல குறட்பாக்களின் கருத்து நலத்தோடு பொருத்தி அதனைத் திருமுறைகள் / சாத்திர நூல்கள் / பிற சைவ நூல்களின் உள்ள செய்யுள்களில் வைத்து சமய / சந்தான ஆசாரியர்கள் மற்றும் புலவர்கள் பாடல்களை இயற்றி உள்ளனர் . இதனை ‘ ஒப்புமைப் பகுதி ‘ என்றனர் நம் முன்னோர் .
சித்தாந்த சைவத்துக்கு திருக்குறளுக்கும் உள்ள உடன்பாட்டு விஷயங்கள் பல உள்ளன என்று கண்டோம் .
இனி சித்தாந்த சைவத்துக்கு உடன்பாடாக அவரது திரு உருவத் தோற்றம் எவ்வாறு இருக்கலாம் என்பன பற்றி சிந்திக்கலாம் :
1 . ‘ திருவள்ளுவர் திருமேனியில் பூணூல் உண்டா ?
ஞானவெட்டியான் என்ற நூலில் உள்ள மேற்கோள் வரிகளை காட்டி திருவள்ளுவருக்கு பூணூல் உண்டு என்று நிறுவுகிறார் ஓர் அன்பர் . எனவே பூணூல் இருந்தாலும் தவறு இல்லை , மேலும் ஸநாதன தர்மத்தின் எதிரிகள் கடந்த காலங்களில் ( உதாரணம் : Dr தேவநாயகம் & Dr .தேவகலா மோசடிக் கும்பல் ) திருக்குறளை தங்களுடைய கிறித்துவ சமயக் கூடாரங்களில் அவர்கள் நூலெனப் புகுத்த முயன்றது அன்பர்களுக்கு நினைவு இருக்கலாம் . இந்த மோசடிகளை தவிர்க்க திருவள்ளுவர் திருமேனிகளுக்கு பூணூல் அணிவிக்கலாம் . மேலும் அந்தணர்கள் தவிர வேறு ஜாதியினரும் பூணூல் அணிவது உண்டல்லவா .
2. திருவள்ளுவர் திருமேனி அமர்ந்த கோலமா ?
திருவள்ளுவர் ஸநாதன தர்மத்தின் ஸ்ம்ருதி / தர்மசாஸ்திர ஆசாரியர் என்று மேலே குறிப்பிட்டோம் , எனவே ஆசாரியர்களை ஆசனத்தில் அமர்ந்த கோலத்தில் வைப்பது சிறப்பு . ஓர் ஆசனத்தில் திருவடிகளை மடக்கியோ அல்லது ஒரு திருவடியை கீழாக ஒரு சிறிய ஆசனத்தில் திருவடிகள் படுவது போலவோ சுகாசன கோலத்தில் அமைப்பததோ சிறப்பு . முன்னர் மு கருணாநிதியின் திமுக அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவரை நின்ற கோலத்தில் வைத்து உள்ள ‘ கண்றாவி ‘ பொம்மையை இன்றும் நம்முடைய eye sore என்ற அளவில் என்று உள்ளது என அன்பர்கள் அறிவார்கள் .
3. திருவள்ளுவர் திருமேனிக்கு காவி வஸ்திரமா அணியப்பெறுவதா ?
திருவள்ளுவர் ஓர் இல்லற ஞானி என்பதும் , இல்லறத்தார் மட்டுமே காமத்துப்பால் குறித்து எழுத இயலும் என்பதும் நம் புரிதல் . திருவள்ளுவர் வெள்ளை ஆடை அணியப்பெற்று இருப்பதே சரி . “ திருவள்ளுவர் ‘ கவின் பெரும் கல்லாடை புனைந்து ‘ காமத்துப்பாலை ஆய்ந்து நூல் வடிவில் தந்தார் “ என்பது ஏற்புடையாதாக இல்லை , வெள்ளை வஸ்திரமே சரி !
4 . திருவள்ளுவர் திருமேனியில் கரங்கள்
சிலர் வெளியிட்டுள்ளது போல திருவள்ளுவரின் திருமேனியில் ஒரு கரத்தில் எழுத்தாணி வைப்பது சரியல்ல . அவர் ஸ்ம்ருதி நூலின் ஆசிரியர் என்பதைக் கூறினோம் , ஆசாரியர் / ஆசிரியர் என்பவர் ஆசனத்தில் அமர்ந்து அவர் விளக்கும் நூல்களை , அவர் தம் மாணாக்கர் பலர் அருகிருந்து அமர்ந்து எழுத்தாணி கொண்டு அவர்தம் விளக்கங்களை நூல் வடிவில் கொணர்வர் . ஆசாரியர் தாமே எழுத்தாணி கொண்டு நூலினை யாத்தார் என்பது சரியல்ல .
ஒரு கரத்தில் சின்முத்திரையும் , மற்றோர் கரத்தில் நூல் சுவடியினையும் ஏந்தி இருப்பதே ஆசிரியர் இலக்கணம் .
ஸ்ரீ தருமை ஆதீன வெளியிடான ‘ திருக்குறள் - உரை விளக்கம் ‘ நூலின் மேலட்டைப் படம் ஏறத்தாழ நாம் சொல்லும் விஷயங்களைக் கொண்டுள்ளது .
5. திருவள்ளுவர் திருமேனியில் செவிகள்
திருவள்ளுவர் ஸ்ம்ருதி நூலின் ஆசிரியர் என்பதால் அவரது இரு செவிகளிலும் குண்டலங்கள் அணியப்பெற்று இருக்கவேண்டும் . குண்டலங்கள் அணியப்பெறுதல் ஆசிரியக் கோலமாகும் .
6. திருவள்ளுவரின் ஜடாமுடி மற்றும் திருநீற்றுக்கோலம்

சித்தாந்த சைவ சமயத்தார் இடுவது போல , திருநீற்றுக் கோலமே அவரது சமய வாழ்வினை உறுதிப்படுத்தும் கோலமாகும் . தாடி , மீசை மற்றும் ஜடாமகுடம் தரித்து அவரது திருமேனியை சமைக்க வேண்டும்


ராஜசங்கர் விஸ்வநாதன்

தர்ம பூமியாம் சிவபூமியாம் ஈழத்திலே யாழ் நகரத்திலே வெளியிடப்பட்டது.
நந்திகொடியேந்தி சைவநீதியை பரவச்செய்யும் உருத்திர சேனை அமைப்பினர் இந்த நற்காரியத்தை செய்தார்கள்.

உருத்திர சேனையின் குழுவினர் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்தையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னின்று நடத்திய மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்து ஆசிகளை கோருகின்றேன்.
திருநீறு பூசி முப்புரி நூல் அணிந்து காவியாடையும் இடையாடையும் அணிந்து சிவச்சின்னங்களோடு சைவத்தின் திருமகனாய் திருவள்ளுவ நாயனார் காட்சி அளிக்கும் திருவுருவம் என்பது போற்றப்படக்கூடியது.
இந்த இடத்திலே ஒரு சிலர் திருவள்ளுவரை இப்படி சித்தரிப்பது ஆகம விரோதம் என குரல் எழுப்பியிருந்தார்கள். சைவ ஆகமங்கள் இவர்கள் கையிலே படும் பாட்டை நினைத்தாலே வருத்தம் மேலிடுகிறது. ஆகமப்படி பூணூல் அணிந்தோருக்கு காவி உடை கூடாது, ஆகமப்படி இல்லறத்தாருக்கு காவி கூடாது என அவர்களின் கருத்தாக இருக்கிறது.

யக்ஞோபவீதம் என்பது புனிதமானது முறைப்படி ஸந்நியாசம் எடுத்தவர்களுக்கே பூணூல் விலக்கு என்பது உண்டு. பல மரபுமுறைகளிலே ஸந்நியாசிகளும் பல சமயங்களிலே அல்லது எப்போதுமோ பூணூல் அணிந்தவர்களாக இருக்கும் முறை இருக்கிறது.
நாத, சித்த, ஸம்பிரதாயங்களிலே ஸந்நியாசம் எடுத்தவர்களும் பூணூல் அணிவதான முறை உண்டு. எனவே எந்த சைவ ஆகமத்திலே இப்படி முழுதாக விலக்கு என சொன்னால் எல்லோருக்கும் புரியும். இரண்டாவதானது இல்லறத்தாருக்கு காவி உடை அணிவிக்ககூடாது என்பது. அது குருபூசை செய்யப்படாத, இறைவனோடு முக்தி அடையாதா இல்லறத்தாருக்கே உண்டு.
ஸாலோக, ஸாமீப, ஸாரூப, ஸாயுஜ்ஜிய முக்திகளிலே ஸாலோக முக்தியை அடைந்துவிட்டார் என்றே கருதி சிவலிங்கமும் அமைக்கப்பெற்று பரிவார தேவதையாகவோ அல்லது சிவமூர்த்திகளிலே ஒன்றாக கருதப்பட்டு வழிபடப்படும் திருவள்ளுவருக்கு காவி கூடாது என வாதிடுவது எந்த ஆகமத்தின் படி என விளக்கினால் நன்று.
இறைவனின் உலகத்தை அடைதல், இறைவனின் அருகிலே இருத்தல், இறைவனின் ரூபத்தை அடைதல், இறைவனிலே முழுமையாக கரைதல் எனும் முக்திகளிலே ஸாலோக எனும் இறைவனின் உலகத்தை அடைதல் எனும் முக்தி அடைந்தவராகவே வழிபாடு செய்யப்படும்
திருவள்ளுவ நாயனாருக்கு பூணூல் கூடாது, காவி கூடாது வெள்ளுடை தான் அணிவிக்கவேண்டும் என கூறுவது தகாது.
சைவ ஆதீனங்களிலே வேளாக்குறிச்சி, துழாவூர் ஆதீனங்கள் வம்ச பரம்பரை ஆதீனங்கள். மற்ற ஆதீனங்கள் எல்லாம் குரு சிஷ்ய பரம்பரை ஆதீனங்கள்.
வம்ச பரம்பரை என்றால் துறவறம் ஏற்காத இல்லத்திலே மனைவியோடு இருந்தும் சைவ தர்மத்தை பேணும் ஆதீனங்கள் என பொருள்.
ஆதீனகர்த்தருக்கு பின்பு அவருடைய மகன் ஆதீனமாக பட்டமேற்பார்.
ஆதிசைவ ஆதீனங்களிலே உமையொருபாக ஆதீனமும் வம்ச பரம்பரை ஆதீனம், கூனம்பட்டி ஆதீனமும் வம்சபரம்பரையே.
இவ்வாதீனங்களிலே சிவலோக முக்தி அடைந்தவர்களுக்கு குருபூசையானது சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டே நடைபெறூகிறது.

இல்ல்றத்தார் என்பதால் பூசை புனஸ்காரங்களுக்கு விலக்கா என்ன?
எனவே இப்படியே சைவம் வேறு இந்து மதம் வேறு
நாங்கள் இந்துக்கள் அல்லர் சைவர்கள் என்றெல்லாம் உருட்டி
காவி கூடாது, நந்திக்கொடி கூடாது என சிவ அபச்சாரம் செய்யாமல்
நம்முன்னோர் ஏந்திய
காவிக்கொடியை ஏந்தி
சிவச்சின்னங்களை தரித்து
சிவபூமியாம் யாழ்பாணத்திலே சைவநீதி தழைக்க நம்மால் இயன்றதை செய்வோம்.
உருத்திர சேனை குழுவினருக்கு ஈசனருள் கிட்டட்டும்.

https://www.facebook.com/rajasankar/posts/pfbid0E4iQpPLBwqY55cm8kPHpsXZrbF72YmePEiTf2rcJbQFHQJ3EYjW5vBgWuYr3p3v2l?__cft__[0]=AZWhpkXn5sA82ChMv49J8HCc_1R-sOaOKFhgLg7xK0mqIl328Tg_80yw-rHtuKOzTd9GWSFq8YOlSU1pdEbc365tNZtesYScocMBZFj6Ew7DATFI2I_5BfiTy_XEcoaO-vG1oq8n-Xcx6CJY1zc94Cm4gIv55ysNnAhFeadEbc2aXA&__tn__=%2CO%2CP-R

No comments:

Post a Comment