சென்னை பல்கலையின் நீண்டகால Corpus மூலதன நிதி பாதியானது! ஒன்றரை ஆண்டில் ரூ.170 கோடி 'அவுட்' டிச 31, 2025
- நமது நிருபர் - நிதி நெருக்கடியில் சிக்கித்திணறும் சென்னை பல்கலையின் மூலதன நிதியும், 346 கோடி ரூபாயில் இருந்து, 176 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணைவேந்தர் இல்லாத ஒன்றரை ஆண்டுகளில், இந்த அளவுக்கு மூலதன நிதியில் கை வைக்கப்பட்டு உள்ளது, பல்கலையின் செயல்பாடுகளை முடக்கும் செயல் என, கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில், பல்கலைகளுக்கான துணைவேந்தரை நியமிப்பது முதல், நிதி பெறுவது வரை, அனைத்து விஷயங்களிலும், மத்திய அரசுடன், மாநில அரசு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, 10 ஆண்டுகளுக்கும் மேல், மாநில பல்கலைகளில் ஆராய்ச்சி திட்டங்கள் பெரிய அளவில் நடக்காததால், பல்கலை மானியக்குழுவின் நிதியில், 80 சதவீதத்துக்கும் மேல் கிடைக்கவில்லை.
அதேசமயம், தனியார் பல்கலைகள் பெருகிவிட்டதாலும், கலை அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காததாலும், மாநில பல்கலைகளிலும், அவற்றின் இணைப்பு கல்லுாரிகளிலும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.
முக்கியமாக, உயர்கல்வியில், ஆராய்ச்சியின் வாயிலாக பிஎச்.டி., பெறுவோரின் தகுதி குறைந்துள்ளதாக, பல்கலைகளின் வேந்தரும், தமிழக கவர்னருமான ரவி, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
பல்கலைகளில் நிரந்தர பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைந்ததும், ஆளுங்கட்சிக்கு கப்பம் கட்டிவிட்டு, தகுதியில்லாத பேராசிரியர்கள் பணிக்கு வருவதும்தான் இதற்கு காரணம் என, கூறப்படுகிறது. பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது தனி கதை.
முரண்பாடு 'தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம், மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவோம்' என, தி.மு.க., அரசு தெரிவித்த நிலையில், இதுவரை உயர்கல்விக்கான கொள்கை உருவாக்கப்படவில்லை.
இதனால், யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை கடைபிடிப்பதா, கைவிடுவதா எனத் தெரியாமல், மாநில பல்கலைகளின் பாடத்திட்டம் மற்றும் ஆட்சி மன்ற குழுவினர் குழம்பி உள்ளனர்.
மாநிலத்தின் மூத்த பல்கலையான சென்னை பல்கலையில், கடந்த 10 ஆண்டுகளில், 465 பேர் ஓய்வுபெற்ற நிலையில், அவர்களுக்கு, 95.44 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதற்கான வழக்கில், தமிழக நிதித்துறை செயலர் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்காக, சமீபத்தில் நடந்த ஆட்சி மன்ற குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு, பல்கலையின், 'கார்ப்பஸ் பண்ட்' எனும் மூலதன நிதியில் இருந்து, 170 கோடி ரூபாய் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதில், 74 கோடி ரூபாயை விடுவிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படி மூல தனத்தை எடுத்து செலவு செய்ததன் காரணமாக, பல்கலையின் மூலதன நிதி, 346 கோடி ரூபாயில் இருந்து, 176 கோடி ரூபாயாக குறைந்துவிட்டது. இத்தகைய போக்கு, மதுரை காமராஜர் பல்கலையை போன்று, சென்னை பல்கலையை முடமாக்கும் செயல் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். பல்கலையை பாதுகாக்கப்படுமா; பலிகொடுக்கப்படுமா என்பது, தமிழக அரசின் கையில்தான் உள்ளது.
No comments:
Post a Comment