Wednesday, August 3, 2022

மயிலாடுதுறை இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் கதற கதற கடத்திய கும்பல்

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக கடத்திச்சென்ற 15 பேர் அடங்கிய கும்பலால் பதற்றம் நிலவியது.


NEWS18 TAMIL தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன்(34). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். அதன்பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அந்தப் பெண் நிறுத்தியுள்ளார். ஆனால், அதன்பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து, அந்தப் பெண்ணின் வீட்டார் மயிலாடுதுறை போலீஸில் 2 முறை புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸார் இருதரப்பினரையும் அழைத்து பேசி இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15க்கும் மேற்பட்டோர், அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக் கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடிச் சென்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாகனத்தை விழுப்புரம் விக்ரவாண்டி டோல்கேட் அருகே போலீசார் மடக்கி பிடித்து, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். மேலும் கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் அவரது கூட்டாளிகள் மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விழுப்புரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

செய்தியாளர் - கிருஷ்ணகுமார்.Published by:Suresh V 




 

No comments:

Post a Comment