Saturday, April 10, 2021

தமிழ் புத்தாண்டு சித்திரையே பின்னுள்ள அறிவியல்பூர்வமான விஷயங்களும்

தமிழ் புத்தாண்டு சித்திரையே
பின்னுள்ள அறிவியல்பூர்வமான விஷயங்களும்

 
பிரபவ முதல் அட்சய வரை உள்ள ஆண்டுகள் எப்போதிருந்து நம்மிடையே வழக்கத்தில் உள்ளன.?
வராகமிகிரர் என்பவர் கி.பி. 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த கணிதவியல், வாணவியல், ஜோதிட அறிஞர்.. இவர் எழுதிய பிருகத் ஜாதகம் என்னும் நூலில் இந்த 60 ஆண்டு விபரங்கள்
உள்ளன..
தமிழகத்தின் மிகப் பழம்பெறும் சித்தர் போகர். இவரது சீடர் புலிப்பாணி என்பவர். இவர் எழுதிய புலிப்பாணி ஜோதிடம் என்னும் நூலில் இவ்வாண்டுக் குறிப்புகள் உள்ளது.
இடைக்காடர் என்ற இடைக்காட்டுச் சித்தர் 60 தமிழ் ஆண்டு வெண்பா என்று ஒவ்வொறு ஆண்டுக்கும் ஒவ்வொறு வெண்பா எழுதியுள்ளார்..
ஆக..
இந்த பிரபவ முதல் அட்சய வரை உள்ள வருடங்கள் தமிழ் பாரம்பரிய ஜோதிட வாணவியல் கணித பயன்பாட்டில் இருந்தது..இருக்கிகறது.
நேற்று எழுதி, இன்று ஒரு கதையைக் கூறி ..
இதைக் காரணமாகக் கொண்டு தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றை சிதைப்பது அறமன்று.
அப்புறம் பாரதிதாசனின் கவிதையோடு வருவார்கள்...
நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு "
அதாவது..
அறிவுக்கு ஒவ்வா அறுபது ஆண்டுகள் என்ற 19 ஆம் நூற்றாண்டு கதையை மேற்கோள் காட்டி சித்திரை என்பதை எதிர்க்கிறார் கவிஞர்..
அறிவுக்கு ஒவ்வா என்று அவரே காரணம்காட்டி சித்திரையை எதிர்ப்பது வியப்பான ஒன்று... இக்கதையே போலியான ஒன்று....இக்கதை கூறப்படுவதற்கு வெகுகாலம் முந்தியே தமிழர்களிடம் ஆண்டுப் பெயர்கள் இருந்தது.
தமிழகத்தின் பழம் பெரும் சித்தர் போகர்.
இவரது சீடர் புலிப்பாணி. இவர் எழுதிய எழுதிய புலிப்பாணி ஜோதிடம் என்னும் நூலில் 60 ஆண்டு பெயர்கள் உள்ளது..
சித்திரைதான் வருடப்பிறப்பு என்பதற்கு நேரடிச் சான்றுகள் உண்டா..?
நிச்சயமாக உண்டு..
( ஆனால் தை மாதம்தான் புத்தாண்டூ என்பதற்கான ஆதார இலக்கியச் சான்றுகள் எங்கும் இல்லை. இல்லவே இல்லை)
சித்திரைக்கு உள்ளது..
வழக்கமாய் அனைவரும் அறிந்த நெடுநல் வாடை பாடல்..
" தின்னிய மருப்பினும் ஆடு தலையாக " ...
12 இராசிகளில் முதல் ராசியான மேடம்.. மேடத்தில் சூரியன் நுழையும் முதல் நாள் சித்திரை 1. இதுதான் வருடத்தின் முதலாவது மாதம்..
கி.பி. 15 ம் நூற்றாண்டில்.. திருவாரூரைச் சேர்ந்த கமலை ஞானப்பிரகாசம் என்பவர் புட்பவிதி என்னும் ஒரு நூலை இயற்றுகிறார்.. தெய்வங்களுக்கு உகந்த பூக்களின் பட்டியலை பதிவிடுகிறார்..
பாடல் 20 இல்.. நான்காம் வரியில் ..
" சித்திரையை முதலாகக் கொள்க சிறந்தொரு மாத புட்பம் "
அதாவது சித்திரைதான் முதல் மாதம் என்று தெளிவாகவேச் சொல்கிறார்..
அகத்தியர் இயற்றிய பன்னீராயிரம் என்னும் நூலில் ...
" மேடமென்னும் ராசியாம் மதனிற்கேளு
மேலானா யசுவினி முதலாம்பாதம்
குலவியே கதிரவந்தான் வந்துதிக்க
வருச புருசன் அவதரிப்பானென்றே
பரிவுடன் உலகிற்கு நீசாற்றே"
உறுதியான பாடல்..
மேட ராசியில் அசுவினி முதலாம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம்தான் சித்திரை 1.
இந்நாளில் வருசபுருஷன் அவதரிப்பான்..
அதாவது சித்திரை முதல் தேதியே அவ்வருடப்பிறப்பாகும் என்பது பாடலின் பொருள்..
அப்புறம்....
தை தான் என்பவர்கள் வழக்கமாக கீழ்கண்ட பாடல்களுடன் வருவார்கள்..
"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
""தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்..
மேற்கண்ட பாடல்களில் தைமாதம் பற்றியக் குறிப்புதான் உள்ளன. தை மாதத்தை வருடப்பிறப்பு என்று எந்தப்பாடலும் சொல்லவில்லை..
அப்புறம்.... 15 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே கல்வெட்டில் ஆண்டுப் பெயர்கள் இருப்பதாக ஒரு உருட்டு. இதுவும் தவறு..
10 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே நிச்சயமான தொல்லியல் ஆவணங்களாக..
சோழர்காலக் கல்வெட்டிலும் இந்த ஆண்டுப்பெயர்கள் உள்ளன.
இராஜராஜச் சோழரின் ஸ்ரீரங்கப்பட்டினம் கல்வெட்டு. இக்கல்வெட்டில்
" பரிதாபி " என்னும் தமிழ் வருடம் குறிக்கப்பட்டுள்ளது.
( Epi.carnatica vol 3 no 140)
இராஜராஜனின் ஹோட்டூர் கல்வெட்டு. காலம் கி.பி.1007.
இக்கல்வெட்டில் " பிலவங்க " என்னும் தமிழ் வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
( Epi.indica vol 16 p.74)
ஆக.. 10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பாகவே அட்சய முதல் பிரபவ வரை உள்ள 60 தமிழ் வருடங்களின் பெயர்கள் வழக்கத்தில் இருந்தற்கு நிச்சயமான தொல்லியல் வரலாற்று சான்றுகள் ஏராளமாக உள்ளன.
அப்புறம்... தமிழ் புத்தாண்டு....
1921 ஆம் ஆண்டு நடந்த தமிழறிஞர்கள் கூட்டத்தில் தமிழ் புத்தாண்டு தை மாதம்தான் என்ற முடிவு எடுக்கப்பட்டதா.?
நிச்சயமாக இல்லை..
1921 ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில் ஒரு மாநாடு நடந்தது..
இது மீண்டும் 18.11.1935 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் திருவள்ளுவரும் திருக்குறளும் என்ற தலைப்பில் ஒரு மாநாடு நடந்தது.
இம்மாநாட்டில் மறைமலையடிகள், திரு.வி.க. ,நாவலர் சோமசுந்தர பாரதியார் மற்றும் பல தமிழார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் மறைமலையடிகள் தமிழ் புத்தாண்டை சித்திரைக்கு பதிலாக தை மாதம் கொண்டாடலாம் என்று ஒரு தீர்மானம் போட்டதாக ஒரு தகவல் பரவலாக பரவியுள்ளது. இது முழுக்க முழுக்கத் தவறானத் தகவல்.
மாநாடு நடந்தது உண்மை.. மாநாட்டில் மறைமலையடிகள் ஆற்றிய உரை 1935 ஆம் ஆண்டு பவ வருடம் வைகாசி மாத செந்தமிழ் செல்வி என்னும் இதழில் வந்தது. ( இணைப்பில் காண்க)
மறைமலையடிகள்.
திருக்குறளின் பெருமையை எடுத்துச்சொல்லி.. திருவள்ளுவர் பிறந்த தினமாக கிமு 31 ஐ அறிவிக்கிறார். இதையொட்டிய ஒரு தொடராண்டும் அறிவித்தார். திருவள்ளுவர் பிறந்த தினமாக அவர் வைகாசி அனுஷம்.. என்பதாக அறிவித்தார். இதே செய்தி 1955 ஆம் ஆண்டில் வெளிவந்த திருவள்ளுவர் திருநாள் மலர் என்னும் நூலில் வெளிவந்தது.
இவ்விரண்டிலும் திருவள்ளுவர் பெருமை மற்றும் அவர் பிறந்த தினம் பற்றித்தான் விவாதிக்கப்பட்டது.. தழிழ் புத்தாண்டு சித்திரையா.? தை ஆ.? என்ற விவாதம் இல்லவே இல்லை.. ஆக.. தமிழறிஞர்கள் கூடிய அந்தக் கூட்டத்தில் புத்தாண்டு பற்றிய இவ்விடயம் விவாதிக்கப்படவே இல்லை..
மறைமலையடிகள் அறிவித்தது வைகாசி அனுச நட்சத்திர நாள்தான் திருவள்ளுவர் தினம் என்றார்.. ஆனால் நடமுறைக்கு வந்ததோ தை 2. ஆகவே... எந்த ஒரு தமிழறிஞர் கூட்டத்திலும் தை தான் வருடப்பிறப்பு என்ற முடிவு எடுக்கப்படவில்லை..
1972 ஆம் வருடம் . கலைஞர் அவர்கள் தமிழக முதல்வர். அவ்வருடம். ஏப்ரல் 13 ஆம். நாள் ..சித்திரை 1. தஞ்சை பெரியகோவிலில் இராஜராஜன் சிலையை கலைஞர் திறந்து வைத்தார். தமிழகரசு வெளியிடும் திருக்கோவில் மலரில் சித்திரை 1 ஐ புத்தாண்டு என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்..
1972 வரை சித்திரைதான் தமிழ் புத்தாண்டு என்பதில் கலைஞருக்கே ஐயமில்லை....
ஆகவே... வரலாறு, இலக்கியம், தொல்லியல், பாரம்பரியம் என்று அனைத்துத் தரவுகளும் கூறுவது.. சித்திரை முதல் தேதியே தமிழ் புத்தாண்டு..
அன்புடன்..
மா.மாரிராஜன்.

 

 



" தமிழர்களின் தொடர் ஆண்டு "
தமிழ் வருடப்பிறப்பு சித்திரை முதல் தேதிதான் என்ற முந்தையப் பதிவு.
பிரச்சனை இதுவல்ல..
தமிழர்களின் தொடராண்டு முறைதான் பிரச்சனை.
60 வருட தொடராண்டு பொருத்தமா..? என்று ஒரு கேள்வி..
தமிழர்களின் தொடராண்டு முறை எங்கு பிரச்சனை.? எங்கு பிழை ஏற்பட்டது.? என்ற கேள்விக்குப் பிழை இல்லை..
சித்திரைக்குப் பதிலாக தை மாதத்தை புத்தாண்டாக ஏற்றால் பிழையெல்லாம் சரியாகிடுமா.? என்ற கேள்விக்கும் பதில் இல்லை...
தமிழர்களின் தொடராண்டு பிரச்சனையா..?
நிச்சயம் இல்லை..
கிராமத்தில் ஒரு பெரியவர் ஒருவரை பார்த்து .. ஐயா உங்கள் வயது என்ன.? என்று கேட்டால்...
70...71 இருக்கும்..
கர வருஷம் வைகாசி 10 ஆம் தேதி பிறந்தேன் என்பார்..
ஆக.. அவர் பிறந்த வருடம் 1951 என்று தெளிவாகக் கணிக்கலாம். அதற்கு முந்தை கர வருஷமான 1891 .. நிச்சயமாக பொருந்தாது..
எளிமையான .. துல்லியமான கணக்கீடு முறைதான் தமிழர்களுடையது..
தற்காலத்திற்கு சரிதான்.. கடந்த காலத்திற்கு..
கடந்தகால கல்வெட்டு சாசனங்களில் ஏராளமான வானியல் குறிப்புகள் உண்டு..
வருடம், மாதம், நாள், நட்சத்திரம், திதி, அமாவாஸை, பௌர்ணமி, சூரியகிரகணம் , மற்றும் பல விபரங்கள் ஒன்றோ இரண்டோ அனைத்துமோ இருக்கும்.
இதைக்கொண்டு காலத்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
துல்லியமான தமிழர்களின் வானவியல் கணக்கீடு.
இந்த கணக்கீடு முறையைக் கொண்டுதான் 1500 ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகளை கணித்து ஆவணப்படுத்தியுள்ளனர்..
இராஜராஜனின் கல்வெட்டு சாசனம் ..
சகம் வருடம் மற்றும் சில வானியல் குறிப்புகள்.
இதை பார்த்திப என்னும் தமிழ் தொடராண்டாக மாற்றி...
மேலும் சில சாசனங்களுடன் ஒப்பீடு செய்து..
இராஜராஜன் பதவியேற்ற நாள்..
985 ஆம் வருடம் ஜூலை மாதம் 18 ஆம் தேதி புனர்வசு நட்சத்திரம் என்று கணித்துள்ளார்கள்.
சகவருடம் இல்லாத வானியல் குறிப்புகளைக் கொண்டு ...
தஞ்சைப் பெரியகோவில் குடமுழுக்கு நடைபெற்ற நாள்...
1010 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10 நாள் சனிக்கிழமை.. என்று ஆவணப்படுத்தியுள்ளார்கள்.
உலகத்திலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்று நிகழ்வுகளின் காலத்தை .. வருடம், மாதம், நாள், கிழமை, நட்சத்திரம்..கொண்டு கணித்தது தமிழர்களின் கணக்கீடு முறையைக் கொண்டுதான்..
ஆய்வாளர்கள் பயன்படுத்தும் முக்கிய குறிப்பு....
" Chittrai .. Which is the first month of the tamil solar year."
ஆகவேதான் சித்திரையை தமிழர்களின் ஆண்டுத் துவக்க மாதம் என்கிறோம். இதில் மாற்றம் கண்டால் ஒட்டு மொத்த வரலாறும் பிழையாகும்..
அன்புடன்..
மா.மாரிராஜன்...
"காஞ்சிபுரத்து சித்திரைத் திருவிழா "
உத்தமச்சோழன் வழங்கியச் செப்பேடு.
காலம்.. கி.பி.986.
காஞ்சிபுரம் அரண்மனையில் உள்ள சித்திரக்கூடத்தில் அமர்ந்து அரசாணையை வெளியிடுகிறார்
உத்தமச்சோழர்.
கச்சிப்பேடு என்றழைக்கப்படும் காஞ்சி மாநகரில் எழுந்தருளிய ஊரகத்து தேவர் என்றழைக்கப்படும் உலகளந்தப் பெருமாள் கோவில். இக்கோவிலுக்கான நிவந்தங்களின் புதிய ஏற்பாடுகளை இச்செப்பேடு பதிவு செய்கிறது.
நிவந்தங்களின் ஒரு பகுதியாக இக்கோவிலில் நடந்த சித்திரைத் திருவிழா பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.
சித்திரைத் திருவிழாவானது ஏழு நாட்கள் நடைபெற்றது. இந்த ஏழு நாட்களுக்கான மொத்தச் செலவுகளையும் நான்குபேர் மட்டுமே ஏற்றுள்ளனர்.
விழாவிற்கான மொத்தச்செலவு
30 கழஞ்சு பொன்..
வருடம் தோரும் இந்த 30 கழஞ்சு வட்டியாக வரும்படி செய்யத் தேவையான முதலீடு 200 கழஞ்சு பொன். இந்த 200 கழஞ்சு பொன்னை நான்குபேர் நிவந்தமாக அளித்தனர்.
கம்புழான் பாடியார் என்பவர் 73 - 1/2 கழஞ்சுபொன்.
அதிமானபாடியார் என்பவர் 73- 1/2 கழஞ்சு பொன்.
கஞ்சகப்பாடியார் என்பவர் 35 கழஞ்சு.
ஏற்றுவழிச்சேரியார் என்பவர் 18 கழஞ்சு.
மொத்தம் 200 கழஞ்சு பொன். இதன் மூலம் கிடைக்கும் வட்டி 30 கழஞ்சு.. இதைக்கொண்டு வருடாவருடம் சித்திரை திருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது...
தீபத்திற்கு எண்ணை, சுவாமிக்கு மலர் மாலை.. பூஜை ஏற்பாடுகள்..
சுவாமி ஊர்வலம் வரும் சிவிகை.. இசைக்கலைஞர்களாம் உவச்சர்கள் .. நடனமாடும் தேவரடியார்கள்..
அமுது படையல்..
இந்நிகழ்வுகளுக்கான செலவு 25 கழஞ்சு பொன்.
மீதம் உள்ள 5 கழஞ்சு பொன் கண்டழிவு செவுக்கு என்கிறது செப்பேடு. அது என்ன கண்டழிவு செலவு..?
எதிர்பாரா செலவு..
தற்போது Miscellaneous என்று சொல்கிறோமே..
இதன் தமிழாக்கம்தான் கண்டழிவு..
இசைக்கலைஞர்களை உவச்சர்கள் என்று செப்பேடு கூறுகிறது.
என்னென்ன இசைக்கலைஞர்கள் என்ற விபரத்தையும் இதே செப்பேடு பதிவுசெய்கிறது.
தலைப்பறை, மத்தளி, கறடிகை, தாளம், சேகண்டிகை, காளம், கைமணி...
ஆகிய இசைக்கருவிகளை இசைக்கும் ஒன்பதுபேர் இருந்துள்ளனர்.
மிகச் சிறப்பாக இச் சித்திரை திருவிழா நடைபெற்றுள்ளது..
ஏழு நாட்களும் வெகு விமரிசையாக நடைபெற்றது..
திருவிழாவுக்கான மொத்தசெலவுக்கான முதலீட்டுத்தொகை 200 கழஞ்சு பொன்.
( அக்காலத்தில் இது மிக மிகப் பெரியதொகை) ..
இந்த 200 கழஞ்சு பொன்னைத் தானமாகக் கொடுத்த அந்த நால்வர்...
1. கம்புழான் பாடியார்.
2.அதிமானப் பாடியார்.
3.கஞ்சகப்பாடியார்.
4.ஏற்றுவழிச்சேரியார்.
இவர்கள் நால்வரும் திருவிழாவின்போது விளக்கு பிடித்தும் கொடி எடுத்தும் வந்தார்கள் என்று செப்பேட்டில் பதிவாகியுள்ளது.
என்னவொறு அர்ப்பணிப்பு...
அன்புடன்
மா.மாரிராஜன்..
Refrence ..
சோழர் செப்பேடுகள்.
முனைவர்
க. சங்கரநாரயணன்.
South indian inscription
Vol 3. No 128.
புகைப்படம்...
தமிழிணையம் தகவலாற்றுப்படை இணையப்பக்கம்..
மற்றும்..
வேலுதரன் இணையப்பக்கம்..
இச்செப்பேடு தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

" சித்திரை விஷு "
“ ஸ்ரீமான் ஸாது சுப்ரமணிய சாஸ்த்ரி “ என்ற கல்வெட்டு அறிஞரின் பெயரை நண்பர்கள் பலர் அறிந்திருக்ககூடும் . ஸ்ரீமான் சாஸ்த்ரியார்தான் , திருமலை- திருப்பதி கல்வெட்டுகளைப் படியெடுத்து , ஆய்வுக் குறிப்புகளை எழுதி “ Tirumala Tirupathi Devasthanams Inscriptions ” என்ற நூல் தொகுதியினை வெளியிட்டார் . அவை மொத்தம் 6 தொகுதிகள் – 8 புத்தகங்களாக ஸ்ரீ திருமலை- திருப்பதி விண்ணகர தேவஸ்தானம் , ஒரு மதிப்புறு புனிதப் பணியாக செய்து வெளியிட்டது .
இந்தக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை சுமார் 1100 , ஆனால் அதில் “ தமிழ்க் கல்வெட்டுகள் எண்ணிக்கை சுமார் 1050 “ என்ற உள்ள செய்தி குறித்து தமிழர்கள் இறும்பூது எய்தலாம் . மீதமுள்ள சுமார் 50 கல்வெட்டுகள் கன்னட மற்றும் தெலுங்கு மொழியில் உள்ளன .
இந்தத் தமிழ்க் கல்வெட்டுகளில் - மன்னர்கள் , அரசிகள் , பிரதானிகள் , வணிகர்கள் , பொதுமக்கள் எனப் பலதிறத்தார் திருமலை விண்ணகர ஸ்ரீ திருவேங்கடப் பெருமாளுக்கு அளித்த பல்வேறு நிவந்தங்கள் ( Endowments & Trusts ) பற்றிய விவரங்கள் உள்ளன .
இந்த நிவந்தங்கள் பலவேறு விழா / விசேஷ நாட்களில் செய்யப்படும் நிவேதனங்கள் ( Sacred offerings to Him ) குறித்தன .
இந்த நாட்களில் “ சித்திரை விஷு ” என்ற விழா நாளில் செய்யப்படும் நிவேதனங்கள் குறித்தக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை சுமார் 12.
“ சித்திரை விஷு ” என்பதற்கு , கல்வெட்டு ஆய்வாளர் இந்த நூல் தொகுதியில் கொடுத்துள்ள விளக்கம் “ தமிழ் வருடப் பிறப்பு “ என்பதாகும் . இந்த விளக்கத்தின் ஒளிநகலை இந்தப் பதிவில் இணைத்துள்ளேன்- நண்பர்கள் கண்டு கொள்க .
இந்த 12 கல்வெட்டுகளிலேயே காலத்தால் பழமையான கல்வெட்டு - அரசர் பெயர் தெரியாத கல்வெட்டு . அதன் ஆண்டு பொது யுகம் 1308 . இதன் ஒளிநகலை இந்தப் பதிவில் இணைத்துள்ளேன் . அதில் “ சக ஆண்டு “ மற்றும் “ சித்திரை விஷு ” என்ற விவரங்கள் உள்ளன . கண்டுகொள்க .
மற்றக் கல்வெட்டுகள் , விஜயநகர வேந்தர்கள் மன்னர் சாளுவ நரசிம்ஹர் , பேரசரர் கிருஷ்ண தேவ ராயர் , மன்னர் அச்சுத தேவ ராயர் , மன்னர் சதாசிவ ராயர் மற்றும் மன்னர் வேங்கடபதி ராயர் காலக் கல்வெட்டுகள் . இந்தக் கல்வெட்டுகளிலும் “ சித்திரை விஷு “ குறித்தும் , ஸ்ரீ பெருமாளுக்கு அமுதுப்படி நிவேதனங்கள் குறித்தே செய்திகள் உள்ளன .
இந்தப் பதிவில் இருந்து சில விஷயங்கள் :
1 . “ சித்திரை விஷு ” எனப்படும் சித்திரை மாத முதல் நாளே “ தமிழ் ஆண்டுப் பிறப்பு ” நாள் ஆகும் . இது எனக்குத் தெரிந்து பொது யுகம் 1308 முதல் , நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்டு , அன்று இறைவருக்கு வழிபாடு நடத்தி நிவேதனங்களைப் படைத்தது வழிவழியாக வந்த ஒரு கவினுறு தெய்வக் கூட்டுச் செயல்பாடு . இது குறித்த ஆவணம் இந்தப் பதிவில் உள்ளது .
2 “ இது ஒரு மத சார்பற்ற விழா ” என எண்ணாமல் , நம் முன்னோர் காட்டிய இறை வழிபாட்டோடு , நாளை ஹிந்துத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடுக !
3. ஓர் அரசியவாதி ஆட்சிப்பீடத்தில் ஏறிக்கொண்டு அதிகார போதையில் - ஒரு ‘ டுபாக்கூர் ‘ மாநாட்டுத் தீர்மானத்தை மேற்கோள் காட்டி , வழிவழியாக வந்த “ சித்திரை மாத முதல் தேதி – தமிழ் வருடப் பிறப்பு ” என்ற ஹிந்து சமய நல்வாழ்க்கையை , “ தை மாதம் முதல் தேதி – தமிழ் வருடப் பிறப்பு ” என்று மாற்றிய தீர்மானத்தை ஹிந்துத் தமிழர்கள் அனைவரும் அந்தத் தீர்மானத்தைக் குப்பையில் கொட்டி , நாளை சித்திரை விஷு நாள் அன்று விருப்புடன் வழிபாடு இயற்றி , கொண்டாடி இறைவனின் அருளைப் பெறுக என்று வேண்டிக் கொள்கிறேன் !
Reference : Tirumala Tirupathi Devasthanams Inscriptions Volumes I to VI


No comments:

Post a Comment