Monday, October 13, 2025

கோயில் சொத்துகள் பத்திரப் பதிவு தமிழக அரசின் அரசாணைக்கு தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

 கோவில் சொத்துக்கள் பெயர் மாற்றம் புதிய சட்ட திருத்தம்: இடைக்கால தடைவிதித்த உயர் நீதிமன்றம்!

Authored by: மரிய தங்கராஜ்|Samayam Tamil

இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், இது கோவில் சொத்துக்கள் பறிபோகும் அபாயத்தை ஏற்படுத்துவதாகக் கூறி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். மேலும், இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர், வருவாய் துறை செயலாளர், பத்திர பதிவுத்துறை செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு

திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களை பாதுகாக்கும் வகையில், அவற்றின் மதிப்பீட்டை 'பூஜ்ஜியம் மதிப்பு' என பத்திரப்பதிவுத்துறையில் பதிவு செய்து வைத்திருப்பது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், வேறு யாரும் அந்த கோவில் நிலங்களுக்குப் பத்திரம் பதிவு செய்யவோ அல்லது பட்டா பெறவோ முடியாது. யாரேனும் அவ்வாறு செய்ய முயன்றால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் புகார் அளித்தால் உடனடியாகப் பத்திரப்பதிவு ரத்து செய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும் வகையில் சட்ட வடிவம் இருந்தது.


புதிய சட்டத்திருத்தத்தால் என்ன ஆபத்து?

ஆனால், தற்போது அரசு புதிய சட்டத்தை இயற்றி, கோவில் சொத்துக்களை தனிநபர் பெயரில் பட்டா பெறவும், பத்திரப்பதிவுத்துறையில் பெயர் மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்யவும் வழிவகை செய்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, கோவில் சொத்துக்கள் தொடர்பாக முறையீடு செய்ய வேண்டுமென்றால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிடம் தான் முறையிட முடியும். இந்த சட்ட திருத்தம், கோவில் சொத்துக்கள் தனிநபர்களுக்கு எளிதாகப் பெயர் மாற்றம் செய்ய வழிவகுப்பதாகவும், இது சட்டவிரோதமானது என்றும் மனுதாரர் வாதிட்டார்.

சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரிக்கை!

இந்த சட்ட திருத்தத்தின் மூலம் கோவில் சொத்துக்கள் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளதாகவும், இந்த சட்ட திருத்தம் சட்டவிரோதமானது என்றும் கூறி, அரசு 29-08-25 அன்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்!

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்து மற்றும் நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ராதாகிருஷ்ணன், தற்போது அரசு கொண்டு வந்துள்ள சட்டம் கோவில் சொத்துக்கள் அனைத்தையும் தனிநபருக்கு எளிதாகப் பெயர் மாற்றம் செய்யும் வகையில் அமைந்துள்ளது என்றும், இது சட்டவிரோதம் என்றும் வாதிட்டார். மேலும், இந்த சட்டம் இயற்றப்பட்டு சில நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் சொத்துக்கள் தனிநபர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இடைக்கால தடை!

மனுதாரரின் வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசின் இந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர், வருவாய் துறை செயலாளர், பத்திர பதிவுத்துறை செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த இடைக்கால தடை, கோவில் சொத்துக்கள் மேலும் தனிநபர்களின் பெயருக்கு மாறுவதைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களில் அடுத்து அடுத்துப் பாலியல் புகார்கள்!

தமிழ்  தொலைக்காட்சி   நிறுவனங்களில் அடுத் து  அ டுத்துப் பாலியல் புகார்கள்!  Written by Tamil Oodagam News Desk   June 17, 2026 தமிழ் ஊடகம் ...