Friday, October 24, 2025

இந்து சமய அறநிலையத்துறையின் -சாமி கணக்கில் ஆசாமிகளின் அதிரடி கொள்ளை! -பதுக்கப்பட்ட பல்லாயிரம் கோடிகள்

 

சாமி கணக்கில் ஆசாமிகளின் அதிரடி கொள்ளை! -பதுக்கப்பட்ட பல்லாயிரம் கோடிகள்Vikatan Correspondent  Published:Updated:2016 

சாமி கணக்கில் ஆசாமிகளின் அதிரடி கொள்ளை!  -பதுக்கப்பட்ட பல்லாயிரம் கோடிகள்
சாமி கணக்கில் ஆசாமிகளின் அதிரடி கொள்ளை! -பதுக்கப்பட்ட பல்லாயிரம் கோடிகள

தமிழக அரசின் எந்தத் துறைகளிலும் இல்லாத அளவுக்கு வசூலில் கொடிகட்டிப் பறக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. ' அள்ள அள்ளக் குறையாத காமதேனுவாக இருக்கிறது இந்தத் துறை. அதனால்தான் கோயில் சொத்துக்கள், உண்டியல் வருமானம் என அனைத்திலும் அதிகாரிகள் கை வைக்கிறார்கள்' எனக் கொதிக்கின்றனர் பக்தர்கள்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 36,488 கோயில்கள் உள்ளன. இவற்றோடு 56 திருமடங்கள் மற்றும் அதனுடன் இணைந்த ஐம்பத்தெட்டு கோயில்கள் உள்ளன. கோயில்களுக்கு என ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் மட்டும் ஐந்து லட்சம் ஏக்கருக்கும் மேல் உள்ளன. இந்த நிலங்களின் இன்றைய மதிப்பு பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும். இந்நிலங்களில் விவசாயம், வணிகக் கடைகள், குடியிருப்புகள் என வருடத்திற்கு கணிசமான வருவாய் வருகிறது.

ஆனால், 'அதிகாரிகள் காட்டும் கணக்கு என்பது சிறு துளி மட்டும்தான்' என்கின்றனர் அறநிலையத்துறை அதிகாரிகள். இதைப் பற்றி நம்மிடம் விரிவாகப் பட்டியலிட்டனர். " வடபழனி முருகன் கோயில் துணை ஆணையராக இருந்த அதிகாரி ஒருவர், தஞ்சை உப்பிலியப்பன் கோயிலில் கிலோ கணக்கிலான தங்கம் உள்பட கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்களை மோசடி செய்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு கைதானார். இது வெளியில் தெரிந்த தகவல். ஆனால், கோயில் சொத்துக்களை சூறையாடுவதில் அதிகாரிகளுக்குள் போட்டியே நிலவுகிறது.

பக்தர்களின் காணிக்கையில்தான் அறநிலையத் துறையே செயல்பட்டு வருகிறது. உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்படும் போது சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்பது சட்டம். இன்று வரையில் பெரும்பாலான கோயில்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படவில்லை. உண்டியல் பணத்தில்தான் கோயில்களுக்கு இன்னோவா கார்கள் வாங்கப்படுகிறது. இந்த வகைக் கார்களை வாங்குவதற்கு அறநிலையத்துறை சட்டப்படி இடம் இல்லை.

உதாரணமாக, திருத்தணி முருகன் கோயில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில், குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோயில் என இன்னோவா கார் வாங்கியுள்ள கோயில்களின் பட்டியல் அதிகம். இந்த வாகனங்களுக்கு போடப்பட்டுள்ள டீசல் வவுச்சர்களைப் பார்த்தால், பத்து இன்னோவா கார்களை வாங்கலாம். அந்தளவுக்கு மோசடிகள் நடக்கின்றன. போலி வவுச்சர்கள் மூலம் மட்டுமே இதுவரையில் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் நடந்திருக்கிறது.

இதைவிடக் கொடுமை, கோயில்களின் சொத்துப்பதிவேடு வருடா வருடம் முறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் 20 ஆண்டுகளாக இவை முறைப்படுத்தப்படவில்லை. அதே போல் பக்தர்கள் காணிக்கையாக கொட்டிக் கொடுத்த தங்க நகைகள் குறித்த பதிவேடு பல கோயில்களில் இல்லை. இதைப் பற்றி நாங்கள் கேள்வி கேட்டால், துறை அதிகாரிகள் கடுமையாக மிரட்டுகின்றனர். கோவை, ஈச்சனாரி கோயிலில் பத்து லட்ச ரூபாயை வங்கியில் செலுத்தியது போலவும் திரும்ப பெற்றது போலவும் போலியாக ஆவணங்கள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இன்று வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழனி, விழுப்புரம், சென்னை, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை பார்க்கும் முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டால், துறையில் நடந்துள்ள அனைத்து ஊழல்களும் அம்பலமாகும்" என்கின்றனர்  கொதிப்போடு.

அடுத்து நம்மிடம் பேசிய தணிக்கை ஆய்வாளர் ஒருவர், " கோயில்களில் நடக்கும் கணக்கு வழக்குகளை நாங்கள்தான் முறைப்படுத்த வேண்டும். ஆனால், நடக்கும் சட்டவிரோத பண முறைகேடுகளுக்கு ஆதரவு கொடுக்கும் வேலையில் எங்கள் துறை அதிகாரிகள் பலர் செயல்படுகின்றனர். இதில், கணக்கு அலுவலர் நிலையில் உள்ள உயரதிகாரி செய்யும் வேலைகள் மலைக்க வைக்கிறது. கணக்குப் பதிவேடுகளை மாற்றுவதிலும், துறையின் முக்கிய அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் காரியம் சாதிப்பதிலும் மிக முக்கியமானவராக இருக்கிறார். திருநாகேஸ்வரம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழனி முருகன் கோயில்களில் நடக்கும் பல விஷயங்களுக்குப் பின்னால் இவர்தான் இருக்கிறார்.

இவருக்கு அடுத்து, சென்னை, தணிக்கைத் துறையில் பணிபுரியும் அதிகாரியின் முக்கிய வேலையே, பணியிட மாற்றம், குற்றச்சாட்டுகளை சரி செய்து கொடுப்பது போன்றவைதான். இவரால் பழிவாங்கப்பட்ட கீழ்நிலை அதிகாரிகள் ஏராளம். இந்த அதிகாரிகளின் தலையீட்டால், கோயில் திருப்பணி கணக்கு வழக்குகள் எந்தக் கோயிலிலும் முறையாகப் பராமரிக்கப்படுவதே இல்லை. போலியான பில்கள் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. கோயில் நிலங்கள், வணிகக் கடைகள், குடியிருப்புகள், உண்டியல் வருமானம், திருப்பணி கணக்கு என இதுவரையில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் ஊழல் நடந்திருக்கிறது. இவற்றின் மீது முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார் வேதனையோடு.

'தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்' என சொல்லி வளர்க்கப்படும் ஒரு சமூகத்தில், சாமியை வைத்தே தவறு செய்யும் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது?

ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment

தமிழக தேர்தல் 2026 -நாடாளுமன்றத் தேர்தல் 2024 முடிவுகளின் அடிப்படையில் பாஜக கூட்டணி பலம்

The above given 76 seats are selected on the basis of 2024 Lok Sabha Votes (combining AIADMK+ Votes and BJP + Votes  overall giving a discou...