Sunday, September 21, 2025

கிட்னி திருட்டு மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு குழு நியமித்தது உயர் நீதிமன்றம்: தமிழக அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி

 கிட்னி மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு குழு நியமித்தது உயர் நீதிமன்றம்: தமிழக அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி 

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/high-court-appoints-special-committee-to-investigate-kidney-fraud-cases-judges-unhappy-with-tamil-nadu-government/4016983

மதுரை: கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இக்குழு நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்ற கிளை நேரடியாக கண்காணிக்கும் என்றும், முதற்கட்ட விசாரணை அறிக்கையை செப்., 24க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சத்தீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனு:

நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலா ளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறு நீரகத்தை தானம் பெற்றனர். இதற்காக போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன. தொழிலாளர்களை, 5 முதல் 10 லட்சம் ரூபாய்க்கு சிறு நீரகங்களை விற்க வற்புறுத்தி உள்ளனர்.

திருச்சி, பெரம்பலுாரில் இரு தனியார் மருத்துவமனைகள் இதில் ஈடுபட்டன. ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநரகம் தாக்கல் செய்த அறிக்கையில், 'சட்ட விரோதமாக சிறுநீரகங்கள் அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட் டது. போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டதும் தெரிந்தது. இரு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமங்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டன' என, தெரிவித்தது.

நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'முறைகேடுகள் நடந்தது அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டும், ஏன் இன்னும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவில்லை?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் தனியார் மருத்துவமனைகளில் சட்டவிரோத

தொடர்ச்சி 5ம் பக்கம்

கிட்னி மோசடி...

முதல் பக்கத் தொடர்ச்சி

சிறுநீரக விற்பனை நடந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அக்குழு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் பகுதிகளில் விசாரணை மேற்கொண்டது. சிறுநீரகத்தை தானமாக வழங்க ஒருவருக்கு புரோக்கர் மூலம் பணம் கொடுத்தது தெரியவந்தது. ஸ்கேன் பரிசோதனையில் சிறுநீரகம் அகற்றப்பட்டதும் தெரிந்தது.

இதுதொடர்பான ஆவணங்களை சரிபார்க்க திருச்சி, பெரம்பலுாரில் உள்ள இரு மருத்துவமனைகளுக்கு குழு சென்றது. முதற்கட்ட விசாரணையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் இரு மருத்துவமனைகளுக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.

போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டதும், புரோக்கர்கள் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மனித உறுப்புகளின் வர்த்தகம் பெரிய அளவில், சட்டவிரோதமாக நடக்கிறது என்ற அறிக்கையின் கண்டுபிடிப்புகள் கவலை அளிக்கின்றன.

அரசு தரப்பில் அமைக்கப்பட்ட குழுவால் கண்டறியப்பட்ட இம்முறைகேடுகள், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 1994 சட்டத்தின் கீழ் மட்டுமல்ல, பாரதிய நியாய சன்ஹிதா எனப்படும் பி.என்.எஸ்., கீழும் குற்றமாகும்.

அரசுத்தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர், உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். எனினும், இதுவரை எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். சம்பந்தப்பட்ட அதிகார சபை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படாததை இந்நீதிமன்றம் கண்டிக்கிறது. இவ்வழக்கில் முதன்மை மருத்துவ அதிகாரி, முறைகேடு தொடர்பாக பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை. புகாரின் தன்மை காரணமாகவும், முறைகேடுகளை களையவும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, இந்நீதிமன்றம் கருதுகிறது.

ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தலைமையில் உறுப்பு மாற்று சிகிச்சையில் அனுபவம் மிக்க இரு டாக்டர்கள் அடங்கிய எஸ்.ஐ.டி., குழு அமைக்க வேண்டும். அதுசம்பந்தமாக தமிழக டி.ஜி.பி., மதியம், 3:00 மணிக்கு காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்பதால், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது. மாநில அரசின் இத்தகைய நிலைப்பாடு ஆச்சரியமளிப்பது மட்டுமல்லாமல், பெரிய அளவிலான மனித உறுப்பு கடத்தல் பிரச்னையை விசாரிக்கும் பொறுப்பை தட்டிக்கழிக்க அரசு முயற்சிப்பதாக தெரிகிறது. இது ஏமாற்றம் அளிக்கிறது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கூடுதல் தலைமை பதிவாளரின் முயற்சியால் நீதிமன்றமே விசாரணை குழுவை அமைக்கிறது. தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், நீலகிரி எஸ்.பி., நிஷா, திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசன், கோவை எஸ்.பி., கார்த்திகேயன், மதுரை எஸ்.பி., அரவிந்த் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழக டி.ஜி.பி., அனைத்து உதவிகளையும் இக்குழுவிற்கு வழங்க வேண்டும். மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர், மருத்துவ தொழில்நுட்ப உள்ளீடுகளை இக்குழுவிற்கு வழங்க வேண்டும்.

எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு தமிழகம் முழுதும் உறுப்பு மாற்று சிகிச்சை முறைகேடுகள் குறித்து இக்குழு நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேரடியாக கண்காணிக்கும். முதற்கட்ட விசாரணை அறிக்கையை செப்., 24க்குள் நீதிமன்றம் முன் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கிட்னி விற்பனை மோசடி விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளை சாட்டையை சுழற்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கிட்னி திருட்டு மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு குழு நியமித்தது உயர் நீதிமன்றம்: தமிழக அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி

  கிட்னி மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு குழு நியமித்தது உயர் நீதிமன்றம்: தமிழக அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி  https://www.dinamalar.com/...