Thursday, March 31, 2022

சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் -இந்து அறநிலையத் துறையின் கீழ் கொணர்ந்தது செல்லும்

 

சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் என்ற பஜனை மட வளாகத்தை முற்றிலும் அராஜகமான முறையில் கையகப் படுத்தியுள்ள தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
இந்த மண்டபத்தில் விக்கிரகங்கள் வைத்து பூஜை நடப்பதால் இது "கோயில்" என்ற கணக்கில் வருவதாகவும், உண்டியலில் மக்கள் காணிக்கை போட்டு நிதி வருவதாகவும் அதில் முறைகேடுகள் நடப்பதாகவும் வந்த 'புகார்களின்' (மொட்டை கடிதாசி?) பேரில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இ.அ.துறை கூறுகிறது. இதற்கு எதிராக இந்த பஜனை மடத்தை நடத்தும் "ராம் சமாஜ்" என்ற அமைப்பு "இது பொதுவான கோயில் அல்ல, ராமநவமி போன்ற உற்சவங்களின் போதுமட்டுமே விக்ரகங்கள் வைத்து விசேஷ பூஜைகள் நடத்தப் படுகின்றன" என்று கூறியுள்ள முறையான விளக்கங்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி தடாலடியாக நிராகரித்திருக்கிறார். இ.அ.துறை இந்த மண்டபத்தை நிர்வகிக்க "தகுதியான நபர்களை" நியமித்தது சரி என்கிறார்.
இந்த மண்டபம் சென்னையில் உள்ள பக்தர்கள் பலருக்கும் மிகவும் பரிச்சயமானது தான். நானும் இங்கு கச்சேரிகள், பஜனைகள், உபன்யாசங்கள் எல்லாம் கேட்டிருக்கிறேன். நீதிபதி கண்மூடித்தனமாகவும் முற்றிலும் இ.அ.துறைக்கு பட்சபாதமாகவும் இந்த வழக்கை விசாரித்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.
ஒழுங்காக, சீராக நடந்து வரும் ஒரு இந்து ஆன்மீக அமைப்பை திட்டம் போட்டு கபளீகரம் செய்வதற்காக சில அசூயை பிடித்த தனி நபர்களும் இ.அ.துறையும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது. சென்னையில் பல பகுதிகளில் அந்தந்த ஊர்க்காரர்கள் சேர்ந்து அமைத்து நன்றாக நடந்து வந்த கோயில்கள், சத்சங்கங்கள், சமாஜங்கள் இதே போன்று இ.அ. துறையால் முழுங்கப் பட்டு சீரழிந்த கதைகள் உண்டு. இந்த
அருமையான
பஜனை மட வளாகத்திற்கும் அப்படி ஒரு கதி நேர்ந்தால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சம்பந்தப் பட்டவர்களும், மற்ற கோயில் பாதுகாப்பு செயல்வீரர்களும் சட்டபூர்வமாக இ.அ.துறையிடமிருந்து இந்த மண்டபத்தை மீட்பார்கள் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment