Saturday, April 23, 2022

பிரம்மதேயம்.. சதுர்வேதி மங்கலம் - மா.மாரிராஜன்.

 *சமூக நீதி காத்த* *இராஜராஜன்....*

இராஜராஜன் எங்களது நிலங்களை அபகரித்தார்... இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களின் பரபரப்பான குற்றச்சாட்டு....
நிலங்களை அபகரித்து என்ன செய்தார்..? இதற்கான பதிலை அவர் கூறவில்லை என்றாலும்... அபகரித்த நிலங்களை பிராமணர்களுக்கு கொடுத்தார் என்பதுதான் வழக்கமான .. பரவலான குற்றச்சாட்டு...
இவ்விதமான குற்றச்சாட்டுகள்...
பல வடிவங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன...
இக்குற்றச்சாட்டு சரியா..? இதில் உண்மை உள்ளதா..?
என்பதை நேரடியானச் சான்றுகள் மூலம் அறிய இருக்கிறோம்...

இராஜராஜன் யாருடைய நிலங்களையும் பறிக்கவில்லை என்பதுதான் தரவுகளுடன் கூடிய வரலாற்று உண்மை...
அதற்கு முன்பாக....
வரலாற்றுக்காலம் என்பது கி.பி. 2 ம் நூற்றாண்டு முதல்..
கி.பி. 17 ம் நூற்றாண்டு வரை .. ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் நம்மிடையே உள்ளன..
ஆயிரக்கணக்கான மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர்..
இவ்வாறு இருக்க ..
கி.பி. 10 ம் நூற்றாண்டை மட்டும் எடுத்துக்கொண்டு.. சோழர்களை .. குறிப்பாக இராஜராஜனை மட்டும் விமர்சனம் செய்வது எவ்வகையில் நியாயம்..?
இராஜராஜன்தான் பிராமணர்களை வளர்த்தார்.. இவர்தான் சமஸ்க்ருதத்தை ஆதரித்தார்.. பிராமணர்களுக்கு நிலங்களை வாரி வழங்கினார்...
இதுபோல் எத்தனையோ குற்றச்சாட்டுகள்... எந்த குற்றச்சாட்டும் துளிகூட உண்மையில்லை..
உண்மை நிலை என்ன..?
இராஜராஜர் பிராமணர்களுக்கு நிலங்களை வாரி வழங்கினாரா.? அந்நிலங்களுக்கு வரி இல்லையா..? அந்நிலங்கள் பிறரிடமிருந்து பறிக்கப்பட்டவையா..?


இம்மூன்று விடயங்களுக்கும் விடைகாண்போம்...
பிராமணர்களுக்கு நிலதானம் .. அதாவது பிரம்மதேயம் பற்றி..
சிலப்பதிகாரமே சொல்கிறது.. நாடுகாண் காதை பாடல்.. 145 - 147..பிரம்மதேயத்தை மறையோர் இருக்கை என்கிறது...
கி.பி. 6 ம் நூற்றாண்டு பல்லவ பாண்டியர் காலம் முதல், கி.பி. 17 ம் நூற்றாண்டு விஜயநகர காலம் வரை.. பிரம்மதேயங்கள் இருந்துள்ளது...
சோழர் காலத்திய பிரம்மதேய நடைமுறைகள் பற்றி பார்ப்போம்...
கோவில்... அன்றைய சமூகத்தின் மையம்.. அக்கோவிலுக்குத் தானமாக பொன்னும் பொருளும் நிலங்களும் தானமாக கொடையாளிகள் கொடுப்பது வழக்கம்..
சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் தேவதானம் என்றும், பெருமாள் கோவிலுக்குத் தானமாக வழங்கிய நிலம் திருவிடையாட்டம் எனவும், பௌத்த விஹாரங்களுக்கு தானமாக வழங்குவது பள்ளிச்சந்தம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது...
*தேவதானம்..*
சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலம்... கொடையாளி ஒருவர் நில உரிமையாளரிடம் காசுகொடுத்து அந்நிலத்தை வாங்கி கோவில் மகாதேவருக்கு தானமாக வழங்குவார்..
நிலத்தை வாங்குபவர், நிலத்தை விற்பவர், இருவரைப்பற்றிய முழு விபரம்... நிலத்தின் எல்லைகள்... அனைத்தும் குறிக்கப்பட்டு ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதலுடன் இவ்விற்பனை பதிவு செய்யப்பட்டு கல்வெட்டில் வெட்டப்படும்...
அரசனோ... அவர் உறவினரோ.. படைத்தலைவனோ.. வணிகனோ... யாராக இருந்தாலும்.. நில உரிமையாளரிடம் காசு கொடுத்து வாங்கி அந்நிலத்தை வாங்கி கோவிலுக்கு கொடுப்பார்கள்... ஏராளாமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன...
யாரிடாமாவது இருந்து நிலங்களை பறித்து தானமாக வழங்கமுடியாது....
பெரும் குற்றம் செய்தவர்களின் சொத்துக்கள்.. நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவ்வூர் சபையிடம் ஒப்படைக்கப்படும்.. கொடையாளி அவ்வூர் சபையிடம் காசு கொடுத்து அந்நிலத்தை வாங்கி கோவிலுக்குத் தானமாக வழங்குவார்..
இதற்கு ஒரு சான்று உடையார்குடி கல்வெட்டு.. இளவரசன் ஆதித்த கரிகாலனை கொன்ற பிராமணர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் அவ்வூர் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது..
வியாழ கஜமல்லன் என்னும் கொடையாளி ஒருவர் அந்நிலத்தை அவ்வூர் சபையிடமிருந்து காசு கொடுத்து வாங்கி.. அவ்வூர் இறைவனுக்கு வழங்குகிறார்...
ஆக.. நிலதானம் என்பது முறையான நியதிகளுடன் நடைபெறும் ஒரு பத்திரப்பதிவு....
அடுத்து...
பிரம்மதேயம்.. சதுர்வேதிமங்கலம்...
எவ்வாறு உருவாகின..?
ஏன் உருவாகின..?
சோழர்காலத்தில்..
பிராமணர்கள் உச்சமான அதிகாரம் பெற்றனர்.. நிலங்கள் வாரி வழங்கப்பட்டன..
அந்நிலங்களுக்கு வரியில்லை.. இதுபோன்ற கருத்துகளுக்கு சரியானச் சான்றுகள் இல்லை.. மிகைப்படுத்தப்பட்ட செய்திகள்...
ஒரு சதுர்வேதி மங்கலம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது..?
கோவில்கள்... அன்றைய சமுதாயத்தின் மையம்..
இக்கோவில்களில் பணிசெய்ய, வழிபாடு நடத்த பிராமணர்கள் நியமிக்கப்படுவார்கள்..
இவர்களுக்கு வருவாய் வேண்டும்.. குடியிருக்க வீடு வேண்டும்.. அவ்வாறான குடியிருப்புதான் பிரம்மதேயம்.. சதுர்வேதி மங்கலம் ..
ஒரு சதுர்வேதிமங்கல நியதிகளை இராஜேந்திரசோழன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடுகள் மூலம் தெளிவாக அறியலாம்..
இராஜேந்திரனின் 8 ம் ஆட்சியாண்டு கி.பி. 1020 ல்.. வெளியிடப்பட்டது கரந்தைச் செப்பேடு..
இறைபணி செய்யும் பிராமணர்களுக்கு ( சோழநாடு முழுதும்.. ஏறக்குறைய 1080 பேர்) .. வருமானத்திற்கும் குடியிருப்புக்கும் ஒரு அக்ரஹாரம் உருவாக்கப்பட்டது..
இக்குடியிருப்பு அரசனின் தாய் பெயரில் திரிபுவணமாதேவி சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது..
50 சிற்றூர்கள் உள்ளடக்கிய பகுதி தேர்வு செய்யப்பட்டது..
இப்பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் மட்டுமே தேர்வுசெய்யப்படுகிறது..
மற்ற குடியானவர்களின் நிலங்கள், பொது இடங்கள்.. கோவில்கள்..
வாய்க்கால்.. இதுபோன்ற பகுதிகள் அந்த அக்ரஹாரத்தில் சேராது...
இதை தெளிவாக செப்பேட்டுவரிகள் கூறுகின்றன...
தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அளவு 3135 வேலி நான்கரைமா முந்திரிகைக் கீழ் முக்கால்....
மேற்கண்ட பரப்பில் விலக்கு அளிக்கப்பட்ட பரப்பு.. 619 வேலி ஆறு மா காணி முந்திரிகைக் கீழ் மூன்று காணி...
விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகளாக... குடியிருப்பு பகுதி, மாதேவர் சிரீ கோவில்கள், அதன் திருமுற்றம் , ஐயன் மற்றும் பிடாரிகோவில், !அதன் திருமுற்றம், நந்தவனங்கள், கம்மாளர் மற்றும் பறைச்சேரிகள், சுடுகாடு குளமும் கரையும்., ஆறுகள், வாய்க்கால், திரிபுவணமாதேவிபேரேரி அதன் கரை, சுந்தரச்சோழ வாய்க்கால். சிங்களாந்தகன் வாய்க்கால், மும்முடிச்சோழ பேராறு ..
இதுமாதிரியான இடங்களுக்கு விலக்களித்து அக்ரஹாரம் உருவாக்கப்பட்டது...
ஆக... குடிமக்களின் நிலங்களோ, பொது இடங்களோ, நீர்ப்பாசன வாய்க்கால் ஏரிகளோ,
சதுர்வேதி மங்கலத்தில் அடங்காது என்பது நிச்சயமான ஒன்று..
இம்மாதிரியான சதுர்வேதிமங்கலங்களுக்கு வரி இல்லை என்பதும் தவறு..
வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன...
திரிபுவணமாதேவி சதுர்வேதிமங்கல பிராமணர்களுக்கு...
முதல் எட்டு ஆண்டுகளுக்கு வரி இல்லை... 8 ம் ஆண்டில் கால் பங்கு வரி.. 9 ம் ஆண்டு முதல் 10 ஆண்டுவரை அரை வரி.. 10 ம் ஆண்டுமுதல் முழு வரியும் செலுத்த வேண்டும்....
இதுதான் நடைமுறை...
எந்த ஒரு நிலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு யாருக்கும் தானமாக வழங்கப்படவில்லை..
இதை இன்னும் ஏராளமானச் சான்றுகளுடன் நிறுவலாம்...
சமூக நீதி காத்த காவலன் இராஜராஜன்...
அன்புடன்.. மா.மாரிராஜன்...

No comments:

Post a Comment