Saturday, April 23, 2022

அரேபியப் பணத்தில் வஹாபிய முஸ்லிம் அடிப்படைவாதம் பரப்பல்

https://www.facebook.com/sharmila.seyyid/posts/10157334061215891

கொழும்பில் வசிக்கும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஷர்மிலா செய்யித் எழுதியுள்ள இந்தப் பதிவு முக்கியமானது. கருப்பு பர்தாவிலிருந்து தொடங்கி ஜிகாதி பயங்கரவாதம் படிப்படியாக இஸ்லாமிய சமூகத்தினுள் புகுந்து வளர்ந்ததைப் பற்றி அவர் தரும் சித்திரம்

Sharmila Seyyid

 


 2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ”ஹராம்” என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.

 

கறுப்பு அபாயாக்களையும், நீண்ட அங்கிகளையும் கொண்டுவந்து இதுதான் இஸ்லாமிய உடை என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகம் செய்தார்கள். எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்கள் எல்லாம் இதைத்தான் அணிகின்றார்கள். இது எங்கள் கலாசாரம் என்று ஏற்பதற்கு பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாதுகாப்பான கௌரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச்சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளும் கறுப்பு அங்கியை மட்டுந்தான் கட்டாயமாக அணியவேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஜூம்மாக்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இது எங்கள் ஊரில் மட்டும் நிகழ்ந்த சம்பவமில்லை. பெரும்பாலாக முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊரிலும் இப்படித்தான் நடந்தது.
திடீரென்று முளைத்த சிந்தனைப் பள்ளிகளுக்கு அரபு நாடுகளிலிருந்து நிதி வசூலாகி வந்தது. வெறும் நூறு இருநூறோ ரூபாய்களை மட்டும் நன்கொடையாக செலுத்தி நாங்கள் கற்ற குர்ஆனை மாதாந்தம் மூவாயிரம் செலுத்திக் கற்கும் நிலை உருவாக்கப்பட்டது. மத கல்வி அவசியமேயின்றி முன்னிறுத்தப்பட்டது. வியாபாரமானது. கிலாபத் பற்றிய எண்ணங்கள் இளைஞர்களிடையே விதைக்கப்பட்டு இந்த பூமி முஸ்லிம்களால் ஆழப்படவேண்டியது என்ற பிரம்மை திணிக்கப்பட்டது. சில உலமாக்கள் சொத்துக்கள் சேர்த்தார்கள். எங்களுக்குத் தெரிய பாங்கு முழங்கிக் கொண்டிருந்த சம்பளமே இல்லாத மௌலவிகள் வெளிநாடுகளுக்குப் போய் வந்தார்கள். அவர்கள் வீடுகளுக்குப் பாக்கிஸ்தானிலிருந்தும் மத்திய கிழக்கிலிருந்தும் நண்பர்கள் வந்து தங்கிச் சென்றார்கள். அவ்வப்போது ஆடு மாடு அறுத்து விருந்துகள் நடத்தினார்கள். கஞ்சாவை அம்மியில் அரைத்து இறைச்சிக் கறி சமைத்த வாசம் எங்கள் மூக்குத் துவாரங்களை அரித்துக் கொண்டு காற்றிலேறிப் போனது.
இவர்களுக்குள் இந்த சிந்தனை மாற்றங்கள் எப்படித் திடிரெனத் தோன்றின என்று சிந்திப்பதில் யாருக்கும் ஆர்வம் இருக்கவில்லை.
சிங்கள மக்கள் சீத்தையையா அணிகின்றார்கள்? அவர்களது கலாசாரத்தில் மாற்றம் உண்டாகவில்லையா, நாங்கள் அபாயா அணிந்தால் தீவிரவாதமா என்று அபாயா திணிக்கப்பட்ட அரசியலுக்கு முட்டுக் கொடுப்பதை வெட்கமேயின்றி நிகழ்த்தி வெற்றி கண்டவர்கள் முகங்கள் எல்லாம் வரிசையாக கண்களில் வந்து போகின்றன.
மதத்தின் பெயராலான இத்தகைய சின்னச்சின்ன எக்ஸ்ட்ரீம் செயல்பாடுகளின் ஊற்றுக்கண்களை ஆழமாக நோக்கத் தவறியதோடு, அமெரிக்கா 9/11 தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகப் பார்க்கும் சூழ்நிலையை, இஸ்லாமோபோபியா போன்ற அரசியல்களைப் பேசுவதை மனிதாபிமானச் செயற்பாடாக கருதியவர்கள் எல்லாம்கூட இன்றைய இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலைக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே.
இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பேசுகின்ற எழுதுகின்றவர்களை மேலைத்தேய கைக்கூலிகள் என்றவர்கள், உண்மையையை உரக்கப் பேசிய எழுதியவர்களின் கழுத்துகள் நெறிக்கப்பட்டும், சமூக ஊடகங்களிலும், வாழ்விலும் அவமானப்படுத்தப்பட்டபோதும் மௌனித்திருந்தவர்கள்கூட இதன் பின்னால் இருக்கிறார்கள்.
இப்போது வெள்ளம் தலைக்கு மேல்! நாடகங்களின் அரங்குகளை மாற்றவேண்டிய தருணம்.
இலங்கை முஸ்லிம்களின் எதிர்வினைகளை மூன்று வகையாகப் பார்க்க முடிகின்றது.
1) தப்பிக்கும் தந்திரம்
2) குற்றஞ்சுமத்துதல்
3) எதிர்காலம் குறித்த அச்சம்
இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக அழத் தொடங்கியிருக்கி(றோம்)றார்கள். இது தப்பித்தல், அச்சம் சார்ந்தது.
குண்டு வைத்தவர்கள் தீவிரவாதிகள், கொல்லப்படவேண்டியவர்கள், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல, இஸ்லாம் தீவிரவாத மார்க்கமல்ல என்பதெல்லாம் தப்பித்தல் மற்றும் குற்றச் சுமத்தல் உளவியல் சார்ந்தவை.
தீவிரவாதிகளுக்கு மதமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படவேண்டும் என்று தப்பிக்க முற்படும் பச்சோந்திகளாக முஸ்லிம்கள் மாறவேண்டியது காலத்தின் தேவையாகியிருக்கிறது.
தீவிரவாதக் கருத்துக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள். மௌனமாக இருந்தவர்கள்கூட தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் என்பேன். சமூக ஊடகங்களில் வெளியான மத தீவிரவாத கருத்துக்களை நமக்கென்ன என்றும், யாரோ ஒருவன் உளருகிறான் என்றும் பொறுப்பற்று இருந்த நீங்கள் இப்போது நல்லிணக்கம் பேசுகிறீர்கள். தீவிரவாதிகளைக் கொல்லவேண்டும் என்கிறீர்கள். முளையிலேயே கிள்ளி எறியவேண்டியதை, அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நீங்கள் செய்ய முன்வரவில்லை. கழுத்திற்கு கத்தி வந்துவிட்ட பிற்பாடே தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் வன்முறைகளுக்கு மார்க்கத்தில் இடமில்லை என்று கத்துகிறீர்கள். தேவைக்கு அதிகமாக சிந்தனைப் பள்ளிகள் வந்தபோது, அபாயா, முகமூடிகள் வந்தபோது அதனைக் கலாசார மாற்றம் என்பதாக அங்கீகரித்தவர்கள், அவற்றை எல்லாம் நம் கைகளில் கொணர்ந்து சேர்த்த அதே மனிதர்களால் தீனுக்கான போர் நடத்தப்படும்போது தனித்து நிற்கப் பார்ப்பது அறிவு முரணில்லையா? வழக்கம்போல அரசாங்கத்தின் சதி, மேலைத்தேய சதி என்றெல்லாம் புலனாய்வு விசாரணைகளை நமக்கு நாமே செய்து திருப்திப்பட்டுக் கொள்ள விளைவதால் எவ்வளவு தூரம் நம்மை நாம் நியாயப்படுத்திக் கொள்ளமுடியும்? அரசும் மேலைத்தேயமும் இயக்கும் பொம்மைகளாக நம் இளைஞர்களை இழுத்துச் சென்ற காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்?
இந்தப் பதிவு உங்களில் பலருக்கு உவப்பாக இராதென்று தெரியும். எப்போதும்போல காட்டிக் கொடுப்பவள், கைக்கூலி என்று உங்கள் இயலாமைகளைக் கோபங்களாக கொட்டிவிட்டுக் கடந்துபோவீர்கள் என்பதை அறிந்தே இருக்கிறேன்.
இந்த உண்மைகள் கசப்பானவைதான் மருந்துகள் போல. நோய் தீரவிரும்பினால் நீங்கள் ஒவ்வொருவரும் சிகிச்சையளிப்பட்டே ஆகவேண்டும். உங்கள் நோயைக் கண்டறிந்து குணப்படுத்துங்கள். நோய்க்கூறுகளுக்கு சிகிச்சையளிப்பதும், சுகதேகிபோல நடித்திருப்பதும் உங்கள் தெரிவு.






No comments:

Post a Comment

Srirangam - DMK Plays Caste by removing its existing Quarry scamster Ex-MLA Palaniyandi

  Srirangam is significant for both ADMK and DMK. For the first, it's their ex CM-supremo's constituency, and for the latter, a win...