Sunday, July 24, 2022

குரு பக்தியில் கட்டுப்பாடு தேவை

Jataayu B'luru   "காஞ்சி பரமாச்சாரியார் சித்தியடைந்த ஒரு அத்வைத சந்நியாசி, யதீஸ்வரர். அவரது அதிஷ்டானத்தில் அந்த மரபுப்படியே வழிபாடு நடக்க வேண்டும். இதுபோல வேல், சேவல் கொடி, ரிஷப வாகனம், மூக்குத்தி இத்யாதி அலங்காரங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. அழகியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் இரண்டு வகையிலும் அவை பொருந்தவில்லை என்பதே எனது தனிப்பட்ட தாழ்மையான அபிப்பிராயம்"     

நேற்று ஆடிக்கிருத்திகை அன்று காஞ்சி பரமாச்சாரியார் அதிஷ்டானத்தின் அலங்கார புகைப்படத்தை பகிர்ந்த நண்பருக்கு நான் தெரிவித்த கருத்து.
இந்துமத ஆன்மீக மரபில், குருவே தெய்வம், குருவும் ஈஸ்வரனும் வேறல்ல என்பதான கருத்து மையமாக உள்ளது. பாரம்பரியமாக பல சம்பிரதாயங்களிலும் இது அவரவர்களுக்கு உரிய முறையில் ஏற்கப்படுகிறது. நவீனகாலத்திய குருமார்கள் விஷயத்திலும் "பகவான் ரமண மகரிஷி" போன்ற அடைமொழிகளும் "ஸர்வ-தே³வ-தே³வீ-ஸ்வரூபாய ஶ்ரீராமக்ருʼஷ்ணாய நம:" போன்ற நாமாவளிகளும் உள்ளன. எனவே தத்துவமறிந்த ஒரு ஆன்ம சாதகர் உணர்வுபூர்வமாக தனது ஆசார்யரை முருகனாவும், சிவனாகவும், கிருஷ்ணராகவும், தேவியாகவும் பாவனை செய்து வழிபடுவது என்பது மனிதரை வணங்குவது, Hero Worship வகையிலானது அல்ல, அது நிகழும் தளம் வேறு.
அந்தக் கருத்தாக்கம் தியானமாகவும், ஸ்தோத்திரமாகவும் வெளிப்படுவதில் நடைமுறை பிரசினைகள் ஏற்படுவதில்லை, ஏனெனில் அது சிஷ்யருடைய தனிப்பட்ட ஆன்மீக வெளிக்குள் நிகழ்கிறது. ஆனால், அதுவே நேரடியாக படங்களிலும், விக்ரஹங்களிலும், அலங்காரங்களிலும் அப்பட்டமாக, அதுவும் அழகியலுக்கு சற்றும் ஒவ்வாத வகையில் வெளிப்படும்போது, அதில் உள்ள அந்தரங்கமான உணர்வு முற்றிலும் அகன்று அது ஒரு விளம்பரமாக, பாமரத்தனமாக ஆகிவிடுகிறது. பொதுத்தளத்தில் அது அனாவசியமான குழப்பங்களுக்கும் தேவையற்ற கேலிகளுக்கும் இட்டுச் செல்கிறது.
ஆதி சங்கரரைக் குறித்து, "சம்புவே சங்கராசாரியர் என்ற உருவில் உலகில் சஞ்சரிக்கிறார்" (ஶம்ʼபோ⁴ர்மூர்தி꞉ சரதி பு⁴வனே ஶங்கராசார்யரூபா) என்று மாதவீய சங்கர விஜயத்தில் வித்யாரண்யர் குறிப்பிடுகிறார். ஆதிசங்கரர் அஷ்டோத்தரம் முதலானவற்றிலும் இப்போற்றுதல் உள்ளது. ஆனால், எனக்குத் தெரிந்து இந்தியா முழுவதும் உள்ள மிகப்பல ஆதி சங்கராசாரியர் சன்னிதிகளில் எங்கும் ஆசாரியரின் மூர்த்திக்கு ரிஷப வாகனம், நாகாபரணம், பிரதோஷ அபிஷேகம், சிவராத்திரி பூஜை என்றெல்லாம் எதுவும் செய்யப் படுவதில்லை. திருக்கல்யாணம் போன்ற கூத்துகளை கற்பனை கூட செய்ய முடியாது.
மகா தபஸ்வியாகவும் யோகீஸ்வரராகவும் விளங்கிய சிருங்கேரி ஜகத்குரு நரசிம்ம பாரதி ஸ்வாமிகளைப் போற்றும் சுலோகத்தில் "வித்³யாநிதீ⁴ன் மந்த்ரநிதீ⁴ன் ஸதா³த்ம-நிஷ்டா²ன் ப⁴ஜே மானவ-ஶம்பு⁴-ரூபான்" என்று வருகிறது. அவரது மூர்த்தி, படம் விஷயத்திலும் மேற்கண்டபடியான விஷயங்கள் ஏதும் செய்யப்பட்டதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஷீர்டி சாயிபாபா பக்தர்கள் அப்படி செய்கிறார்களே என்றால் அந்த வாதம் அங்கேயே அடிபட்டுப் போகிறது. அந்த பக்தர்களுக்கு சாஸ்திரம், சம்பிரதாயம், விதி ஒன்றும் கிடையாது. அதைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதுமில்லை. வைதிகத்தையும் சாஸ்திர சம்பிரதாயங்களையும் மதிப்பவர்கள் மத்தியில் சாயிபாபா 'கல்ட்'க்கு அதற்கேற்ற மரியாதை தான் உள்ளது. ஆனால் வாழ்நாள் முழுவதும் வைதிக நெறியையும், சாஸ்திர சம்பிரதாயங்களைப் போற்றுவதையுமே வலியுறுத்தி வந்த காஞ்சி பரமாச்சாரியார் விஷயத்தில் இத்தகைய விஷயங்கள் நடக்கும்போது இயல்பாகவே அதன்மீது ஒவ்வாமை ஏற்படுகிறது.
அதிஷ்டானத்தை நிர்வகிப்பவர்களே இத்தகைய விஷயங்களை செய்யும்போது, மற்றவர்களும் அதையே தான் பின்பற்றுவார்கள். இதனை காஞ்சி பரமாச்சாரியாரின் பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை இப்போது வெளிப்படையாகப் பேசவேண்டிய தேவை உள்ளது என்பதால் ஒரு நலம் விரும்புவோனாகக் கூறுகிறேனே அன்றி, அசூயையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல. இதனால் பரமாச்சாரியரின் பக்தர்கள் யாராவது மனம் புண்படுமானால், அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
ஸ்ரீ குருப்யோ நம:

Sri Abhinav Vidyatirtha Mahaswamigal Sri Sringeri Sarada Peetam Jyestha Mahasannidhanam
ஆதி சங்கரர் பிரதிஷ்டை. அதிலும் லிங்கம் பூமி தளத்திலும் விக்ரகம் மேலே பீடத்திலும் உள்ளது. பெஙகளூரில் எங்கள் ஏரியாவில் உள்ள கோவிலில் ராஜராஜேஸ்வரி மேலே பீடத்திலும் சிவலிங்கம் பூமித்தளத்திலும் உள்ளது. வேறு சில கோயில்களிலும் பார்த்திருக்கிறேன். கர்நாடகத்தில் சிவலிங்கம் இப்படி இருப்பது வழக்கமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இது தவறு என்கிறீர்கள். இது தேசாச்சாரத்தில் உள்ள வேறுபாடு என்று தோன்றுகிறது
பெங்களூரில் இன்னொரு கோயில். இங்கும் ஆதி சங்கரர் சிவலிங்கம் அவ்வாறு தான் உள்ளது.
மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக விளங்கும் ஸ்ரீசதுர்மூர்த்தி வித்யேசுவரர் சிலை அமைப்புதான் கர்நாடக வழக்கத்திற்கு சான்று. எல்லாவற்றுக்கும் மேலானது நிஷ்கள சிவதத்துவம் என்பதே இப்படி இருப்பதன் பொருள். ராஜேசுவரி சிவலிங்கம்
அமைப்பு வேறு.



 
திருவாரூர் மாவட்டம் கோவில் வெண்ணி ஊரில் உள்ள வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயிலில் சைவ சமயாச்சாரியர் நால்வரோடு சேர்த்து காஞ்சிப் பெரியவரையும் வரைந்து வைத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment