Monday, July 25, 2022

இளையராஜா கடவுளின் பெயரால் மீது உறுதி மொழியும், திராவிடியார் நாசிய வன்மமும் சட்ட நிலையும்

 இளையராஜா பதவியேற்பும் அம்பேத்கரின் வாதமும்:

 இந்தியாவின் முதன்மை பதவியான ஜனாதிபதியாக கடவுளின் பெயரால் பதவியேற்ற பழங்குடி ஜாதி சமூகப் பெண்

அம்பேத்கர் கண்ட காட்சியை மெய்பிக்கும் பாஜக மோடி அரசு


 இளையராஜா மீது வைப்பதெல்லாம் ஒரு விமர்சனம் என்று அதற்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வளவு பெரிய பதிவு தேவையில்லை. இருந்தும் மிக சிறப்பான பதிவு
 
Aravindan Kannaiyan அவர்களின் பதிவு A B Rajasekaran

இளையராஜா அழுத்தமாக “கடவுளின் பெயரால்” என்று உச்சரித்து ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்றிருக்கிறார். அவர் ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ளவர் என்பது உலகறிந்தது. தன் நம்பிக்கையின் வழியே அரசியல் சட்ட அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட உறுதிமொழியை ராஜா எடுத்திருக்கிறார். இதில் சர்ச்சைக்கே இடமில்லை என்றாலும் சிலர் இதிலும் குற்றம் கண்டு பிடிக்கிறார்கள். எதேச்சையாக ஒரு வாரம் முன்பு தான் அபினவ் சந்திரசூட்டின் (Abhinav Chandrachud) “Republic of Religion: The Rise and Fall of Colonial Secularism in India” படித்தேன். அதில் ஒரு அத்தியாயமே இந்த உறுதிமொழியில் கடவுள் இடம் பெற்ற வரலாறு சொல்வது.

காலனி ஆட்சிக் காலத்தில் நீதிமன்றத்திலும் இன்ன பிற இடங்களிலும் பொய் சொல்லாதிருக்க சாட்சி சொல்வோர் ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப் பட்டவர்கள் என்று நிரூபிக்கும் வழக்கம் உருவானது. சந்திரசூட் அந்த வழக்கத்தின் இங்கிலாந்து மரபு, அதன் வரலாறு எல்லாம் விவரிக்கிறார். சுதந்திர இந்தியாவில் அரசியல் சாசனத்தில் கடவுளை குறிக்கும் எதுவுமில்லை என்றும் அது ஏற்புடையதல்ல என்றும் எச்.வி. காமத் வாதிட்டார். குறிப்பாக ஜனாதிபதியின் பதவியேற்பு உறுதிமொழியில் கடவுள் பற்றி சேர்க்க வேண்டுமென்றார்.

காமத்தின் தீர்மானத்தின் மீது பேசிய அம்பேத்கர் (27 டிசம்பர் 1948) இங்கிலாந்து வரலாற்றில் இருந்து 1880-களில் சார்லஸ் பிராட்லா (Charles Bradlaugh) உறுதிமொழி எடுப்பது பற்றி உண்டாக்கிய சர்ச்சையை மேற்கோள் காட்டி (இங்கிலாந்தின் வரலாற்றை அம்பேத்கர் விரல் நுணியில் வைத்திருந்தார் எனலாம்) சொல்கிறார்: “ஜனாதிபதி கடவுளை வழிக்காட்டுபவராக நினைத்து அவர் பெயரால் உறுதிமொழி எடுத்தால் தான் தான் ஏற்கும் பதவியின் தார்மீக கடமைக்கு உண்மையாக இருக்க முடியுமென்று நினைத்தால் அப்படி உறுதி மொழி ஏற்கும் சுதந்திரத்தை அளிக்க வேண்டும். வேறொருவருக்கு கடவுள் வழிக்காட்டி அல்ல என்றால் அவருக்கும் அவர் விருப்படி உறுதி மொழி எடுத்து பணியாற்ற இடமளிக்க வேண்டும்”

ஏன் உறுதி மொழித் தேவை என்றும் அம்பேத்கர் தெளிவாகப் பேசியுள்ளார். ஒரு ஜனாதிபதியின் கடமைகளில் சட்டத்தின் படி ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கின்றன, அதனை மீறினால் சட்டப்படி தண்டனையும் உண்டு. ஜனாதிபதிக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட தார்மீக கடமைகளும் இருக்கின்றன அந்த தார்மீக கடமைகளில் தவறினால் பதவியிலிருப்போர் சட்டத்துக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று கட்டுபடுத்தும் என்பதை உணர்த்தவே இத்தகைய உறுதி மொழி என்கிறார். உடனே பகுத்தறிவாளர்கள் “ஆகா அது என்ன ‘சட்டத்துக்கு அப்பாற்பட்ட’?” என்று குதிக்கக் கூடாது. ஒரு உறுதிமொழி புனிதமானது, கட்டுப் படுத்துவது, கடமையை உணர்த்துவது என்ற மரபு இன்றும் எல்லா ஜனநாயகத்திலும் புழக்கத்தில் இருக்கிறது. அந்த ஜனாதிபதி உறுதிமொழி ஏற்பு தான் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் உறுதிமொழிக்கும் முன் மாதிரியானது.

சந்திரசூட்டின் புத்தகம் சுவாரசியமான தகவல்கள் அடங்கியது. இந்திய உறுதிமொழி அமைப்பில் முக்கியப் பங்காற்றியது பிராமணரின் காலைத் தொட்டு கும்பிட்டு சாட்சியளித்த சீக்கியர் ஒருவரின் வழக்கம். கங்கை நீர் உறுதிமொழிக்கு நீதிமன்றத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாரதியின் சீடர் கனகலிங்கம் கூட “என் குருநாதர்” புத்தகத்தில் மதத்துக்கு மதம் உறுதிமொழி எடுப்பது நீதிமன்றத்தில் எப்படி மாறுபட்டதென்று விவரித்திருப்பார். சாதிய வித்தியாசங்களுமுண்டு.
ஆங்கிலத்தில் “God” என்பது இந்தியில் ஈஷ்வர் என்று மொழிப்பெயர்க்கப்பட்டதால் இஸ்லாமியர் “அல்லாவின் பெயரால்” என்று உறுதிமொழி எடுத்து அது வழக்காகி நீதிமன்றம் “அல்லா” என்பது “ஈஷ்வர்” என்பதற்கு நிகர் ஆகவே உறுதிமொழி செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இஸ்லாமியருக்கு அல்லாவின் பெயராலும், திமுகவினர் ‘உளச் சான்றின் படி’ என்றும் உறுதிமொழி எடுக்க எந்த அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறதோ அதுவே இளையராஜா “கடவுளின் பெயரால்” என்று உறுதிமொழி எடுக்கவும் பாதுகாப்பளிக்கிறது. ‘உளச் சான்றின்படி” உறுதிமொழி எடுத்தவரெல்லாம் யோக்கியர்களுமல்ல “கடவுளின் பெயரால்” உறுதிமொழி எடுத்தவரெல்லாம் மத வெறியர்களுமல்ல. ராஜாவின் இறை நம்பிக்கை அவரின் தனிப்பட்ட விஷயம்.

நம் அரசியல் சட்ட அமைப்பின் வாதங்கள் மலிவு விலைப் புத்தகங்களாக மொழிப்பெயர்க்கப் பட்டு விற்கப்பட்டால் எந்த புனைவிலக்கியத்தையும் விட சுவாரசியமாக இருக்கும். எப்பேர்பட்ட வாதங்களும் எதிர் வாதங்களும் அரசியல் சாசனத்தை வடிவமைத்திருக்கின்றன என்று நோக்கினால் அப்போது பங்கெடுத்த அநேகரும் உயரிய பண்பாளர்கள் என்றும் ஆழ்ந்துப் பரந்த அறிவுப் படைத்தவர்கள் என்றும் விளங்கும். இதெல்லாம் அறியாத கூட்டம் தான் இன்று ராஜாவை இதற்காக விமர்சிக்கிறது.

சுட்டிகள்:
ஜனாதிபதி உறுதிமொழி மீதான விவாதம்: https://indiankanoon.org/doc/867558/

பாராளுமன்ற உறுப்பினர் உறுதிமொழி மீதான விவாதம்
https://www.constitutionofindia.net/constitution_assembly_debates/volume/8/1949-05-19#8.87.166 


No comments:

Post a Comment